Friday, February 23, 2007

வாகீச கலாநிதி கி.வா.ஜ வும்....மோசம் போதலும்



ழத்திலும்;தமிழகத்திலும் சில தமிழ்ச்சொற்கள்;தொடர்கள் இருவேறு
கருத்துக்களில் புழக்கத்திலுள்ளதை அறிந்திருப்பீர்கள்.

ஈழத்தில் அன்றைய இலக்கிய,சமய விழாக்களுக்கு;தமிழக அறிஞர்களைச்
சொற்பொழிவுக்கழைப்பது வழமை!

அப்படி வருபவர்களில் கலைமகள் ஆசிரியர் வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களும்அடங்குவர்.

"கலைமகள்" சஞ்சிகைக்குஆரம்பகாலத்தில் இருந்து , மறையும் வரை ஆசிரியராக இருந்ததுடன் இன்று வரை இலக்கிய ஆர்வலர்கள் மத்தியில் கலைமகளுக்குத் தனி இடத்தைப் பிடித்துத் தந்த அதன் முன்னாள் ஆசிரியர் மறைந்த தமிழ் இலக்கிய; இலக்கணமேதை;சிறந்த பேச்சாளர் வாகீசகலாநிதி எனப் பட்டமளித்துப் பாராட்டப்பட்ட கி.வா.ஜகந்நாதன் அவர்களாவர்.

இவரை அன்புடன் எல்லோரும் "கி.வா.ஜ " எனவே குறிப்பிடுவார்கள்.

இவரை அன்றைய ஈழத்தில் சமய;இலக்கிய விழாக்களுக்குச் சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு அழைப்பது வழக்கம்.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் சார்பில் பருத்தித்துறைக்குப் பலதடவை அதன்அன்றைய தலைவர் நீதியரசர் சிறீஸ்கந்தராசா அழைத்துள்ளார்.

அப்படி வரும்பொழுது; வட இலங்கைத் தமிழ்ப்பண்டிதர்கள்;அறிஞர்கள்
இவரைச் சந்தித்து உரையாடிச் சந்தேகங்களை நிவிர்த்தி செய்வது வழக்கம்;
இதனால் பல தழிழார்வலர்களை, கி.வா.ஜ வுக்கு; ஞாபகம் உண்டு.

ஒரு தடவை இப்படி,அவர் வந்து தமிழார்வலர்கள் சந்திப்பு நடக்கும் போது; கி.வா.ஜ ;ஞாபகமாக ;அதில் வழமையாகப் பங்கேற்கும்; புலோலியைச் சேர்ந்த பண்டிதர் பற்றி; அவர் ஏன்?பங்குபற்றவில்லை என விசாரித்த போது; அப் பண்டிதர் மகள் சில வாரங்களுக்கு முன் "மோசம் போய் விட்டார்"..... அந்தக் கவலையில் அவர் வரவில்லையெனக் கூற..... கி.வா.ஜ....அதிர்ச்சியுடன் "யார் அந்தச் சண்டாளன் " என்றாராம்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அனைவரும்; கி.வா.ஜ...தவறாகப் புரிந்ததை;
உணர்ந்து...அவருக்கு விளக்கிக் கூறிய போது.
அவர் விபரத்தை அறிந்து; அந்தப் பண்டிதர் வீடு சென்று ;ஆறுதல் கூறினாராம்.
இதை பின் அவரே! தன் ஈழம் பற்றிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.

இப்போதும் தமிழகத்தல் மோசம் போதல் என்பது; ஒரு பெண் ஆணிடம்
கெட்டுப்போதல்(நம்பிக்கை கொடுத்துக் கெடுத்துக் கைவிடுதல்) எனும்
கருத்திலேயே வழக்கிலுள்ளது.

ஈழத்தில் சில பகுதிகளில் இறந்து போதலை; மோசம் போதல் எனக் குறிப்பிடும் வழக்கம் வயதாளிகள் மத்தியில் உண்டு.

இப்படிக் குறிப்பிடும் வழக்கம் தமிழகத்திலுண்டா?

