Monday, April 28, 2008

'தமிழுக்கு அமுதென்று பேர்' என்ற பாவேந்தர் பிறந்த தினம் 29-04-1891.



இன்பத் தமிழ்!
தமிழுக்கும் அமுதென்று பேர்!
அந்தத்தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு நிலவென்று பேர்! -
இன்பத்தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு மணமென்று பேர்! -
இன்பத்தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
தமிழுக்கு மதுவென்று பேர்! -
இன்பத்தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -
இன்பத்தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -
இன்பத்தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்!
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -
இன்பத்தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -
இன்பத்தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!

சங்கநாதம்
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
இங்குள்ள தமிழர்கள் இன்றாதல் கண்டே!
திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விளையாடும் உடுக்களோடும்
மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமிழுடன் பிறந்தோம்.
நாங்கள் ,ஆண்மைச் சிங்கத்தின் கூட்டமென்றும்
சிறியோர்க்கு ஞாபகம் செய்
முழங்கு சங்கே! (எங்கள்)
சிங்களஞ்சேர் தென்னாட்டு மக்கள்
தீராதி தீரரென்றூது சங்கே!
பொங்கும் தமிழர்க் கின்னல் விளைந்தால்
சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!
வெங்கொடுமைச் சாக்காட்டில் விளையாடும் தோளெங்கள்
வெற்றித் தோள்கள்!
கங்கையைப் போல் காவேரிபோல் கருத்துக்கள் ஊறுமுள்ளம்
எங்கள் உள்ளம்!
வெங்குருதி தனிற்கமழ்ந்து வீரஞ்செய் கின்றதமிழ்
எங்கள் மூச்சாம் (எங்கள்)
என் பாடசாலை வாழ்விலும் பின் திரைப்படங்கள் வாயிலாகவும் அறிமுகமான
இந்தப் பாடல்களை எழுதிய பாவேந்தர் ,இலகுவில் மறக்கமுடியாத கவிஞர்.
இன்று அவரை நினைவு கொள்வோம்.
பாவேந்தர் பாரதிதாசன் வாழ்க்கைக் குறிப்புகள்
1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.
1895 - ஆசிரியர் திருப்புளிச்சாமி ஐயாவிடம் தொடக்கக் கல்வி. இளம் அகவையிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றார். பாட்டிசைப்பதிலும் நடிப்பதிலும் ஊரில் நற்பெயர் பெற்றார். பத்தாம் அகவையிலேயே சுப்புரத்தினத்தைப் பெற்றதால் புகழ் பெற்றது புதுவை.
1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.
1909 - கல்வி அதிகாரியார் உதவியால் காரைக்கால் சார்ந்த நிரவியில் ஆசிரியப் பணி ஏற்றல்.

1910 - வ.உ.சி.யின் நாட்டு விடுதலை ஆர்வத்தால் கனிந்திருந்த புலவர் - பாரதியார், வ.வே.சு., பர்.வரதராசுலு, அரவிந்தர் போன்றோர்க்குப் புகலிடம் அளித்தல். தம் பெற்றோர்க்குத் தெரியாமல் மேல் துண்டில் வடித்த சோறு கொடுத்தல். ஓரோர் அமையங்களில் செலவுக்குப் பணம் தருதல். காவலர்களின் வேட்டையிலிருந்து தப்ப உதவல். பாரதியாரின் "இந்தியா" ஏட்டை மறைமுகமாகப் பதிப்பித்துத் தருதல். ஆசு ஆட்சித் தலைவரைச் (கலெக்டரைச்) சுட்ட துமுக்கி (துப்பாக்கி) பாவேந்தர் அனுப்பியதே.

1916 - தந்தையார் (23.1.1916) இயற்கை எய்தல்.

1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.

1919 - திருபுவனையில் ஆசிரியராக இருக்கையில், பிரெஞ்சு அரசுக்கு எதிராகச் செயல்பட்டார் என்று குற்றம் சாட்டி ஒன்றேகால் ஆண்டு சிறைபிடித்த அரசு தவறுணர்ந்து விடுதலை செய்தது. வேலை நீக்க வழக்கில் புலவர் வென்று மீண்டும் பணியில் சேர்தல்.

1920 - இந்திய விடுதலை அறப்போராட்டத்தில் பங்கேற்றல், புவனகிரி பெருமாத்தூர் பரதேசியார் மகள் பழனி அம்மையை மணத்தல். தம் தோளில் கதர்த் துணியைச் சுமந்து தெருத்தெருவாய் விற்றல்.

