Thursday, April 12, 2007

புலம் பெயர்ந்த தமிழர்களும் பிள்ளைகளும்...




லகில் தமக்கென ஒரு நாடற்ற தமிழினம்;இன்று விரும்பியோ விரும்பாமலோ...உலகெங்கும் வாழத்தலைப்பட்டுவிட்டது.இதில் ஈழத்தமிழரின் நிலையே குறிப்பிட்டுச் சொல்லும்படியுள்ளது.

ஐரோப்பிய ,அமெரிக்க,ஒஸ்ரேலிய நாடுகளில் வாழும் நம்மவரின் எதிர்காலச் சந்ததியினரின் நிலை என்ன?
என்ற கேள்வி! இப்போ பரவலாக நம்மிடையே ஓர் அச்சவுணர்வை ஏற்படுத்தியுள்ளதெனில் மிகையில்லை.

உலக வளர்ச்சியின் வேகத்துக்கு மொழி,கலை,கலாச்சாரம் ஈடு கொடுக்கிறதா? எமது இளைய
தலைமுறையினர் இதை ஈடேற்றுவார்களா? என்பதே ஆய்வாளர்களுக்கு விடை கிடைக்காத வினாவாகவுள்ளது.

"தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு" அதுதான் ஒற்றுமையின்மை. என்னையும் சேர்த்தே சுயபரிசோதனை மூலம் எழுதுகிறேன்.நாம் எங்கே சென்றாலும் தனித்து வாழப் பழகிவிட்டோம்.

நாட்டில் வேலி,மதில் என்று வாழ்ந்த நாம் இங்கும் எல்லை வகுத்து தண்ணீரில் நெய் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழப் பழக்கப்பட்டு விட்டோம்.

இதை நம் எதிர்காலத் தலைமுறை முற்றாக ஏற்றுக் கொள்வதாகவில்லை.
ஆனால் நம் தனித்துவம் பேணப்பட்டது இதனாலெனில் மறுப்பதற்கில்லை.

இதை மறுப்பதன் மூலம் எமது இளைய சந்ததி நம் தொடர்பிலிருந்து அறுத்தோடப் பார்க்கிறதென்பது உண்மை. ஆனால் அவர்கள் ஓடும் பாதை முற்றாகச் சரியெனக் கூறுமளவுக்கில்லை.

ஐரோப்பிய; அமெரிக்கப் பண்பாடு நேற்றிருந்தது போல் இன்றில்லை. அவர்களே ,அவர்கள் எதிர்காலச் சந்ததி பற்றி அச்சமடைய ஆரம்பித்துவிட்டார்கள்.

இந் நிலையில் இன்று புலம்பெயர்ந்த தமிழ்ப் பெற்றோருக்கு மிகப் பெரிய சுமை தம் பிள்ளைகளில் எதிர்காலம். "அவயத்து முந்தி இருக்கச் செயல்" எனும் வள்ளுவன் வாக்கை ;தாம் எவ்வளவு தூரம் தம் பிள்ளைகளைப் பொறுத்தமட்டில் நிறைவேற்றப் போகிறோம் என்ற அச்சம்.

பிள்ளை வளர்ப்பென்பது" கத்தியில் நடப்பது போல்" என்றார். ஓர் அறிஞர். அன்றைய சூழ்நிலையில் குடும்பத்திற்கு குறைந்தது 5 பிள்ளைகளாவது இருக்கும்; ஒன்றோ இரண்டோ பெயர் சொல்லும் பிள்ளையாகிவிடும்.

இன்று புலம் பெயர்ந்த நாடுகளில் பல காரணங்களாலும் இரண்டுக்குப் பின் வேண்டவே வேண்டாமென ; நம்மவர்களும் ஆகிவிட்ட நிலையில் எல்லோருமே தம் பிள்ளைகள் அவயத்து முந்தியிருக்க என்ற எண்ணத் துடிப்புடன் செயற்படுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.