***இயன்றவரை படம் போட்டுப் பதிவு போடவேண்டுமென்று நினைப்பதாலும்; இன்றைய இளைஞர்களுக்கு இவரைப் படத்துடன் அறிமுகப் படுத்துவதற்காகவும். இவர் படத்தை இணையத்தில் தேடி எடுக்கமுடியாமல் இருந்தபோது; நமது பதிவுலகில் விசாரிப்போமென நினைத்துப் சிலருக்கு வேண்டுகோள் விட்டபோது பொறுப்புடன்;பலர் பதில் தந்து தங்கள் இயலாமையை தெரிவித்தார்கள். குறிப்பாகச் சகோதரி செல்வ நாயகி.ஆனால் துளசி அக்கா;சகோதரி வல்லி சிம்ஹன்; தி.ரா.ச அண்ணா(குடும்பப்படத்தை அவர் சகோதரர் மகனிடமிருந்து); சின்னக்குட்டியண்ணர் இந்தப் படங்களைத் தந்துதவினர். அனைவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி!

Wednesday, February 21, 2007

விடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது!!






பரபரப்பான காலை வேளை; போக்குவரத்துச் சந்தடி சத்தம்;
இரண்டு நண்பர்கள் நடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

"ஏய்!...எங்கேயோ..பூனைக்குட்டி கத்துற சத்தம் கேட்குது பாரு"..என்று சுற்று முற்றும் பார்த்தான். ஒரு நண்பன்.

தூரத்தில் நடைபாதையோரத்தில் கல்லிடுக்கில் பூனைக்குட்டி ஒன்று சிக்கியிருந்தது.

நண்பன் சென்று அந்தக் கல்லை நிமிர்த்திப் பூனைக்குட்டியை விடுவித்தான்.
அடுத்த நண்பனுக்கோ ஆச்சரியம்!!

தெருவில் எத்தனை பேர் போய்க் கொண்டிருக்கிறோம். எங்களுக்கெல்லாம் பூனைக்குட்டியின் சத்தம் கேட்கவில்லை.

உனக்கு மட்டும் கேட்டிருக்கிறது. உன் காது ரொம்ப சக்தி வாய்ந்தது தான் என்றான்.

"விடயம் காதிலில்லை;மனிதர்கள் மனதில் இருக்கிறது.என்றான் பூனைக்குட்டியைத்
தூக்கிவிட்ட நண்பன்!

"எப்படிச் சொல்கிறாய்?"

"இப்போ பார்" என்று கூறித் தன் பையில் இருந்த சில்லறைக் காசுகளை;
நடை பாதையில் போட்டான்.

உடனே நடந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

"பார்த்தாயா இதுதான் மனித இயல்பு.காசு என்றதும் காது திறந்து கொள்கிறது" என்றான் நண்பன்.

**மன்னிக்கவும்!
இதை நான் கற்பனை செய்யவில்லை. காலை என் நண்பர் ஒருவர் சென்னையில் இருந்து;
மின்னஞ்சலில் எனக்கு அனுப்பினார்.நன்றாக இருந்ததால் உங்களுடன் பகிரலாமே எனப்
பதிவிட்டேன். அதைக் குறிப்பிடத் தவறி விட்டேன்.
பின்னூட்டத்தைப் பார்த்ததும்! அதைப் குறிப்பிட வேண்டிய அவசியம் உணர்ந்தேன்.
என்ன? இந்த ஆள் இப்படியெல்லாம் யோசிப்பதாவது? அப்படியேன நினைக்கிறீங்களா?

***படம் :நீர்கொழும்புக் கடற்கரை மாலைச் சூரியன்!

Friday, February 09, 2007

GRAMMY- கிராம்மி விருதும் -இந்தியா டுடேயும்





2003 ல் "GRAMMY "-கிராம்மியின் 5 விருது; " நோரா ஜோன்ஸ்" எனும் ஜாஸ் பாடகிக்குக் கிடைத்தது. உங்களில் ஒரு சிலருக்காவது ஞாபகம் வரலாம்.

இந்த நோரா ஜோன்ஸ் உலகக் கீர்த்தி மிக்க சித்தார் வித்தகர் ரவி சங்கருக்கு ; அவர் உதவியாளராக இருந்த ஆங்கிலப் பெண்ணுக்கும் பிறந்த பெண்.

இந்தப் பெண்; அன்று விருது வழங்கும் விழா மேடையில் மறந்தும்;
தன் தந்தையைப் பற்றி வாய் திறக்கவில்லை.

தன் இந்த வளர்ச்சிக்குத் தாயே காரணமெனக் கூறியவர். காரணம் இளமையிலே ரவிசங்கருக்கும்; நோராவின் தாயாருக்கும் மனக்கசப்பாகிப் பிரிந்து விட்டனர்.நோரா இசை கற்றுத் தேறினார்.

இந்த நிலையில் விருது பெற்றார். புகழும் பெற்றார்.