1921 - செப்டம்பர் 19 - தலைமகள் சரசுவதி பிறப்பு (12.11.1921) பாரதியார் மறைவு.

1922 - கே.சு. பாரதிதாசன் என்ற புனைப்பெயரைத் தொடர்ந்து பயன்படுத்தி, தேச சேவகன் "துய்ப்ளேச்சு", புதுவை கலைமகள், தேசோபகாரி, தேச பக்தன், ஆனந்த போதினி, சுதேச மித்திரன் இதழ்களில் தொடர்ந்து பாடல், கட்டுரை, கதைகள் எழுதுதல்.

1924 - சோவியத்து நாட்டு மாவீரர் இலெனின் இழப்பிற்குப் பாடல்.

1926 - சிரி மயிலம் சுப்பிரமணியர் துதியமுது. நூலில் சிந்தைக்குத் தந்தையாதல்.

1928, நவம்பர் 3 - கோபதி (மன்னர் மன்னன்) பிறப்பு. தன்மான (சுயமரியாதை) இயக்கத்தில் பெரியார் ஈ.வெ.இரா.வுடன் இணைதல். தாமும் தம் குடும்பமும் பகுத்தறிவுக் கொள்கையை மேற்கொள்ளல். குடும்பத் திருமணங்களில் தாலியைத் தவிர்த்தல்.

1929 - குடி அரசு, பகுத்தறிவு ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை, கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன்முதல் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புச் பெறல்.

1930 - பாரதி புதுவை வருகைக்கு முன்னும் பின்னும் பாடிய சிறுவர், சிறுமியர் தேசியப் பாடல், தொண்டர் நடைப்பாட்டு, கதர் இராட்டினப் பாட்டு நூல் வடிவில் வெளியிடப்பட்டன. தொடர்ந்து சஞ்சீவி பர்வதத்தின் சாரல், தாழ்த்தப்பட்டோர் சமத்துவப்பாட்டு நூல்களை ம.நோயேல் வெளியிடல். திசம்பர் 10இல் புதுவை முரசு கிழமை ஏட்டின் ஆசிரியர் பொறுப்பேற்றல்.

1931 - புதுவை முரசு (5.1.31) ஏட்டில் செவ்வாய் உலக யாத்திரை - கட்டுரை வரைதல். சுயமரியாதைச் சுடர் என்ற 10 பாடல்களைக் கொண்ட நூலை "கிண்டற்காரன்" என்ற பெயரில் வெளியிடல். (குத்தூசி குருசாமிக்கு இந்நூல் படைப்பு) 18.8.31 இரண்டாம் மகள் வசந்தா (வேனில்) பிறப்பு. பள்ளி ஆண்டு விழாவில் சிந்தாமணி என்ற முத்தமிழ் நாடகம் எழுதி இயக்குதல்..

1932 - "வாரிவயலார் வரலாறு" அல்லது "கெடுவான் கேடு நினைப்பான்" புதினம் வெளியிடல். வெளியார் நாடகங்களுக்கும் தன்மான, பொதுவுடைமைக் கூட்டங்களுக்கும் பாட்டெழுதித் தருதல்.

1933 - ம. சிங்காரவேலர் தலைமையில் சென்னை ஒயிட்சு நினைவுக் கட்டிடத்தில் (31.2.1933) நடந்த நாத்திகர் மாநாட்டில் கலந்து கொண்டு வருகைப் பதிவேட்டில் நான் ஒரு நிலையான நாத்திகன் என்று எழுதி கையெழுத்திடல்.

1933 - மூன்றாம் மகள் இரமணி பிறப்பு.

1934 - மாமல்லபுரத்திற்கு முழுநிலா இரவில் தோழர் ப.சீவானந்தம், குருசாமி, குஞ்சிதம், நயினா சுப்பிரமணியம், மயிலை சீனி.வேங்கடசாமி, மாயூரம் நடராசன், சாமி சிதம்பரனார், எசு.வி. லிங்கம், நாரண துரைக்கண்ணனுடன் படகில் செல்லல். மாவலிபுரச் செலவு - பாடல் பிறந்தது. 9.9.1934இல் இரணியன் அல்லது இணையற்ற வீரன் நாடகம் பெரியார் தலைமையில் நடைபெறல்.(குருசாமி -இரணியன், திருவாசகமணி கே.எம் பாலசுப்பிரமணியன் - பிரகலாதன்)1935 -இந்தியாவின் முதல் பாட்டேடான, "சிரி" சுப்பிரமணிய பாரதி கவிதா மண்டலம் தொடக்கம். இதற்கு ஊறுதுணையாக இருந்தவர் எசு.ஆர். சுப்பிரமணியம். (சர்வோதயத் தலைவர்)

1936 - பெங்களூரில் பதினான்கு நாள் தங்கி (1.4.1936) தேசிங்கு ராசன் வரலாற்றை "அட்கின்சு" குழுமத்தார்க்கு "இசு மாசுடர் வாய்சு" இசைத் தட்டுகளில் பதித்தல்.

