Friday, October 27, 2006

உன்னுடைய வேல்....உறு துணை.....


உன்னுடைய வேல்....உறு துணை.....

உன்னுடைய வேலொன்றே...உறுதுணையாய் வருகிறது.....
கும்மிருட்டுப் பாதையிலும் கோலாகத் தெரிகிறது.....

என்னுடைய ஆட்டமெல்லாம் நீ..அமைத்த மேடையிலே.......
இசைவதுவும் அசைவதுவும் நீ...காட்டும் யாடையிலே....

பன்னிரு தோள்கள் எனும் பரந்தவெளி பறந்துவர....
சின்னமனச் சிறகதுதான் சிறிதேனும் பயின்றிடுமோ....

தென்பழனிச் சண்முகத்தின் தேன் முகத்தைக் காண்பதற்கு...
என் முகத்தில் அமைந்திருக்கும் இருவிழியால் இயன்றிடுமோ....!

பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன்,,,,எழுதியவரைத் தெரியவில்லை.

கந்தனுக்குகந்த கந்த சஷ்டியில் இப்பாடலைக் கேட்பதோ படிப்பதோ மனநிறைவைத் தரும்....

இது இலகுதமிழில் அமைந்த உன்னதமான பாடல்....இப்பாடலைப் பிரியமுடன் கேட்பேன்.

கேட்கும் போதெல்லாம் எனக்கு இரு கந்தரலங்காரப் பாடல்கள் நினைவுக்கு வரும்....

விழிக்குத் துணை திரு மென்மலர்ப்பாதங்கள்..மெய்மைகுன்றா....
மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் - முன்புசெய்த
பழிக்குத் துணை அவன் பன்னிருதோளும் பயந்ததனி...
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!!!!

இருட்டுப்பாதையிலும் ,குருட்டுப் பார்வையிலும் கோல் போல் நம் வாழ்வில் வேலவன் வேல் துணை என்பதனை சொல்வதில், கந்தரலங்காரத்தின் கருத்தை உள்வாங்கி அழகுற எழுதப்பட்டுள்ளது.

மாயோன் மருகனை மன்றாடி மைந்தனை வானோர்க்கு
மேலான தேவனை மெய்ஞ்ஞானதெய்வத்தை மேதினியில்
சேலார் வயற் பொழிற் செங்கோடனைச் சென்று கண்டு தொழ
நாலாயிரம் கண் படைத்திலனே அந்த நான்முகனே..!

இக் கந்தரலங்காரத்தின் கருத்தையொட்டிய அடிகளாக "தென்பழனிச் சண்முகத்தின் தேன் முகத்தைப் காண்பதற்கு! என் முகத்தில் அமைந்திருக்கும் இரு விழியால் இயன்றிடுமோ!!" என இரு விழி போதாது, நாலாயிரம் கண் வேண்டுமென அமைவது, இப்பாடலைச் சாதாரண தமிழறிவு மிக்கோரும் புரிந்து கொள்ளும்படி உள்ளது.

இப்பாடலின் சிறப்பு.அழகான கர்நாடக இசை மெட்டில் இசையமைத்து, சொல்லுக்குயிரூட்டும் சீர்காழியாரின் உச்சரிப்பில் பாடல் மனம் கவர்கிறது.

சீர்காழியார் என் சிந்தைகவர்ந்த பாடகர், நம் இசையில் எனக்கு லயிப்பை ஏற்ப்படித்தியவர்.இப்பாடலை நீங்களும் musicindiaonline.com இணையத் தளத்தில் கேட்டு ரசிக்கலாம்.http://www.musicindiaonline.com/music/carnatic_vocal/m/artist.19/பாடலைத் தரும் தொழில் நுட்பம் எனக்குத் தெரியவில்லை."கந்தன் கருணை" கிட்டட்டும்.