அதை இந்தியா டுடே ; கொண்டாடியது.அட்டையில் போட்டு ஆராதித்தது; முழுத் தமிழருமே இதில் மகிழ்வது போல் ஆர்ப்பரித்தது. எனக்கு சரியாகப்படவில்லை.
இந்தியா டுடே தமிழ்ப் பதிப்பு வந்த காலங்களில் இருந்து படித்தவன்;அவதானித்தவனேனும் வகையில் தமிழ் இசைக் கலைஞர்களைக் கண்டு கொள்ளாத போக்கும்; சினிமாவைத் தூக்கித் தலையில் வைத்தாடுவது; விற்பனை மந்தமாகும் போது; இந்தியர்களில் "செக்ஸ்" வாழ்வு பற்றி; "குஸ்பு" விடம் ஆய்வு செய்து ஆதாயம் கண்டு; நாட்டை அல்லோகல்லப் படுத்துவதுமான பத்திரிகையாகவே இருந்தது. "செக்ஸ்" ஆய்வுக் கட்டுரையென்பது ஆரம்பகாலத்திலே இருந்து இருக்கிறது.ஆனால் குஸ்பு விவகாரத்தின் பின்பே சூடுபிடித்தது.நீங்களும் அவதானித்திருக்கலாம்.
ரவி சங்கர் மகள் என்பதைத் தவிர நாம் அவரைத் தலையில் வைத்தாட என்ன? உள்ளது எனும் கேள்வியும்; தன் தந்தை புகழ் பூத்த
இந்திய இசை மேதை என்று ஒர் இசைக்குப் விருது வழங்கும்
விழாவில் கோடிட்டுக் காட்டாததும்;நோரா நம் எல்லோரையுமே! கேவலப்படுத்தியதாக உணர்ந்ததாலும்;நமது இசைக் கலைஞர்களை
இந்தியா டுடே கண்டு கொள்ளாத போக்கையும் என்ணி; ஆசிரியருக்கு என் மன உணர்வை எழுதினேன்.

அக் கடிதம் மார்ச் 26,2003 இதழில் சுருக்கிப் பிரசுரிக்கப்பட்டது.

அந்த நாட்களில்; நான் "தாரணி சுப்பிரமணியம்" எனும் பெயரிலே தான்; பத்திரிகைகளுக்கு எழுதுவேன்.

ஒவ்வொரு வருடமும் இந்த "GRAMMY" விருது வழங்கல் நடந்தால்; இவர் ஞாபகம்;இந்தியா டுடேக்கு நான் எழுதியதும் ஞாபகம் வரும்.
இவ்வருடம்; 49 வது வருடமாக;இந்த விருது வழங்கும் நாளில் ,அதை உங்களுடன் பகிர்கிறேன்.
*********************************************
1 ம் படத்தில் கிளிக்கினால் கடிதத்தைப் பெரிதாகப் பார்க்கலாம்.
தாரணி சுப்பிரமணியம்
பாரிஸ்13 - 03 - 2003

ஆசிரியர்
இந்தியா டுடே

கனம் அசிரியர் அவர்கட்கு!
தங்கள் மார்ச் 12 இதழில் "நோரா ஜோன்ஸ்" ;விருதுகள் பற்றி எழுதிக் குதூகலித்துள்ளீர்கள்.
இதன் மூலம் ஒட்டு மொத்த இந்திய சமூகத்தையும் கேவலப்படுத்தியுள்ளீர்கள்.
அந்தப் "பாடப் பிறந்த குயில்" தவறியும் விருது பெறும் விழாவில் தன் தந்தை "ரவி சங்கர்" பற்றிக் குறிப்பிடவில்லை.
இத்தனைக்கும்அவர் ஓர் இசைமேதை ஆனால்; ஏன்? நீங்கள் குதிக்கிறீர்கள் என்பது தெரியவில்லை.

அவர் "எந்த இந்திய மொழியில் பாடிவிட்டார்?";எந்த இந்திய இசையை இசைத்து விட்டார்?" அவர் பிறக்கஓர் இந்தியர் காரணமாக இருந்த தென்பது தவிர என்ன? இந்தியத் தன்மை அங்கே பளிச்சிட்டதெனக்கூத்தடிக்கிறீர்கள்.உங்களைத் திருத்தவே முடியாதா?

ஆஸ்கார்;கிராமி விருதுக்குழுவில் உள்ளவர்களுக்கு ,இந்தியத் தன்மை பற்றித் தெரியுமா? தெரிய என்றாவது ஆசைப்பட்டர்களா? ஏன் இவற்றுக்கு ஏங்குகிறீர்கள்; அதை ஓர் இந்திய வேர்நுனியோ;துளிரோபெற்றுவிட்டால்,ஏன் ஆட்டம் போடுகிறீர்கள்.

