Saturday, September 30, 2006

கலைமகள் உவப்பவை!


தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடும் தெய்வம்
உய்வமென்ற கருத்துடை யோர்கள்
உயிரி நுக்குயிராகிய தெய்வம்
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்
கைவருந்தி உழைப்பவர் தெய்வம்
கவிஞர் தெய்வம் ;கடவுளர் தெய்வம்.


செந்தமிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்தனம் இவட் கேசெய்வ தென்றால்
வாழி ய்கிதிங் கெளிதென்று கண்டீர்
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன் மேல்
சந்த னத்தை மலரை இடுவோர்
சாத்திரம் இவள் பூசனை யன்றாம்.



வீடு தோறும் கலையின் விளக்கம்!
வீதி தோறும் இரண்டொரு பள்ளி!
நாடு முற்றிலும் உள்ளன ஊர்கள்
நகர்கள் ளெங்கும் பலபல பள்ளி!
தேடு கல்வியிலாததொ ரூரைத்
தீயினுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுதமென் அன்னை!
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.

Thursday, September 28, 2006

நாமகள் வாழ்விடம்


சக்தி வழிபாட்டையொட்டிய ; கலைமகளுக்குரிய இந்த மூன்று நாளும்; "சுந்தரத் தமிழின் சொந்தக்காரன்" பாரதியின் எனக்குப் பிடித்த இந்த எளிமையான தமிழில் அமைந்த பாடல்களை உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன். இவை எவருக்குமே பிடிக்கும், புரியும் பாடலென்பதில் சந்தேகமில்லை.

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்!
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்திருப்பாள்!
உள்ள தாம் பொருள் தேடியுணர்ந்தே!
ஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட்பொருளாவாள்.

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்;
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோதகன்ற தொழிலுடைடைத் தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலுடை யுற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள்.

வஞ்சமற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மானாள்;
வெஞ்சமர்க் குயிராகிய கொல்லர்;
வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்;
வீரமன்னர்பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடும் தெய்வம்;
தரணி மீதறி வாகிய தெய்வம்.


Thursday, September 21, 2006

ஆனை கொண்டான்!!!!






ஆனை கொண்டான்!!!!
ஆம்! அனக் கொண்டா தான் ;உலகில் நீளமான ;நிறைகூடிய ,நீர்வாழ் பாம்பு; தென்னமெரிக்க அமேசன் நதியை அண்டிவாழும் பாம்பு.

Wednesday, September 20, 2006

கற்பகதரு 2


கற்பகதரு 2 தொடர்ச்சி

இனிப் பனையோலையின் பயனைப் பார்ப்போம்.

சுவடி:- ஆதிகாலத்தில்; எழுது பொருளாகப் பனையோலைச் சுவடிகளே; பயன்படுத்தப்பட்டது. இன்றும் பல சங்க இலக்கியங்கள் பலையோலைச்சுவடியாக; பல நூலகங்களில் உண்டு. யாழ் நூலகம் எரிக்கப்பட்டபோது;தேடக்கிடைக்காத பல சுவடுகள் எரிந்தன.பண்டைய தமிழ் எழுத்துக்களுக்கு குற்றிடுவதில்லை.காரணம் ஓலையில் எழுத்தாணியால் குற்றிட்டால் கிழிந்துவிடுமென்பதால் ;குற்றுத் தவிர்க்கப்பட்டதென்பர்.

கால்நடை உணவு:- புல் அருகியுள்ள காலங்களில் பச்சோலை வெட்டிக் கிழித்து மாடாட்டுக்கிடுவர்.

கூரை:- ஓட்டுப் பாவனை வருமுன் இல்லங்கள்; பலையோலை;தென்னங்கிடுகு;வைக்கோல் என்பவற்றால் வேயப்பட்டது.வெப்பவலையமான எங்கள் பிரதேசங்களில்;இக்கூரைகள் மிகுந்த சுவாத்தியமாக அமைந்த தென்பதை அவற்றில் வாழ்ந்து அனுபவித்தோர் இன்றும் கூறக்கேட்கலாம். பலையோலைக் கூரை அதில் தேர்ந்தோராலே நேர்த்தியாக வேயக்கூடியது.

வேலியடைத்தல்:- அன்றைய கதியால் வேலிகளுக்கு; முகமறைப்பாகவும்;பாதுகாப்பாகவும்; பனையோலையோ;தென்னங்கிடுகோ கொண்டு மறைத்தடைக்கும் வழக்கம் உண்டு.இவை செலவு குறைந்தது. கதியாலுக்குப் பதில் பனைமட்டையும் வேலியடைக்க உபயோகிப்பர்.