Wednesday, October 11, 2006

நியூயோர்க் கட்டிடம் ஒன்றை விமானம் மோதியுள்ளது

நியூயோர்க் கட்டிடம் ஒன்றை விமானம் மோதியுள்ளது; சிறு ரக விமானம் ஒன்று;இது பயங்கரவாதத் தாக்குதல் இல்லையெனக் கூறப்படுகிறது. இன்று மாலை நடந்துள்ளது;இப்போதும் எரிந்து கொண்டிருக்கிறது.

Monday, October 09, 2006

ஒரு தடியில்.... இருமலர்கள்..... இரு கலரில்!!





என் வீட்டுப் பல்கனியில் ஓர் "நாலுமணிப்பூ " மரம்;அது ஓரே கிளையில் இந்த இரு நிறப் பூ பூத்துள்ளது. இந்த விதையை என் நண்பர் வீட்டில் எடுத்தேன். அவர்கள் வீட்டில் மஞ்சளும்; நாவலும் எனத் தனிமரங்களாகவே இருந்தன.
இப் பூமரத்தை ஈழத்தில் மாலை நாலுமணிக்குப் பூப்பதால் ;"நாலுமணிப்பூ" எனும் காரணப் பெயர் கொண்டே அழைப்போம்.
தமிழகத்தில் என்ன??பெயரில் அழைக்கிறீர்கள்????தெரிந்தவர் கூறவும்.இதன் தாவரவியல் பெயரும் யாருக்கும் தெரிந்தால் கூறவும்.

Thursday, October 05, 2006

கவரிமா! வள்ளுவர்.......கவரிமான் நாம்......




"மயிர் நீப்பின் வாழாக் கவரி மாவன்னா
ருயிர் நீப்பர் மானம் வரின்!" -வள்ளுவர்


அதிகாரம்: மானம் குறள் இலக்கம்: 969

பரிமேலளகர் உரை -விசா பப்ளிக்கேசன்ஸ் வெளியீடு

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் - தன் மயிர்த்திரளின் ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாத கவரிமாவை ஒப்பர். மானம் வரின் உயிர் நீப்பர் - உயிர் நீக்கத் தான் மானம் எய்தும் எல்லை வரின்; தாங்காது இறப்பர்.

கருத்துரை: தன் மயிர்த்திரளிலிருந்து;ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் தம் மானம் அழியக் கூடிய நேரம் வந்தால் அதைத் தாங்காமல் உயிரை மாய்த்துக் கொள்வர்.

கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை உரை- பாரதி பதிப்பகம் வெளியீடு

(மானமுடையவர் தன்மை) தன் உடலின் மீதுள்ள மயிர் தன் உடலைவிட்டு நீங்கினால் உடனே இறந்து போகிற கவரிமானைப் போன்ற மானிகள் மானம் நீங்க நேரிட்டால் உடனே உயிரை விட்டு விடுவார்கள்.

Yak-A species of ox found in Tibet and domesticated there;covered all over with a thick coat of long silky hair; thatof the lower parts hanging down almost to the ground. (CHAMBERS CONCISE 20th CENTURY DICTIONARY)

Yak - a wild ox used for carrying loads over mountainous regions in Tibet and Himalayas.இமாலயப் பிரதேசத்தில் பொதி சுமக்கும் "யாக்" என்னும் ஒருவகை எருது; கவரி எருமை. (The Great Lifco Dictionary)

தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால்;உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்; மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டு விடுவர்.

Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day.

Kural - 969 Like the wild ox that, of its tuft bereft, will pine away, Are those who, of their honour shorn, will quit the light of day. Those who give up (their) life when (their) honour is at stake are like the yark which kills itself at the loss of (even one of) its hairs.- koodal.com-Kural

கௌரவம் படத்திலும்; நீதிபதியான தந்தை; தன்னை மீறிய மகனுக்குச் சவால் விட்டு; தன் மனைவியிடம்" டி நான் கவரிமான் சாதியடி" என ஓர் வசனம் வருகிறது.