இந்திய இசைக்காகவே வாழ்ந்து மறைந்த நாதஸ்வரச் சக்கரவர்த்திகள்;ஷேக் சின்ன மௌலானா; நாமகிரிப்பேட்டை கிருஸ்ணன் போன்றோர் மறைந்தபோது; மறந்து விட்டீர்களே! அட்டையில் போட்டுஒவ்வொரு இந்தியரும் ஆராதிக்க வேண்டிய " பாரத ரெத்தினங்கள்" அவர்கள்.

உங்களுக்கு இந்திய இசையுணர்வே இல்லையா? அதற்கு நிகரானது..எதுவுமில்லை அவர்களே! ஒப்புக் கொள்கிறார்கள்.
ஆனால் நீங்கள் இன்னும் "சுதந்திரம்" பெறவில்லை. அதனால் உண்மையை மறுக்கிறீர்கள்.

திருந்துவீர்களா?

"நெஞ்சு பொறுக்குதில்லையே! உங்களைப்போல் நிலை கெட்ட மனிதரை நினைத்தால்!"

தங்களை மதிக்கும்
தாரணி சுப்பிரமணியம்.
**************************************************************************************

Wednesday, February 07, 2007

பிடிக்காதெனினும்; இது பிடித்தது!!

முதல் வேலை!

என்ன இது வேலை!
எனக்குப் பிடித்தவாறு
உடையணிய உரிமை தர மறுக்கும் வேலை!

என் தாய் மொழி!
என் நாவில்
எட்டிப் பார்க்கக் கூடத் தடை போடும் வேலை!!

போலியான புன்னகையொன்றை
நிரந்தரமாய்
என் முகத்தில்;ஒட்டிவிட்ட வேலை!

சரித்திரம் படைக்கவேண்டும்!
புரட்சியாய்ப் புறப்படவேண்டும்!
தேசத்தை நிமிர்த்தவேண்டும்!
எனும் கனவையெல்லாம்
கம்யூட்டரில் கட்டிப் போட்டவேலை!

காந்தி விரட்டியவெள்ளயன்
இரவில் நித்திரை காண
என் நித்திரை
கலைக்கும் வேலை!

இங்கே கற்றதையும்,பெற்றதையும்
வெளிநாட்டு டாலருக்கு
அடகு வைத்துவிட்ட வேலை!

குவியலாய் இறுகிப் போன
இந்த வெறுப்பையெல்லாம்
சுக்கு நூறாய் சிதறடித்தது
"இரு துளி கண்ணீர்"!

"ரொம்பச் சந்தோசமா இருக்கடா"
முதல் மாத சம்பளத்தை நீட்ட;
தாயின் கண்ணில் தோன்றிய
"ஒரு துளி!!

"ரொம்ப கஸ்டமா இருக்குடா"
வெகு நாளாய் வேலை தேடும்;
நண்பனின் கண்ணில் தோன்றிய
"மற்றொரு துளி!

கெ.கார்த்திக் சுப்புராஜ்



இதை சென்னையிருந்து சிவா எனும் ;நண்பர்
அனுப்பியிருந்தார்.


சொல்லப்பட்டவை! உண்மையே!

சிவா ;இத்துறை சார்ந்தவர் அனுபவித்துள்ளார்.

நீங்களும் சொல்லுங்கள்!

Saturday, February 03, 2007

எம் தமிழும் இத்தாலிய மத குருவும்.

எம் தமிழுக்குத் தொண்டு செய்த தமிழ்ச் சான்றோர் பலர்..இவர்கள் தவிர மேல்நாட்டறிஞர்களும் தமிழின் தொன்மையாலும்;இனிமையாலும் கவரப்பட்டு; இலக்கியப்பணி புரிந்து;தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார்கள்.இவர்கள் அனைவர்களிடையேயும் அந்நிய நாட்டில் பிறந்து;வளர்ந்து; படித்து தமிழின் செழுமையைக் கேள்விப்பட்டு,தமிழகம் வந்து தமிழைக் கற்று ;தமிழ்ப் பண்பாட்டை அறிந்து;தமிழராக வாழ்ந்து பெருமை சேர்த்தவர் "வீரமாமுனிவர்" எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI) பாதிரியார் எனும் இத்தாலிய கத்தோலிக்க மதகுரு.