1937 -இல் புரச்சிக்கவி -குறுப்பாவியம் வெளியிடல். பாலாமணி அல்லது பாக்தாத் திருடன் திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இதில் நடித்தவர்கள் டி.கே.சண்முகம்-உடன் பிறந்தோர் அனைவரும்.

1938 -"பாரதிதாசன் கவிதைகள்" முதல் தொகுதியைக் குத்தூசி குருசாமி, குஞ்சிதம் குருசாமி வெளியிட்டனர். பொருளுதவி செய்தவர் கடலூர் தி.கி. நாராயனசாமி. தமிழிலக்கியத்திலேயே பெரும் புரட்சியை உண்டாக்கியதால், பெரியார். "தன்மான இயக்கத்தின் பெரும் பாவலர்" என்று பாராட்டினார். மருத்துவர் மாசிலாமணியார் நடத்திய தமிழரசு இதழில் தொடர்ந்து எழுதுதல். "தமிழுக்கு அமுதென்று பேர்" என்ற பாடலை அச்சுக் கோத்தவர் பின்னாளில் சிறப்புற்ற எழுத்தாளர் "விந்தன்".

1939 -"கவி காளமேகம்" திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். இரணியன் அல்லது இணையற்ற வீரன் நூல் வடிவில் வருதல்.

1941 -"எதிர்பாராத முத்தம்" பாவியம் காஞ்சி பொன்னப்பாவால் வானம்பாடி நூற்பதிப்புக் கழகத்தில் வெளியிடல். இதற்கு மேலட்டை ஓவியம் இராய் சவுத்ரி.

1942 - குடும்ப விளக்கு 1 வெளியிடல். இந்தியப் போராட்ட எழுச்சியை மறைமுகமாக ஊக்குவித்தல். இரண்டாம் உலகப் போரை -இட்லரை எதிர்த்தல். பல ஏடுகட்கும் எழுதுதல்.

1943 - பாண்டியன் பரிசு-பாவியம் வெளியிடல்.

1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.

1945 - புதுவை 95, பெருமாள் கோயில் தெரு வீட்டை வாங்குதல். தமிழியக்கம், (ஒரே இரவில் எழுதியது) எது இசை நூல்கள் வெளியிடல்.

1946 - முல்லை இதழ் தொடங்கப்பட்டது. அமைதி, ஊமை நாடகம் வெளியிடல். 29.7.1946 - பாவேந்தர் "புரட்சிக் கவி" என்று போற்றப்பட்டு ரூ.25 ஆயிரம் கொண்ட பொற்கிழியை, நாவலர் சோமசுந்தரம் பாரதியார் தலைமையில் பொன்னாடை போர்த்தி அறிஞர் அண்ணா திரட்டித் தந்தார். தமிழகப் பேரறிஞர்கள் அனைவரும் வாழ்த்திப் பேசினர். 8.11.1946இல் முப்பத்தேழாண்டுத் தமிழாசிரியர் பணிக்குப் பின் பள்ளியிலிருந்து ஓய்வு பெறுதல்.

1947 - புதுக்கோட்டையிலிருந்து "குயில்" 12 மாத வெயியீடு. சவுமியன் நாடக நூல், பாரதிதாசன் ஆத்திச்சூடி வெளியிடுதல். சென்னையில் குயில் இதழ். ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி - திரைப்படக் கதை, உரையாடல், பாட்டு தீட்டல். இசையமுது வெளியிடல். புதுவையிலிருந்து "குயில்" ஆசிரியர் - வெளியிடுபவர் - "கவிஞர் பேசுகிறார்" சொற்பொழிவு நூல்.

1948 - காதலா? கடமையா? பாவியம் முல்லைக்காடு, இந்தி எதிர்ப்புப் பாடல்கள், படித்த பெண்கள் (உரை நாடகம்), கடற்மேற் குமிழிகள் பாவியம். குடும்ப விளக்கு 3, திராவிடர் திருப்பாடல், அகத்தியன் விட்ட கரடி - நூல் வெளியிடல். குயில் மாத ஏட்டிற்குத் தடை, நாளேடாக்குதல், கருஞ்சிறுத்தை உருவாதல்.