கவரிமான் எனும் பெயரில் ஓர் திரைப்படமும் வந்துள்ளது.

"மானம் பெரிது என்று வாழும் மனிதர்களை மான் என்று சொல்வதில்லையா??? என்ற திரைப்பாடலடியும் ;இக்குறளையொட்டி எழுதப்பட்டதே!!!!

வள்ளுவரின் இக்குறளுக்குப் பொருள் எழுதிய பலர்; இந்தக் கவரிமா எனும் இமயமலையை அண்டிய பகுதிகளில் வாழும் மாடு அல்லது எருமை இனத்தைச் சேர்ந்த காட்டு விலங்கை கவரிமான் என ஓர் இல்லாத மான் வகையாக்கியது ;மாத்திரமன்றி.....அதன் வாழ்வியல்பைச் சரியாகப் புரியாமல்; வள்ளுவர் ஏன் ? அவ்விலங்கை உதாரணம் காட்டினார். என்பதனையும் சிந்திக்காமல், மனம் போன போக்குக்கு பொருள்கூறி; அன்று நாம் படித்தது மாத்திரமன்றி!!!;இன்றுவரை தொடர்கிறதென்பதனை விளக்க முற்படுகிறேன்.

விலங்குகளில் ஆர்வமுள்ளவன்; ஐரோப்பா வந்தபின் பல விலங்குகள் தொடர்பான;விவரணச் சித்திரங்களை தொலைக்காட்சியில் பார்த்தவன் என்ற வகையில் அன்று எனக்கு ஏற்பட்ட சந்தேகம் சரியென்பதால் உங்களுடன் பகிர்கிறேன். தங்கள் மேலான கருத்தை வரவேற்க்கிறேன்.

வள்ளுவர் தெளிவாக "கவரிமா" என்று சொன்னதை; எப்படிக் கவரிமானாக்கினரென்பது,புரியாத புதிர்!. மூலத்தில் "கவரிமான் அன்னார்" என இல்லை. தெளிவாக "கவரிமா அன்னார்" எனவே உள்ளது.

முதல் கவரிமா என்பது;மேலே உள்ள படத்திலுள்ள விலங்கு; இது தீபேத்; நேபாளம் போன்ற நாடுகளில் இப்போதும் உண்டு. இந்தியாவிலும் இமயமலைப் பக்கம்;காஷ்மீ ரில் இருக்கிறது. இதன் தோற்றம் மாடு அல்லது எருமை போல் இருக்கும்; உடல் பூராக அடர்ந்த உரோமத்தால் மூடப்பட்டிருக்கும்; காரணம் இதன் வாழ்விடங்கள்; - 40°C மிகக் குளிரானவை. இயற்கை இதற்குத் தந்த பாதுகாப்பு; அடர்ந்த உரோமம்; இவ் உரோமம் நீக்கிலால்; அது குளிர் தாங்காது இறந்துவிடும். ஆனால் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது.

இதன் ஒரு மயிர் அல்லது உரோமம் உதிர்வதால்;நீங்குவதால்; அகற்றப்படுவதால் .....இவ்விலங்கு ஒரு நாளும் இறப்பதில்லை. அத்துடன் விலங்குகளுக்கும்,பறவைகளுக்கும்; மனிதனுக்கும் உரோமம்;இறகு; மயிர் ; நாளாந்தம் சில உதிர்ந்து கொண்டே! இருக்கிறது. இந்த ஒரு சில உதிர்வதால் அவற்றுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. அதனால் இறப்பதில்லை.அதனால் இந்த ஒர் மயிர்;என்பது இந்த உரையில் இருந்து நீக்கப்படவேண்டும்.

இப்படத்திலுள்ள இந்த விலங்கை; மானினமாகக் கொள்ள முடியாது.; மரையினம் கூட இல்லை.