4 நூற்றாண்டுகளுக்கு முன் கிருஸ்தவப் பாதிரியாராக ;தமிழகம் வந்த பெஸ்க்கிப் பாதிரியார்; தமிழ்பால் ஈர்க்கப்பட்டு தமிழுக்கும்;தமிழருக்கும் அரிய சேவையாற்றினார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன் ;இயேசுக் கிறிஸ்துவின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது; இவர் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

இத்தாலியில் உள்ள காஸ்திலியோனே எனும் கிராமத்தில் 1680; நவம்பர் 8 ம் திகதி பிறந்த இவருக்குப் இயற்பெயர் ஜோசப் கான்ஸ்டன்ட் பெஸ்கி (BESKI). இளமையிலே மிகுந்த அறிவுடையவரான ;இவர் முறையான பள்ளிக் கல்வியில்லாமலே இத்தாலிய மொழியை தவறின்றிப் பேச எழுதக் கற்றுக்கொண்டார். இவர் திறன் கண்டு ஆசிரியர்களே வியந்தனர்.

இளமையிலே எளிய வாழ்வை விரும்பிய இவர்; இறையுணர்வு
மிக்கவராக இருந்து; 18 வயதில் ஜேசு சபையில் சேர்ந்தார்.உலக மொழிகள் கற்கும் ஆர்வத்தால் 30 வயதினுள்; கிரேக்கம்;லத்தீன்;போத்துக்கீச;பிரன்சிய;ஜேர்மன்;ஆங்கிலம்; ஈரானிய மொழியுட்பட 9 மொழிகளில் தேர்ச்சியுடையவராகி அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

ஜேசு சபையில் இருந்ததால் அபாரமான பேச்சாற்றல் மிக்கவராகவிருந்து; தன் அறிவு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டுமென்பதால் 5 வருடங்கள் இலக்கண ஆசிரியராகக் கடமைபுரிந்து; அதிலும் திருப்தியின்றி 4 ஆண்டுகள் கிருஸ்தவ வேதாகமத்தைக் கற்று மதகுருவாக திருநிலைப் படுத்தப்பட்டார்.

வியாபார நோக்கில் பொன்;மணி; கனி,கிழங்கு தேடிவந்த ஐரோப்பியர்;இந்தியா இவற்றுடன் கலையும்,பண்பும்;அறிவும் மலிந்த தேசம் என்ற கருத்தைப் பரப்பினர். "கலை மலிந்த பாரதமென்பது"இத்தாலியரைக் கவர்ந்தது; குறிப்பாக மொழி; கலை ஆர்வமிக்க பொஸ்கிப் பாதிரியாரைக் கவர்ந்ததால்பாரதம் வந்து இவற்றை அறிய வேண்டுமெனத் தீர்மானித்தார்.

இவர் அறிவு ஐரோப்பியர்களுக்குப் பயன்படவேண்டுமென பெற்றோரும்;மதகுருமாரும் விரும்பிப் பட்டங்கள் பதவிகள் கொடுக்க முற்பட்டபோதும்;அவரோ இந்தியக் கலையார்வத்தால் லிஸ்பனில் இருந்துபுறப்பட்டு 1710 யூனில் கோவா வந்து சேர்ந்தார். அந்த நாட்களில் கோவா வெளிநாட்டு வணிகர்கலுடன்; இந்திய மாநில வணிகர்களும் நிறையுமிடமாக இருந்தது.

சில நாட்கள் கோவாவில் தங்கியவர்;எத்தனையோ விதமான இந்திய மக்கள் மொழி,உடை;உணவு என்பவற்றைக் கவனித்து;அவற்றின் வேறுபாடுகளை உற்று நோக்கி; ஒன்றிலிருந்து மற்றதற்கு உள்ளதொடர்பை பல்மொழிப் புலவரான இவர் இலகுவில் உணர்ந்தார்.திராவிட நாகரீகம் ;கலை; பண்பு என்பவற்றையும் புரிந்துகொண்டு; தமிழ்நாடு செல்ல உத்தேசித்து;கோவாவின் சந்தடி மிக்க வணிகச் சூழலிலிருந்து விடுபட ;கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக "அம்பலக்காடு" ஜேசு ஆலயம் வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.

