Wednesday, January 31, 2007

அமிதாப் பச்சனுக்கு பிரான்சின் உயர் விருது!



டெல்லியில் உள்ள பிரான்சின் தூதராலயத்தில் 27 ஜனவரி 2007; சனிக்கிழமை, பிரஞ்சுத் தூதர் திரு. டொமினிக் யிரா(Mr.Dominique Girard) வால்; பிரான்சின் உயர் விருதான "செவலியே"(chevalier de la légion d'honneur) விருது;
இந்தியாவின் உலகப் புகழ் பெற்ற நடிகர் அமிதாப் பச்சன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற அமிதாப் பச்சன்,"இது முழு இந்தியச் திரைத் துறைக்குக் கிடைத்த மரியாதை" எனக் கூறியுள்ளார்.

இவ் விருது ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் வழங்கப்பட்டதென்பது குறிப்பிடத் தக்கது.


விருது பெற்ற வித்தகரை வாழ்த்துவோம்!


*படம் BBC இல் இருந்து பிரதி பண்ணியது!

Tuesday, January 23, 2007

பிரான்சின் மனிதநேயம் மறைந்தது!





Abbé Pierre அபே பியர்! -ஏழைபங்காளன் .
பிரான்ஸ் வாழும் தமிழர்களில் தொலைக்காட்சி பத்திரிகை பார்ப்போர் கட்டாயம் அறிந்திருக்கும் செல்லப்பெயர்.
சுமார் 60 வருடங்களுக்கு மேலாக தன் வாழ்வை வசதி குறைந்தவர்களுக்காகவும்;வாழ்வில் அல்லலுறுபவர்களுக்காகவும் செலவு செய்த புண்ணியாத்மா!
05- 08 - 1912 ல் லியோன்(Lyon) எனும் நகரில் மிக வசதிபடைத்த குடும்பத்தில் Henri-Antoine Goués எனும் இயற்பெயருடன் பிறந்து; இளம் பிராயத்தில் அல்ஜீரியப் போர், உலகப் போரில் பங்கேற்று இன்னல்களைக் கண்டு; 1938ல் மதகுருவானவர்.அப்பொழுது; தனக்குக் பரம்பரையால் கிடைத்த சொத்துப் பங்கை ஏழைகளுக்கும்;நலிந்தவர்களுக்கும் கொடுத்து தன் பரோபரவாழ்வை EMMAUS எனும் இயக்கமாகஆரம்பித்தார்.
1945 - 1951 Meurthe en Moselle தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகி அரசியலிலும் புகுந்து; சேவை செய்தார்.1954 தையில் பிரான்சில் மிகக் கடும் குளிர் தாக்கி வீடற்ற ஒரு தாயும் சேயும் ;தெருவில் - 20 °c ல் உறைந்து இறந்த கொடுமைகண்டு கொதித்து முழுப் பிரஞ்சு மக்களுக்கும் வானொலி மூலம் வேண்டுகோள் விட்டு; பல கோடி பிராங்குகள் சேர்த்து உடன் நடவடிக்கை எடுத்து வாழ்விடமமைத்து; குறிப்பாக குளிர்காலத்தில் இல்லிடமற்றவர்களுக்கு உணவு உறையுள் கொடுத்துக் காத்தார்.
இதைத் தன் முழு நேரப் பணியாக்கினார்.அப்பபோ அரசாங்கக் கதவுகளைத் தட்டிச் செயல்படச் செய்தார். இதனால் பிரான்சில் சகல மக்களும் அரசும் கூட இவர் மேல் மரியாதை வைத்தது. இவர் கேட்ட உதவிகளைச் செல்வந்தர்கள் செய்யத்தயங்கவில்லை. இவர் நேர்மை ;தனக்கென வாழா ,வேண்டா இயல்பு இவரை பிரான்சின் சிறந்த மனிதராகப் பலவருடங்கள் தெரிவாக வைத்தது.
அரசு கொடுத்த மரியாதைப் பதக்கத்தையும் ; மறுத்து ;அரசு பெரிய வீடமைப்புத் திட்டத்துக்கு உதவியபின்னே பெற்றுக் கொண்டவர். அவர் அதைப் பெற்றது அரசு தனக்குக் கிடைத்த மரியாதை எனக் கருதவைத்தவர்.
80 களில் மித்திரன்(Mittrand) ஜனாதிபதியாக இருந்தபோது;பல லட்சக் கணக்கான வெளிநாட்டவர்களுக்கு வதிவிட உரிமை கொடுக்கக் காரணமான உந்துதல் சக்கியாகவும் இருந்தது இவர் இயக்கமுமே!!90 களில் வீடற்ற,வாழப் போதிய பணவதியற்ற வெளிநாட்டவர்களுக்கு ஆதார சுருதியாக இருந்து அர்பணிப்புடன் செயற்பட்டு;பல நாட்டவர்கள் வாழ்வில் ஒளியேற்றியவர்.
அத்துடன் போதைக்கு அடிமையாகி வீட்டாரால் ஒதுக்கப்பட்ட பலரை; மனிதாபிமானத்துடன் நோக்கி விடுதி அமைத்து அவர்கள் வாழ்க்கையையும் மாற்றி அமைத்து; மறு வாழ்வழித்தை சம்பத்தப்பட்ட பலர் கண்ணீருடன் நினைவு கூர்கிறார்கள்.
இவர் சேவை பல ஈழத்தமிழர்;பாண்டிச்சேரித் தமிழர்கள் பயனடைந்துள்ளனர்.பெரிதாக வெளியுலகுக்குத் தெரியாவிடிலும்; பிரஞ்சு பேசும் நாடுகளில் பெரு மதிப்புக்குரிய மாமனிதர்.
தனக்கென வாழாச் செம்மல். சேவை என்பது என்ன? எனக் கற்பித்தவர் ;தன் 94 வயதில் 22-01- 2007.காலை இறையடி சேர்ந்து விட்டார்.
"இறத்தல் என்பது ஒளியுடன் கலத்தல்" எனக் கூறும் ;இவர் ஒளியில் கலந்து விட்டார்.
இன்னுமொருவர் இப்படிப் பிறப்பதரிது.
கடந்த 20 வருடங்களாக அவர் நேயத்தை இங்கே பார்த்தவனெனும் வகையில் அவர் பெருமையையும்; வாழ்ந்த சேவை வாழ்வையும் உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
அன்னார் ஆத்மா சாந்தியடையும் இதில் ஐயம் இல்லை.