இது மாடு அல்லது எருமையினமே!!! இதைப் பண்டைய தமிழர் "கவரிமா" - என அழைத்துள்ளார்கள்.

கவரி என்பது;உரோமம் ; மயிர் என்ற கருத்துடைய சொல்லாக இருந்திருக்கலாம். "மா" என்பது -விலங்கு;மிருகம் எனும் பொருள்படும். எனவே அடர்ந்த உரோமமுள்ள விலங்கு ;மிருகம் எனும் காரணப்பெயராகவும் இருக்கலாம்.

இதே வேளை "சவரி முடி" என்ற சொல்லைக் கட்டாயம் ,நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அன்றைய பெண்கள் பாவித்த பொய்முடி; இது இலங்கைக்குச் சீனாவில் இருந்து இறக்குமதியானது. என் தாயாரும் கொண்டை போடும் போது(முடி குறைந்த போது) பாவித்தார். கவரிமா- முடியில் செய்தது. அதுவே மருவி "சவரி" யாகியிருக்கலாமெனக் கூறக் கேட்டுள்ளேன்.

என் பாடசாலை வாழ்வில்; நான் ஓர் சராசரி மாணவன்; எனக்கு இந்தக் குறளை விளக்கிய ஆசிரியரிடம்; ஒரு மயிர் விழுந்தால் ; மான் செத்துடுமா??, எனக் கேட்டு "இவர் பெரிய அறிவாளி வள்ளுவரில் பிழை பிடிக்கிறார்" என வாங்கிக் கட்டியது. நினைவுக்கு வருகிறது.ஆனால் இப்போ கூறுகிறேன். இவ்விலங்கு பற்றிச் சரியான புரிதல்;அறிதல் இன்மையால்;இக்குறள் பற்றி மிகத் தவறான விளக்கமே தரப்பட்டுள்ளது.

இது பற்றி உங்கள் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.
கவரிமான் இருந்தால் அதன் விபரத்தைத் தாருங்கள்; படத்தைக் காட்டுங்கள்.

Wednesday, October 04, 2006

கற்பகதரு 3 .....இறுதிப்பாகம்



கற்பகதரு 3 .....இறுதிப்பாகம்

இத்தொடரின் இறுதிப்பகுதியாக பனை மரப் பயன்பாட்டைப் பார்ப்போம்.

வாழ்விடங்கள்:-வீடு, முதலான கட்டிடங்களின் கூரைகளின் மரப்பகுதிகளான வளை;தீராந்தி;;பாவுமரம்;சலாகை என யாவும் பனைமரத்தைத் தறித்து;அளவாக வெட்டிச் சீவி எடுப்பார்கள். 40' நீளமானமரத்தில் சுமார் 25' வைரமானபகுதியாக;பாவுமரமாகவும்;ஏனையபகுதில் சுமார் 10' வைரம் குறைந்த பகுதி சலாகை யாக்கப்படும்.

துலா:- ஓர் முழுமரத்தின் வைரப்பகுதில், துலாச்செய்து அன்று, கிணற்றில் தண்ணீர் அள்ளினர்; நீர் இறைப்பு இயந்திர வருகையின் பின் படிப்படியாக வழக்கொழிந்து போய்விட்டது.

இறங்கு துறைகள்:- குறிப்பாக தீவுப்பகுதிகளில் இறங்கு துறைகள் கல்லாலும் மண்ணாலும் அமைத்தபோதும், அதன் படகுகள் முட்டும் நுனிப்பகுதி;பனைமரத்தாலானதாகவே காணக்கூடியதாக இருந்தது.காரணம் ஏனைய மரங்களிலும் பனைவைரம்;உப்புநீரில் உழுத்துப்போகும் தன்மை மிகக் குறைந்தது.அதனால் நீண்ட காலம் பயனில் இருக்கக் கூடியது.