தமிழகம் வந்தவர்; தனக்குச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது போலும்; இம் மண் தெய்வீகம் நிறைந்த மண்ணெனவும் உணர்ந்ததுடன்..;தமிழகம் ஒற்றுமையின்மை;அமைதியின்மை;ஏழைகளுக்குத் தகுந்த கல்வி;சுகாதாரமின்மை போன்ற பல இன்னல்களுடன்; மன்னர்கள் பதவிப்பித்தும்;போட்டி பொறாமையும் கண்டு இவ்வவலங்கள் தீரச் சேவை செய்யத் தீர்மானித்து மொழியைப் பேசப் பழக மக்களோடு மக்களாக வாழவேண்டுமெனத் தீர்மானித்தார்.


அதிஸ்டவசமாக சுப்பிரதீபக் கவிராயரின் நட்பேற்படவே;அதுவே இவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அவரிடம் இலக்கண;இலக்கியம் கற்று; கவி புனைந்து; அல்லும் பகலும் தமிழ்நயத்தில் மூழ்கி; இறைவனை எண்ணவும்;வணங்கவும் ஏற்றது தமிழ்;பக்தியும்;கனிவும் தமிழின் சிறப்புக்கள் எனக் கூறினார்.பன்மொழிப் வித்தகர் பெஸ்க்கிப் பாதிரியார்.

இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றவர். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள்;தேவாரம்; திருப்புகழ்;நன்நூல்;ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.தமிழ் கற்க ஏதுவாக தமிழ்- லத்தீன் அகராதியை உருவாக்கினார்.அதில் 1000தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது.பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். பிற மொழிகளைக் கற்று தாய் மொழியில்லாத மொழிகளுக்கு உறவுப் பாலமமைத்தவர் இவர்.

சுவடிகளுக்குப் புள்ளி வைக்காமலே முன்னாளில் எழுதுவது வழக்கம்.புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும்.மேலும் குறில்; நெடில் விளக்க (அ:அர, எ:எர) என்று "ர" போடுவது வழக்கம்."ஆ" என எழுத 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது.இந்த நிலையை மாற்றி "ஆ,ஏ" என மாறுதல் செய்தவர்.தமிழ் இலக்கிய; இலக்கணங்கள் பண்டிதநடைக் கவிதையாக இருந்தது. மக்கள் அனுபவிக்க முடியவில்லை என்பதனை அறிந்து வசன நடையாக மாற்றியவர்.

1728 ல் ;பாண்டிச்சேரியில் "பரமார்த்த குரு" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது."அதிவிவேகபூரண குருவுக்கு மட்டி;மடையன்;பேதை;மிலேச்சன்;மூடன் என்ற ஐந்து சீடர்கள், "ஆறு தூங்குகிறதா? விழிக்கிறதா? என்று பார்ப்பதும் "குதிரை முட்டை வாங்கச் செல்வதும்" சிரிப்பூட்டும் கதைகள், இந்தக் நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார். பரமார்த்த குருவின் குதிரையை வர்ணித்து இவர் எழுதிய கவிதை இதோ!

"முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிளுக்க

பின்னிருந் திரண்டுபேர் தள்ள - எந்நேரம்

வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம் போம் காதம் வழி"...

இக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைக் பெருதும் கவர்ந்ததால் ;தெலுங்கு;மலையாளம்;கன்னடம் போன்ற தென்னக மொழிகளிலும் வெளிவந்தது.

1738 ல் "தொன்நூல்" என்ற இலக்கண நூலை எழுதியவர்; இதை லத்தீனிலும் வெளியிட்டார்.தமிழ் இலக்கணம் கற்றதால், பண்டைய "நிகண்டுகளை" வரிசைப்படுத்தி, மேல்நாட்டு முறையை மேற்கொண்டு"சதுரகராதி" இயற்றினார்.கற்றவரேயன்றி மற்றவரும் தமிழ்ப்பதங்களுக்கு எளிதான விளக்கம் காணமேல்நாட்டு அகராதித் தொகுப்பே சிறந்ததெனக் கருதிய இவர்.சதுரகராதி என்ற அரியநூலை வெளியிட்டு தமிழகராதியின் தந்தையானார். பெயர்; பொருள்; தொகை; தொடை என்ற நான்கு பிரிவு கொண்டுள்ள "சதுரகராதியில்" ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து; விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் நெடில்;கீழெதுகை;தொடைப்பதம்,அனுபந்த் அகராதி என்ற உட்பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