ஆனால் இதற்காக நம் பெற்றோரில் அனேகர் கைக் கொள்ளும் அதரப் பழைய விடயம்; டாக்டர்;எஞ்சினியர், புறக்டர்...என்ற இந்த மூன்றுக்குள்ளும் தம் பிள்ளைகள் வரவேண்டுமென கொப்பாட்டன் காலக் கொள்கையுடன் இன்றும் ;இங்கும் வாழுவது. இது முன்னேறும் நிலையில் உள்ள இந்தச் சமுதாயத்துக்கு ஏற்புடையதில்லை.

ஒரு வைத்தியனாக வரக்கூடிய பிள்ளையை உயிரைக்கொடுத்தும் வைத்தியனாக்க வேண்டியது பெற்றோர் கடன்.
ஆனால் அந்த வழியில்;எந்த வகையிலும் ஆர்வமற்ற பிள்ளையை வைத்தியனாக்குகிறேனெனப் பெற்றோர் உயிரைக் கொடுத்து கடைசியில் ஒன்றுக்குமுதவாமல்; அவன் "லாச்சப்பயில்" (la chapelle-தமிழர்களின் வியாபார நிலையங்கள் சுற்றியுள்ள ;பாதாளத் தொடர் வண்டித் தரிப்பிடம்) நிற்பது; வைத்தால் குடுமி- மழித்தால் மொட்டை எனும் உப்புச் சப்பற்ற கொள்கை; உவப்புடையதில்லை.

எனவே பிள்ளைகளின் ஆர்வமறிந்து ,அத்துறையில் ஊக்கம் கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை.அது விளையாட்டாக இருக்கலாம்;சங்கீதமாக இருக்கலாம்;கணணியாக இருக்கலாம்; கார் திருத்தலாக இருக்கலாம்; ஏன் முடி திருத்தலாகக் கூட இருக்கலாம்.

பொய் களவின்றி; உடல்;மூளை உழைப்பால் முன்னேறும் எந்தத் துறையானாலும் அவர்கள் ஊக்கமாக உள்ள துறையை ஊக்குவியுங்கள்.

தம் பிள்ளை ஒரு மருத்துவனாக வேண்டுமெனும் ஆசை எல்லாப் பெற்றோரிடமும் உண்டு. ஆனால் தான் ஒரு வைத்தியனாக வேண்டுமெனும் ஆசை எல்லாப் பிள்ளைகளிடமும் இருப்பதில்லை.

இது கசப்பான பொது உண்மை. ஆகவே பிள்ளைகளின் ஆர்வமறிந்து செயற்பட்டு அவர்களைப் பயனுள்ளவர்களாக மாற்ற முற்பட வேண்டியது ;நம் புத்திசாலித்தனத்தில் தங்கியுள்ளது.

நாம் பல மொழி பேசும் நாடுகளில் வாழ்கிறோம்.ஆனால் நாம் தமிழர்கள். இன்றைய மொறீசியஸ் தீவுத் தமிழனுக்கேற்பட்ட மொழி வீழ்ச்சி; இந்த இலங்கைத்தீவுத் தமிழனுக்கு ஏற்படக்கூடாது.

இன்னும் 25 வருடத்தில் உலக வீதிகளில் தமிழ்ப் பெயர்களுடன் தமிழ் தெரியாத தமிழர் உலாவரும் அவலம் இருக்கக் கூடாது.

அதுவும் தனக்கெனத் ஒரு நாடு கேட்ட ஈழத்தமிழரின் சந்ததி உலா வரக்கூடாது. அதற்குப் பெற்றோரே! தம் பிள்ளைகளுக்குத் தாய்மொழி அறிவூட்டத் தகுந்த ஏற்பாடு செய்யவேண்டும்.

எனவே உங்கள் சிறார்களுக்கு வாழும் நாட்டு மொழியுடன் தாய்மொழியையும் ஊட்டுங்கள்.வாழும் நாட்டு மொழியில் இயல்பாகவே முன்னேற வாய்ப்பு அதிகம் எனவே தாய் மொழியில் கூடிய கவனம் செலுத்தவும்.