வண்டில் துலா:-வண்டிலின் அடிப்பாகத்திலமைந்துள்ள நீண்ட நுகத்தடி பொருத்தும் பகுதி; இதுவும் பனை வைரத்திலேயே அமைப்பார்கள்; அதன் உறுதிக்காக.

தேர் சப்பறம்:- கோவில் கட்டுத் தேர்;சப்பற்த்ட்தின் சகடைக்கு மேற்ப்பகுதி;அடிப் பனை வைரங்களாலே செய்யப்பட்டவை, பாவித்தபின் கழட்டி வைப்பர்,அவற்ருக்கு வயதெல்லை இல்லை; நிழலில் இருப்பதால் பலகாலம் பாவனையில் இருக்கும்; நெருப்புத் தவிர வேறு எதிரி இல்லாதது.

பிள்ளைத் தண்டு:- இதுவும் கோவில்களில் விக்கிரகங்களை;விழாக்காலத்தில்;திருவாசியுடன் கூடியருப்பில் வைத்து வாகனங்களுக்கோ;தேருக்கொ சுமந்து வரும் சுமார் 2.5 மீட்டர் நீளமுள்ள பனை வைரத்தில் உருளையாகச் சீவப்பட்டது.சுமார் 200கிலோ நிறை தாங்கக் கூடியது. எந்தக் கோவிலிலும் குறைந்தது ஒரு சோடியாவது இருக்கும்.

மரக்குத்திகள்:-அன்று பாரமான பொருட்களை இடம் பெயர்க்க உருளையாக பனைமரத் துண்டுகள் பாவிப்பர்.

மரவேலை:- குறிப்பாக ஆணிக்குப் பதிலாக பொருத்துக்களுக்குச் சீவிய பனைவைரம் பாவிக்கப்பட்டது.

கொட்டுப்பனை:- எங்கள் நாட்டுப் பச்சைக்கிளிகளும்;மைனாக்களும் தம் பாதுகாப்பான வாழ்விடங்களாகத் தேர்வு செய்தது. இக் கொட்டுப்பனைகளே!!!(இறந்த பனைகள்)

விறகு:- பனையின் சகல பாகங்களும் விறகாகப் பாவிக்கப்படும். ஓலை;மட்டை;பன்னாடை;கொக்கரை;பாளை;மூரி;ஊமல்;பழுதடைந்தமரம்; யாவும் எரிக்க உதவும். எரிபொருட் செலவைக் குறைத்தது.

பசளை:- பனையோலை முதல் அத்தனை பனைக்கழிவுகளும் உழுத்தால்;நல்ல இயற்க்கைப் பசளையே!சுற்றுச் சூழலுக்கு எந்த மாசும் ஏற்படுத்தாதது.விவசாயத்தில் ஈழத்தில் பெரும் பங்கேற்றது. பனைக் கழிவுகள்.


இதுவரை பனையின் மரப்பகுதியின் பயனைப் பார்த்தோம். எனக்குத் தெரியாதது எதாவது இருக்கும் பகிரவும்.இவற்றில் சில பாவனையில் இருந்து அருகிவிட்டன.
ஈழத்தின் போர்ச்சூழல் இதன் அருகலுக்கு முக்கிய காரணியாகிவிட்டது. நகரமயமாக்கலாகும் பனைகள் கண்மூட்டித்தனமாகத் தறிக்கப்பட்டுள்ளன.என்நிலையிலும் புதிய பனைகள் நடுவதற்கான எந்த ஓர் நடவடிக்கையும் இல்லை.
1964ல் ,கிளிநொச்சியில் காடு வெட்டிக் குடியேறிய எனது சொந்தக்காரர்;தங்கள் காணி எல்லைகளில் ;பனங் கொட்டை நட்டனர். அதை 84ல் சென்ற போது சிறுவடலிகளாகக் கண்டேன். 2004ல் சென்றபோது சுமார் 15' மரங்களாக பாளைதள்ளி நின்றன.
மிக நிதானமாக வளரும் மரமாக இருக்கும்; பயனுள்ள இம்மரத்தை ,தென்னையினத்தில் குறுகியகாலப் பயன் இனத்தை உருவாக்கியது போல் ,விவசாய விஞ்ஞானிகள் உருவாக்கிப் பரவவைக்க வேண்டும். இன்றைய ஈழத்தின் போர்ச் சூழலில் இது சாத்தியப்படாது. ஆனால் தமிழகம் முயன்றால், இதை ஓர் இயக்கமாகத் தொடங்கிப் பனைவளர்ப்பை ஊக்கிவித்தால். தமிழகத்தில் பஞ்சம் என்ற சொல் அடிபட்டுப் போய்விடும்.எலிக்கறி உண்ணும் நிலையும் வராது.கஞ்சித் தொட்டியும் வைக்கத் தேவையில்லை .என்றோ ஒருநாள் அமைதி ஏற்ப்படும் போது; அதன் பயனை ஈழத்தவரும் அனுபவிப்பர்.