பன்ன வேலை:- இது பனையோலை ;குறிப்பாகக் குருத்தோலை;நார்,ஈர்க்கு;மட்டை என்பவற்றைக் கொண்டு; வீட்டுக்குத் தேவையான பாவனைப் பொருட்களான பெட்டி;கடகம்;சுளகு;பாய்;நீற்றுப்பெட்டி;தடுக்கு;குட்டான்;உமல்,தொன்னை;
வட்டில்,விசிறி;தொப்பி;கிலிகிலுப்பை என்பவற்றை இழைப்பதாகும். ஈழத்தில் அன்றைய பெண்கள் பங்கேற்க்கும் ,முக்கிய குடிசைக் கைத்தொழில்.

அடுக்குப் பெட்டி:- இன்றைய அடுக்கு அலுமினியம்;எவர் சில்வர்ச் சட்டிகள் போல், அன்று அடுக்குப் பெட்டிகள்;1/2' முதல் 1 1/2' விட்டம் வரை ;சுமார் 1/2' உயரத்தில் ஒன்றினுள் ஒன்று வைக்கக் கூடியதாக இழைக்கப்பட்டவை.ஒரு அடுக்கில் 5 முதல் 10 பெட்டிகள் இருக்கும்...பலவித தேவைகளுக்கும் அவற்றின் அளவுக்கேற்ப்ப பயன்படுத்துவர்.நல்ல இளங்குருத்தோலையில் இழைத்தவை;அதிகம் நனையவிடாமலோ,அல்லது காயவிடாமலோ நிழலில் பாவித்தால்;15 வருடங்கள் கூடப் பிய்யாமல் இருப்பவையும் உண்டு.

அஞ்சறைப் பெட்டி(ஐந்தறைப்பெட்டி):- சுமார் 8"- 10" ,நீள அகலமுள்ள சற்சதுரவடிவான பெட்டி ,இருஅடுக்கு அமைப்பாக இருக்கும்;முதல் அடுக்கு,பெட்டியின் 1/2 வாசி உயரத்துடன் 4 அறைகளாகப் பிரித்திருப்பார்கள்;கீழ்த் தட்டுஅப்படியே இருக்கும்; மேல்தட்டு தனியே எடுத்து கீழ்த்தட்டுள் உள்ளவற்றை எடுக்கலாம்.அன்றைய நாட்களில் சந்தை வியாபாரிகள்;சில்லறைக் காசுக்கு இதைப் பாவித்தனர்; சமையலறையிலும்; பலசரக்குப் பெட்டியாகவும்; ஆயுள் வேத வைத்தியர்கள்; மருந்து காவும் பெட்டியாகவும்;பாவித்தார்கள். இதை 9 அறையுடனும் இழைப்பர்.இன்று காட்சிக்குக் கூட ஒன்று கிடைக்குமோ! தெரியவில்லை.

கொட்டைப்பெட்டி:-இதை வெற்றிலை பாக்கு;புகையிலை பாவிப்பவர்கள்; அதைப் பத்திரமாக வைப்பதற்கு உபயோகிப்பர். இது ஒன்றினுள் ஒன்றை வைக்கக் கூடிய வகையில் 3 அல்லது 4 தட்டையான அமைப்புடைய வாய்திறந்த அமைப்பில்;தனியான மூடியுடன் கூடியது.இடுப்பில் செருகக் கூடிய தட்டையாகவும்;சிறிய அமைப்பிலும் நிறவோலைகளால் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கும்.

மூடு பெட்டி:- சாதாரண பல அளவுப்பெட்டிகளுக்கு பொருத்தமான மூடியும் இழைத்து,மூடியில் பனையீர்க்கால் வசதியாகத் திறந்து மூட கைபிடியும் வைத்திருப்பார்கள்.

வட்டில்:-பழையகாலங்களில் பயணங்களுக்கு, வேலைக்குச் செல்வோர்;சாப்பாடு எடுத்துச் செல்ல,பாவித்த சிறிய மூடியுடன் கூடிய பெட்டி; நல்ல இளங்குருத்தோலையில் மிக நெருக்கமாக இழைத்தது.இலகுவில் இறுக்கம் குறைந்த கறிகள் வெளியேறாது. கழுவிக் கழுவிப் பல காலம் பாவிப்பர்.

சுளகு:- பனையீர்க்காலும்;மட்டையாலும் பின்னுவது; அரைச் செவ்வக வடிவில் புடைப்பதற்கும்; வட்டவடிவில் உணவுப்பொருட்களைக் காயவைப்பத்ற்கும்; பல அளவுகளில் முடைவார்கள்.

கடகம்:- பனையோலை நார் கொண்டிழைப்பது, ஏற்கனவே "சுஜாதா-கடகம்-நான்" ல் விபரமாகக் குறிப்பிட்டுள்ளேன்.

பட்டை:- இளங்குருத்தோலையில் செய்வர்;இது தோட்டத்து இளங்கன்றுகளுக்கு உய்தண்ணீர் ஊற்றவும். கிணற்றில் இருந்து நீர் அள்ளவும் பாவிப்பர்,சுமார் 1 கலன் கொள்ளக் கூடியவையும் செய்வர்.