ஓரளவுக்குத் தாய்மொழிச் சுவையை அவர்கள் உணர்ந்தால்; பின்பு தானே அவர்கள் தொடர்வார்கள்.அந்த ஆரம்ப அறிவை அவர்கள் அறியாத பருவத்தில் அறிய வைப்பதே நீங்கள் தாய்நாட்டுக்கும்; நம் மொழிக்கும் செய்யும் மிகப் பெரிய கைங்கரியம். உங்கள் பிள்ளைகள் அந்நிய மண்ணில் தாய்மொழிப் புலமையுடன் வளர்வது உங்களுக்கே பெருமை.

50 வருடங்களுக்கு முன் என்ன? என அறிந்திராத ஜப்பானிய மொழியை உலகம் தேடி;ஓடிப் படிக்கிறது.நம் தமிழ் மொழிக்குக் கூட இந்த நிலை வரலாம்; எனவே எங்கள் சிறார்களையும் தமிழ் அறிவு பெற்றோராக்குவோம்."

வீதி தோறும் இரண்டொரு பள்ளி" என்றார் பாரதி;நாம் செய்வோம் "உலக நாடுதோறும் நற்றமிழ்ப் பள்ளி" நம் சிறார்க்கு...
நம் தமிழூட்ட இதை மற்ற நாட்டார் நமக்குச் செய்யார். நாமே அதைச் செய்வோம். செய்வோரை ஊக்குவிப்போம்; நம் சிறார்க்காக ;நம் மொழிக்காக..

இவற்றுடன் உலக அரங்கில் எங்கள் இசை,நடனம்;சிற்பம்;ஓவியம் இன்றும் கலாபிமானிகளால் போற்றப்படுவது உண்மை.இந்த ஆர்வமுள்ள உங்கள் பிள்ளைகளின் பொன்னான பொழுதுகளை இப்படியான அழகியல் கலைகளில் லகிக்க வைத்து அவர்களை விற்பன்னர்களாக்காவிடினும்; விசயமறிந்தோராக்குங்கள்.

எல்லோரும் ஜேசுதாஸ் ஆகமுடியாது;சுப்புலெட்சுமியும் ஆகமுடியாது;பொன். சுந்தரலிங்கமும் ஆகமுடியாது; ஆனால் அவர்கள் ஆற்றலை அறிய உணர எல்லோராலும் முடியும்.

அதற்கு விடயஞானம் தேவை. அதை வளர்க்கலாம் அதற்கு நீங்கள் அவற்றில் ஆர்வம் காட்டவேண்டும்.

பாலூட்டும் தாய்; தன் குழந்தையின் மருந்தைத் தானுண்பாள்; ஒவ்வாதவற்றையும் தானுண்ணாள்.

அப்படி; நம் குழந்தைகளைப் பொறுத்தமட்டில் நாம் இருக்கவேண்டும்.நம் வீட்டு வானொலி மூன்று வேளையும் "கல்யாணம் கட்டிக்கிட்டு ஓடிப் போகலாமா" என அழுதால்; நம் பிள்ளைக்கு நம் இசையின் சரளி வரிசை கூட வராது. பாரிசில் நடந்த "அளவெட்டி பத்மநாதனின் "நாதஸ்வரக் கச்சேரியில் பிரபல வானொலி அறிவிப்பாளர்...விமல் சொக்கநாதன் ;நம் பிள்ளைகள் "கொலம்பஸ் கொலம்பஸ்" ஐ (அந்த நாளில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான பாடல்) அறிந்த அளவுகூட பத்மநாதனை அறியவில்லையென ஆதங்கப்பட்டார்.

இது வெட்கப்பட வேண்டிய விடயம்.ஏன் கேவலமும் கூட ;பன்னாடைபோல் நல்லதை வடியவிடும் சமுதாயமாக நாம் மாறி வருவது அருவருக்கத்தக்கது.

கிளிப்பிள்ளை போல் வெறும் சினிமாப்பாடல்களை ஒப்புவிப்பதும்; அந்த நடனங்களென அங்கங்களை அசிங்கமாக வளைப்பதை பார்த்துச் செய்வதுமாக நம் சமுதாயம் மாறிவருவது மிக மிக வேதனை.அதைவிட இதையே பெற்றோரும் இளமை முதல் ஊக்குவிப்பதும் வேதனைக்குரியது.

"செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்" கேள்வி ஞானமே பெரிய கொடை. நல்லதை நீங்கள் கேழுங்கள் உங்கள் பிள்ளைகளும் அதையே தேடும்.

நாமே நம் பிள்ளைகளின் முதலாவது பாடப் புத்தகம்; போர்ப்பந்தரில் பிறந்த மோகன்லால் கரம்சந் காந்தி...உலகம் போற்றும் மகாத்மா காந்தியானது; புத்திலிபாய் என்ற கொண்ட கொள்கையில் எந்த நிலையிலும் தளராமை என்ற வீராப்புக் கொண்ட தாய் எனும் ஆரம்பப் பாடப்புத்தகம்.

வீட்டில் சைவ உணவு உண்பவர்களின் குழந்தைகள் இயல்பாகவே!
அசைவத்தை வெறுப்பது போல்; பெற்றோரின் விருப்பு வெறுப்புகளே பிள்ளைகளில் பிரதிபலிக்கிறது.உங்கள் பிள்ளை என்ன விரும்ப வேண்டுமென நீங்கள் விரும்பிகிறீர்களோ!
அதை நீங்கள் விரும்பத் தொடங்குங்கள்.

நீங்கள் தலைக்குமேலே வளையம் வளையமாக புகைவிட்டுக் கொண்டு பிள்ளைகளைச் சிகரட் பிடியாதே? என்றால் இன்றைய 21 நூற்றாண்டு இளைஞன் பிடித்துப் பார்த்துவிட்டுச் சொல்லுகிறேனெனத் தான் கூறுவான். இளைஞி கூட. எனவே நீங்கள் முன்மாதிரியாக நடவுங்கள்; பிள்ளைகள் பார்த்து நடக்க...

போதைப்பொருட்கள் ;குடி வெறி; கொலை;களவு என ஐரோப்பிய ;அமெரிக்க இளஞ் சமுதாயம் சீரழிவின் விளிம்பில் அல்லற்படுகிறது.

அவர்கள் பொருளாதார வளத்தில் முன்னேறியவர்களாதலால் இவற்றுக்கு ஈடுகொடுக்கிறார்கள். நம் சமுதாயம் அவர்கள் போல் மாறினால் சில ஆண்டுகளிலே காணாமலே போய்விடுவோம்.

எனவே எந்த நிலையிலும் நம் பிள்ளைகளுக்கு இக் கெட்ட பழக்கங்கள் வராவண்ணம்; எப்போதும் அவற்றின் தீமைகளை அறிவுறுத்தி ;இளமையிலிருந்தே வளர்த்து விடுவோமானால் அதுவே பாதி வெற்றி!

நம் தமிழ்ச் சமுதாயத்திற்கு நற்பண்புள்ள அங்கத்தவர்களை உருவாக்குவதே! பெற்றோராகிய நம் மிகப் பெரிய பொறுப்பு.வீரர்களும்; விவேகிகளும் பண்புள்ளவர்கள் மத்தியிலேயே உருவாக முடியும்.எனவே பண்புள்ளவர்களை உருவாக்குவோம். மிகுதி தானே வரும்.


21 நூற்றாண்டுத் தமிழ் இளமைகளே! உங்கள் பெற்ற தாய் மாத்திரமல்ல; தமிழ்த் தாயும் உங்களை நம்பித்தான் உள்ளாள். மறவாதீர்கள் ;அவளைத் தாங்கும் தூண்களே! நீங்கள் தான்...உங்கள் வாழ்வும் வளமும் அவள்தான். எனவே உத்தம புருசர்களாக வளர்வோம்; வாழ்வோமெனச்
சங்கர்ப்பம் பூணுங்கள்.

எந்த துர்ப்பழக்க, வழக்கங்களுக்கும் அடிமையாகாமல்; கல்வியே கருத்தாகக் கொண்டு; உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்! வீணே உண்டு களிப்போரை நிந்தனை செய்வோமென்றுணர்ந்து;உங்கள் ஒளிமயமான எதிர்காலம் உங்கள் கையில் என்பதைப் புரிந்து வாழ்வீர்கள் என நம்புகிறேன்.