தமிழாராச்சி மகாநாட்டின் சிற்பியும், பல உலகச் சுற்றுப் பயணங்களைச் செய்து பண்பாட்டு நெறிகளை அறிந்தவரும், ஈழத்தின் தமிழறியருமான தனிநாயகம் அடிகளார்..."தமிழ் உரை நடைக்கு வளர்ப்புத் தந்தையாகிய பெஸ்கி முனிவர், தமிழ் அகராதியாக்கியதன் மூலம் தமிழகராதியின் தந்தையாகிவிட்டார்.இவரியற்றிய "சதுரகராதி" தமிழகராதிகளுள் முதன்மையானது. இவரது "தொன்நூல்" இலக்கண நூல்களிலே சிறப்புடையது. "தேம்பாவணி"யைப் படைத்ததன் மூலம் திருத்தக்க தேவர்;கம்பர்;இளங்கோவடிகள் போன்ற கவிச்சக்கரவர்த்திகளின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார். தேம்பாவணியை மத நோக்குடன் பார்க்காமல் தமிழ் நோக்குடன் பார்த்தால் ,இலக்கிய நயங்களைப் புரிந்து மகிழலாம்.பிற நாட்டு இலக்கியக்கருத்துகளைத் தமிழில், வாசமிகு மலர்களாகக் கோர்த்து, கதம்பமாக இணைத்தளித்துள்ளார்.அந்தக் கருத்துக்களைத் தமிழ்ப்பண்புக்கும், கலையுணர்வுக்கும் நகசு செய்து ஒளியேற்றியிருக்கிறார்." என்றார்.

"தேம்பாவணி" ஜேசு நாதரின் வளர்ப்புத் தந்தையாகிய சூசை நாதரின் வரலாற்றை விரித்துரைக்கும் காவியம்; 36 படலங்களாலும்; 3615 விருத்தப் பாக்களாலும் ஆன கிருஸ்தவ வரலாற்று நூலான இது; தமிழ்ப்பண்பாடும், மரபும் கொண்ட காவியமாகத் திகழ்கிறது.ஜேசுவும்; மேரியும்;சூசை நாதரும் ஊரை விட்டே விரட்டப் பட்டபோது மக்கள் தவிக்கிறார்கள். அவர்களைக் காணாது கலங்கும் மக்கள் மனநிலையை வர்ணிக்கும் முனிவர்....

"மயில்காள் அளிகாள் வரிகாள் சிவல்காள்

குயில்கள் கிளிகாள் கொடிகாள் உரையீர்!

எயில்காள் வனத்தினை யெஞ்சருநலோர்

வெயில் காள மறைந் தென மே விடமே!"

[மயில்களையும்,பல்வகை வண்டுகளையும்;கிளிகளையும் பார்த்துக் கலங்கும் மக்கள் கேட்கிறார்கள்;மேகத்துள் மறையும் சூரியனைப் போல் மறைந்த மூவர் இருக்குமிடத்தைச் கூற மாட்டீர்களா?]

"வரையீர் புனலே மழையீர் வரையே!

விரையீர் அமநாவிரி பூந்தடமே!

கரையீர் மலர்த் கொட சூழ் பொழிலே!

யுரையீர் உயிரின்னுயிருள்ளொளியே!

[மலையை ஈர்த்து விழும் புனலையும்; மேகத்தையீர்த்து மழையாகத் தரும் மலைகளையும்புன்னை முதல் குளிர் பூமரங்கள் சூழ் சோலையே!எம் உயிரிலும் இனியவர்களாகிய மூவர் இருக்குமிடம்சொல்லமாட்டீர்களா?]

இயற்கையை வர்ணிக்கும் இதுபோல் பல பாடல்கள் "தேம்பாவணி" யின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.
காணாமல் போன இயேசு பிரான் காட்சி தருகிறார். அந்த ஆனந்தத்தை வர்ணிக்கும் பாடல்...

"தண்டமிழ் சொல்லுநூலும் சால்பொடு கடந்த வண்ணத்
துண்டமிழ்த் துவப்பினுள்ளத் தோங்குமிவ் விருவர் தம்முட்

பண்டமிழுரைத்ததே போற் பயன்பகர்ந்திளபற்காண

மண்டமிழ் துரும வாவின் மகிழ்வினையுரைப் பாரோ!

[வீணையில் எழும் நாதத்தைப் பார்க்கினும் இனிமை மிக்க தமிழ்ச் சொற்களை உச்சரிக்கக் கேட்கும் போதுஎத்தகைய பேரானந்த முண்டாகுமோ!, அதற்குமதிகமான மகிழ்ச்சியை ஜேசுவைக் கண்டதும் மக்கள் கொண்டனர்.என்பது பாடலின் கருத்து.]