Thursday, January 04, 2007

கனக வாசலிடைக் கொன்றை மரம்...



பொன்பூச் சொரியும் பொலிந்த செழுந் தாதிறைக்கும்
நன் பூதலத்தோர்க்கு நன்னிழலாம் - மின்பிரவை
வீசு புகழ் நல்லூரான் வில்லவராயன் கனக
வாசலிடைக் கொன்றை மரம்.

பொன் பூச் சொரியும் = பொன்வண்ணப் பூக்களை உதிர்க்கும்
பொலிந்து = உதிர்த்து
செழும் தாது இறைக்கும் = அடர்த்தியான மகரந்தத்தைத் தெளிக்கும்
நன் பூதலத்தோர்க்கு = உலகில் உள்ளோர்க்கு
நன்னிழலாம் = நல்ல நிழல் தரும்
பிரவை = ஒளி
மின்பிரவை = மின்னலைப்போன்ற ஒளி
கனகம் = பொன்
வாசலிடை = வாயிலில் நிற்கும்
((சில சொற்களின் பொருள் விளங்காததால் தமிழகத்தில் ஞானவெட்டியான் ஐயாவுக்கும்; ஈழத்தில் தம்பி "ஊரோடி" பகீக்கும் மின்னஞ்சலிட்டதும், பொறுப்புடன் உடன் பதிலிட்டதைச் சேர்த்துள்ளேன். இருவருக்கும் என் மனமார்ந்த நன்றி))

இப்பாடலை ஈழத்தவர்கள் தங்கள் இளமைக் காலத்தில் படித்திருப்பார்கள். இதைப் இயற்றியவர் சிறு கவியாகக் புகழப்பட்ட நல்லூர் சின்னத்தம்பி புலவர்.
இவர் நல்லூரில் பிரபலமான ;செல்வந்தரான வில்லவராயன் முதலியார் மகன். இவர் வீட்டில் அன்றைய நாட்களில் பண்டிதர்கள் ஒன்று கூடி சந்தேகங்கள் தீர்ப்பது; பாடம் நடத்துவது எனக் கலாசாலையாக இருந்ததால் சின்னத் தம்பிப் புலவருக்கு இயல்பாகவே கவி புனையுமியல்பு இளமையிலே உருவாகியுள்ளது.
இதை இவர் தந்தை வில்லவராயன் முதலியார் அறியவில்லை. ஒரு நாள் முதலியார் நண்பர் ஒருவர் முதலியார் வீட்டைத் தேடி வழியில் விளையாடுக் கொண்டு நின்ற சிறுவர்களிடம் கேட்ட போது;ஒரு சிறுவன் மேற்படிப் பாடலைக் கூறியதும்; அந்த அடையாளத்தை வைத்து வீட்டைக் கண்டுபிடித்து; முதலியாருடன் அளவளாவும் போது; பாடலையும் கூறி; ஒரு சிறுவன் தான் இதைக் கூறினான் எனச் சொல்லிக் கொண்டிருந்த போது வீட்டுள் வந்த சிறுவனைக் காட்டி இவன் தான் ;அப்பாடலைப் பாடியது எனக் கூறிய போது; தன் மகன் புலமை அறிந்து தந்தை உச்சி மோந்தார்.
அதன் பின் முறையாகக் கற்று ஈழத்து இலக்கிய உலகில் தனி இடம் பிடித்தார்.
இந்தக் கனகவாசலும்; கொன்றை மரமும் எவ்வளவு பொருத்தமாக அமைந்தது.
முதலியார் செல்வம் கொழிக்கும் சீமான்;எனவே அது கனக அதாவது தங்க வாசல் தான்; கொன்றை மரமும் தங்க நிறப் பூச் சொரியும் மரம் தான்...எவ்வளவு பொருத்தம்.
சிறுவனாயினும் பாடலுக்கு எவ்வளவு அழகு சேர்த்துள்ளார்.
இது எங்கள் ஈழத்து இலக்கியம்.
இக் கொன்றைப்பூ சிவனுக்குகந்தது; அதனால் இம்மரத்தைச் சிலர் திருக்கொன்றை எனவே கூறுவர்.

1- நல்லூர்க் கந்தசுவாமி கோவில் முகப்புத் தோற்றம்
2- திருக்கேதீஸ்வர ஆலய வாயிலில் நிற்கும் கொன்றை மரப்பூ 2004 சித்திரையில் எடுத்தவை