(இக் கட்டுரை பாரிஸ் தமிழர் கல்வி நிலைய 12 ஆண்டு விழா மலரில் 03-01- 1999 ல் வெளிவந்தது

Friday, April 06, 2007

ஆடு பாம்பே!! -KING COBRA - OPHIOPHAGUS HANNAH

ஆடு பாம்பே!!

நான் இங்கே இணைத்திருக்கும், ஒலி ஒளி விவரணச் சித்திரங்கள் , உலகிலே மிகப் பெரிய விசப் பாம்பான "இராஜ நாகத்தினது".



இந்த இராஜ நாகம் இந்தியா;தென்சீனா;மலேசியா,பிலிப்பைன்ஸ் மற்றும் தென்கிழக்காசியக் காடுகளில்
வசிப்பது.



இது சுமார் 18.5 அடி (5.7 மீ) நீளமும்; 44 இறாத்தல் (20 கிலோகிராம்) எடையும் உடையதாகவும் ;25 வருடங்களுக்கு மேல் வாழக்கூடிய பாம்பினமாகும்.

இதன் விசம்; நொடியில் கொல்லக் கூடியது. இது படமெடுத்தாடும் போது இதன் உடலின் முக்கால் பகுதி
நிலத்திலிருந்து மேல் இருக்கும். அத்துடன் மிக மூர்க்கமான சீறும் சத்தத்தையும் உடையது.



இந்த இராஜ நாகத்தின் தனித் தன்மையே! இது ஏனைய பாம்பு வகைகளை உண்பது. மலைப்பாம்பு கூட
தப்பமுடியாது
.



அதனால் தான் கிரேக்கில் " OPHIOPHAGUS " அதாவது "பாம்பு தின்னி "எனும் பெயரில் இதை அழைப்கிறார்கள்.


இந்த இராட்சதப் பாம்பை இவர்கள் கையாளும் விதத்தைப் பாருங்கள்.

பாம்பெனில் படையும் நடுங்கும்; ஆனால் சிலர் நடுங்குவதுமில்லை ஒடுங்குவதுமில்லை. அதை இப்படம் தெளிவாகக் காட்டுகிறது.

இக் காட்சிகளை நான் பலதடவை தொலைக்காட்சியில் பார்த்துள்ளேன்.

இதை you tube ல் பார்த்தபோது உங்களுடன் பகிர எண்ணினேன்.

Wednesday, April 04, 2007

அதி உயர் வேகம் 574.8 கிலோ மீட்டர்/மணி




பிரான்சின் தொடர் வண்டி சேவை யான "SNCF " தனது "மிக அதி வேகம் " TGV யின், 26 வருட சேவையில் ; மேலும் தனது வேக விரிவாக்கத்தில்; சென்ற வாரம் உலகில் அதிவேகமான சேவையாக மணிக்கு 574.8 கிலோமீட்டர் வேகத்தை வெற்றிகரமாகக் கடந்து சாதனை புரிந்துள்ளது.

அதாவது வினாடிக்கு 150 மீட்டர்கள்.

1990 ல் இதன் அதி உயர் வேகம் 513.3 கிலோமீட்டர்/ மணி யாக இருந்தது.
இப்புதிய சேவை கிழக்குப் பிரான்சுக்கு முதலும் பின்பு படிப்படியாக ஏனைய பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் பயண நேரம் வெகுவாகக குறையவுள்ளதால்; பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்புள்ளது.
சமீபகாலங்களில் பாதுகாப்புக் கெடுபிடிகளால் ; விமான நிலையங்களில் ஏற்படும் வீண் கால விரயத்துக்குசிறந்த மாற்றீடாகக் கணிக்கப்படுகிறது.

அத்துடன் , ஆரம்ப காலத்திலிருந்து பாரிய விபத்தெதனையும் சந்திக்காது; பாதுகாப்பான சேவை எனப் பயணிகள் மத்தியில் பெயரெடுத்துள்ளதால், மிகுந்த எதிர் பார்ப்புடன் இச்சேவை வரவேற்கப்படுகிறது.