'தேம்பாவணி' மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது.பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த இவரை; தமிழ்ப் புலவர்கள்;"எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே! வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா?என நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி "முப்பது மூன்று கோடி;முப்பதிமூன்று லட்டத்து;முப்பதிமூவாயிரத்து;முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திரங்கள்; சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள் என்றதும்,சபையில் சிரிப்பொலி எழும்பிப்;பலர் முனிவரைப் பாராட்டினார்கள்.
"தேம்பாவணி"யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு "வீரமா முனிவர்" என்ற பட்டம் அளித்து; ராஜரிஷி என்றும் சிறப்பித்தது.

பின், தஞ்சையில் காவிரிக்கரையில் ஏலாக்குறிஞ்சியில் மாதா கோவிலொன்று நிறுவினார். போர்க் காலத்தில் மக்கள் தஞ்சமடைந்ததால் "அடைக்கல மாதா" எனக் கூறப்பட்டார். அந்த மாதாமேல் "அடைக்கல மாலை" எனும் நூல் புனைந்தார்.மதுரையில் பல காலம் வாழ்ந்த வீரமா முனிவரை; மன்னர்கள் அனைவரும் பெருமைப்படுத்தினார்கள்.

ஒரு தடவை புதுக் கோட்டை போர்க்களமானபோது; சந்தாசாகிப்பின் படைகளைப் பற்றி தளபதியிடமே! நேருக்கு நேர் வாக்குவன்மையுடன் நியாயம் கேட்டபோது;தளபதி சேனாதிபதியைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.அந்த இடைவெளியில் உருது மொழி பேசப் பழகி சேனாதிபதியுடன் உருதில் பேசினார். முனிவரது புலமையை மெச்சிய சேனாதிபதி;அந்நாளில் 12;000 ஆண்டு வருமானம் வரும் உக்களூர்;மால்வாய்;அரசூர்;நல்லூர் போன்ற கிராமங்களை முனிவருக்கு மானியமாக வழங்கி "இஸ்மதி சந்நியாசி" என்ற சிறப்புப் பட்டமும் அளித்துக் கௌரவித்தார்.

அத்துடன் சேதமடைந்த ஆலயங்களைத் திருத்த ;வேண்டிய பொருளுதவியும் செய்து, தன் பாட்டனார் பாவித்த தந்தப் பல்லக்கைப் புலவருக்குக் கானிக்கையாக்கினான்.அத்துடன் தன் நாட்டின் கௌரவ திவான் பதவியையும் அளித்து; பல்லக்கில் அரச மரியாதையுடன் உலாவர ஏற்பாடு செய்தான். ஆடம்பரம் விரும்பா முனிவர்; நண்பரின் மகிழ்ச்சிக்காக சில தடவை அப்பல்லக்கில் ஏறினாராம்.

ஆடம்பர வாழ்வில் ஆர்வமற்ற முனிவர், நாளும் ஏழை எளிய மக்களுடன் குடிசைகளில் தங்கி ,எவர் எதைக் கொடுத்தாலும் உண்டு. பனையோலைப் பாயில் படுத்து; மக்களோடு மக்களாக ,வட்டாரம் வட்டாரமாகச் சென்று ,பாரசீகம்;இந்துஸ்தானி மொழிகளைக்கற்று; எங்கே தமிழ் விழா நடந்தாலும் அழைப்பின்றிச் சென்ற தமிழ் யோகி "வீரமா முனிவர்" ,சிவந்த மேனியில் காவியும்;காதில் குண்டலமும்;நெற்றியில் சந்தணப் பொட்டும்,கையில் ராஜ ரிஷிகளின் சின்னமான கோடாரியும்;வெண்தலைப் பாகையும் ,சாந்தி தவளும் முகமாகவும் குடிசையிலே எளிமையாக தமிழகத்தில் 37 ஆண்டுகள் வாழ்ந்து ,கடைசிக் காலத்தில் அம்பலக்காட்டிலுள்ள தேவாலயத்தில் தங்கி அங்கேயே 04 - 02 - 1743ல் இறையடி எய்தினார்.

தமிழ் மண்ணில்,தமிழ்ப் பெயருடன்;தமிழ்ப் பண்பாட்டையேற்று, தமிழராக வாழ்ந்து ,தமிழன்னைக்குப் புகழ் சேர்த்த "வீரமா முனிவரை" அவர் ,நினைவு நாளான இன்று நினைத்துப் போற்றுவோம்.

***ஆவூர்த் தேவாலயத்திலுள்ள வீரமா முனிவர் சிலை***