திருகணை:- கழிவு ஈர்க்கை ஒரு சாண் விட்டமுள்ள வட்டமாகச் சுற்றி; அதற்கு முறுக்கிய ஈர்க்கால் ;மேற்சுற்றுச் சுற்றுவர். பனை,சட்டி,குடம் உருளாமல் இருக்க உபயோகிப்பர்.

உறி:-திருகணைக்கு 3;4 ஈர்க்கில் பின்னிய ;சுமார் 3' நீளமான தொடுப்பு (கயிறு போல்) தொங்குப்படி அமைத்து; சாப்பாட்டுப் பொருட்களை பூனை,நாயிடமிருந்து பாதுகாக்கப் பாவித்தார்கள். (வெண்ணெய் உண்ணும் கண்ணன் படத்தில் பார்த்திருப்பீர்கள்)

உமல்:-பலையோலையில் இழைப்பது; இன்றைய பசுமதி அரிசிப்பை போல் இருக்கும்; அன்று பொருள் காவப் பாவித்தார்கள்.

பிளா:-உடன் தேவைக்குப் பச்சையோலையிலும்;பல காலப் பாவனைக்கு குருத்தோலையிலும்;அரை முட்டைவடிவில் அமைப்பது;கிராமக் கோவில்களில் சித்திரைக் கஞ்சிக்கும்; வயல் வேலை செய்யும் போது சாப்பிடவும் பாவிப்பர்.சுடு சாப்பாடு பச்சையோலையை வேகவைக்கும் போது வரும் வாசமே! அருமையாக இருக்கும்.குருத்தோலைப் பிளா கள்ளுத் தவறணைகளில் வைத்திருப்பர்.

தொன்னை:-பனையோலையில் உடன் பாவனைக்கு இழைக்கப்படும்;சிறு பெட்டிகள்; வழிபாடுகளுக்குப் பாவிப்பது. இந்தோனேசியா,தாய்லாந்து,கம்போடியா போன்ற நாடுகளிலும் வழிபாட்டில் இத் தொன்னைகள் முக்கிய இடம் வகுக்கின்றன.

பறி:-மீனவர்கள் பிடித்த மீனைக் கரைக்குக் கொண்டுவர பாவித்த ஒடுங்கிய வாயுடைய பைபோன்ற அமைப்புடையது.

நீற்றுப்பெட்டி:-பனையோலை,ஈர்க்குக் கொண்டிழைக்கப்படும் கூம்புவடிவுடையது;இதை உணவுப்பண்டங்களை அவிக்க, திரவப் பதார்த்தங்களை வடிக்க உபயோகிப்பர்.

பாய்கள்:- படுக்க உபயோகிக்கும் 5'x7' பாய்கள்; சூடடிக்கப் பாவிக்கும்,பந்தலுக்கு விரிக்கும் 20'x 25' களப்பாய்கள்; பந்திக்கு விரிக்கும் 2'x30' பந்திப்பாய்; பிற்க்கூறிய இரண்டும் முற்றாகப் பாவனையற்று விட்டது.முற்றலோலையில் பனாட்டுப் போட பனாட்டுப்பாயுமுண்டு. ஒரு தடவையே பாவிப்பர்.

தடுக்கு:-பிறந்த குழந்தைகளைக் கிடத்தப் பாவிக்கும் 3'x3'; சிறு பாய்; குறிப்பாக எண்ணெய் பூசிக் காலை இளஞ் சூரியக் குளியலுக்குப் பிள்ளையை இதில் கிடத்துவார்கள்.

தட்டி:-அன்றைய வீடுகளுக்கு ;பாய் ,மட்டை;சலாகை கொண்டு செய்யப்படும் மறைப்பு.

குட்டான்:-பனையோலையில் இழைக்கப்படும்; பொதியாக்கக் கொள்கலன்; இதைப் பனங்கட்டிப் பொதியாக்கத்துக்குப் பயன்படுத்துவார்கள்.3"x6" முதல் 1/2"x1" ;அளவில் கூடச் செய்வார்கள்.

நெட்டி:-அளவாக வெட்டிய பனையோலை; கரண்டிகள் போல் சுடு களி உண்ணப் பயன்படுத்துவர்.

விசிறி,தொப்பி, கிலுகிலுப்பை:- முழு வடலி ஓலையில் விசிறி செய்வார்கள்; வார்ந்த ஓலையால் தொப்பி சிறுவர் விளையாடக் கிலுகிகுப்பை இழைப்பார்கள்.

விளக்குமாறு:- கழிவு ஈர்க்கினால் செய்யப்படும்;அன்றைய சமையலறை;இருந்து கூட்ட இச்சிறிய விளக்குமாறு மிக உதவியது.

இவை நான் கண்ட, அறிந்த பனையோலையின் பயன்பாடுகள். வேறும் இருக்கலாம். தெரிந்தவர் அறியத்தரவும்.இறுதிப் பாகத்தில் மரத்தில் உபயோகத்தைப் பார்ப்போம்.