தமிழர் வாழ்வாதாரமான இம் மரத்தைப் பேண நடவடிக்கை எடுப்பார்களா????

குறிப்பு:- இப் பதிவுகளில் இட்ட படங்கள் யாவும்; தமிழ்நாதத்தில் உள்ள "எழுவைதீவுக் காட்சிகள்" எனும் படத்தொகுப்பில் பிரதியெடுக்கப்பட்டவை. அழகான படங்களை உருவாக்கி யாவரும் பயன்படுத்த உதவிய அன்பர்களுக்கு மனமார்ந்த நன்றி!!யோகன் பாரிஸ்

Sunday, October 01, 2006

கலைமகளும் பாரதியும்



ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லந்த துருக்கம் மிசிரம்
சூழ் கடற்கப் புறத்தில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியில் ஒளிமிகுந் தோங்க!

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்
ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்!
மானமற்று விலங்குகள் ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ!
போனதற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்க்க முயலுவம் வாரீர்!

இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்


நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப் பெருந் தொழில் நாட்டுவம் நாரீர்!

"என் பாட்டுத் திறத்தாலே வையகம் பாலித்திட வேண்டுமென"-பராசக்தியை வேண்டிய பாரதியாரின் எண்ணம்;எழுத்து எல்லாம்; தமிழ்மக்களின் கல்வி எழுச்சியும்; அறிவின் முதிற்சியும் வேண்டுவதாகவே!
இருந்துள்ளது;
கல்வி கேள்விகளில் சிறக்கும் சமுதாயமே! எதிர்கால உலகின் வளர்ச்சியுடன்,தாமும் வளரும் இல்லையேல் தேங்கிவிடும் ,இதற்கு எல்லோருக்கும் கல்வி!
"மீனைப் பிடித்துக் கொடுப்பதிலும், பிடிக்கக் கற்றுக் கொடு" என்ற கோட்பாட்டுடன்;பாரதி நம் சமுதாயத்தின் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களையும் ; கல்வியால் மேம்படச் செய்ய அவர்கள் வறுமை;முன்னெற்றத்துக்குத் தடையாக இருக்கக் கூடாதென்பதால்.......
உணவிலும் கல்விக் கண்ணைத் திறக்க வேண்டியதன் அவசியத்தை ; உணர்த்திப் பாடினார்.
முற்றிலும் இல்லாவிடிலும் தமிழ்ச்சமுதாயம் இப்போ தரணியில்;தன்னை நிலை நிலை நிறுத்தியுள்ளது.
பாரதியின் பெரும் ஆசை " பெண்களின் முன்னேற்றம்" ;அது திறம் பட நடந்தேறியுள்ளது.
இந்த "நவராத்திரி" காலத்தில்- சக்தி உபாசகரான "பாரதி" யையும் நினைவு கூர்வோம்.