1949 - பாரதிதாசன் கவிதைகள், 2-ஆம் தொகுதி சேர தாண்டவம், முத்தமிழ், நாடகம், தமிழச்சியின் கத்தி - பாவியம், ஏற்றப் பாட்டு வெளியிடல்.

1950 - குடும்ப விளக்கு 4, குடும்ப விளக்கு 5 வெளியிடல்.

1951, செப்டம்பர் 15இல் வேனில் (வசந்தா தண்டபாணி) திருமணம். அ. பொன்னம்பலனார் தலைமையில் நடந்தது. அமிழ்து எது? கழைக் கூத்தியின் காதல் வெளியிடல்.அறுபதாண்டு மணிவிழா திருச்சியில் நிகழ்வுறல்.

1952 - வளையாபதி - திரைப்படம், கதை, உரையாடல், பாட்டு, இசையமுது இரண்டாம் தொகுதி வெளியிடல்.

1954 - பொங்கல் வாழ்த்துக் குவியல், கவிஞர் பேசுகிறார் - சொற்பொழிவு நூல் வெளிவரல். குளித்தலையில் ஆட்சி மொழிக் குழுவிற்குத் தலைமை ஏற்றல்.

1954 - மூன்றாம் மகள் இரமணி சிவசுப்பிரமணியம் திருமணம். இராசாக் கண்ணனார் தலைமையில் நடந்தது.

1955 - புதுவைச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றியுற்று அவைத் தலைமை ஏற்றல். சூன் 26இல் மன்னர் மன்னன் - மைசூர் வீ. சாவித்திரி திருமணம். கோவை அ. ஐயாமுத்து தலைமை. பாரதிதாசன் கவிதைகள் மூன்றாம் தொகுதி வெளியிடல்.

1956 - தேனருவி இசைப்பாடல்கள் வெளியிடல்.

1958 - தாயின் மேல் ஆணை, இளைஞர் இலக்கியம் வெளியிடல். தமிழகப் புலவர் குழுவின் சிறப்புறுப்பினராதல். குயில் - கிழமை ஏடாக வெளிவருதல்.

1959 - பாரதிதாசன் நாடகங்கள், குறிஞ்சித் திட்டு பாவியம் வெளியிடல். பிசிராந்தையர் - முத்தமிழ் நாடகம் தொடர்தல். 1.11.1959 முதல் திருக்குறளுக்கு வள்ளுவர் உள்ளம் என்ற உரை விளக்கம் எழுதுதல்.

1961 - சென்னைக்குக் குடி பெயர்தல். "பாண்டியன் பரிசு" திரைப்படம் எடுக்க திட்டமிடல். செக் நாட்டு அறிஞர் பேராசிரியர் கமில்சுவலபில் "செக்" மொழியில் பெயர்த்த பாவேந்தரின் பாடல்களைக் கொண்ட நூலைப் பெறுதல். நடுவர் எசு. மகராசன் நட்புறவு.

1962 - சென்னையில் மீண்டும் குயில் கிழமை ஏடு (15.4.1962). அனைத்துலகக் கவிஞர் மன்றத் தோற்றம். கண்ணகி புரட்சிக் காப்பியம், மணிமேகலை வெண்பா - வெளியிடல். தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இராசாசி பொன்னாடை அணிவித்துக் கேடயம் வழங்கல்.

1963 - தோழர் ப.சீவானந்தம் மறைவு குறித்துப் "புகழ் உடம்பிற்குப் புகழ் மாலை" பாடல் எழுதுதல். சீனப்படையெடுப்பை எதிர்த்து அனைத்திந்திய மக்களை வீறுகொண்டெழுப் பாடல்கள் எழுதுதல். பன்மணித்திரள் நூல் வெளியீடு.

1972-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வழக்கறிஞர் வி.பி. இராமன் தலைமையில் நடைபெற்றது."பாரதியார் வரலாறு" திரைப்படம் எடுக்கத் திட்டமிட்டு எழுதி முடித்தல். இராசிபுரத்தில் புலவர் அரங்கசாமி கூட்டிய கவிஞர்கள் மாநாட்டில் தலைமை ஏற்றல்.

1964 - பாரதியார் வரலாற்றுத் திரைப்படத்திற்குத் தீவிர முயற்சி. சென்னை, சென்னை பொது மருத்துவமனையில் ஏப்ரல் 21இல் இயற்கை எய்தல். மறுநாள் புதுவைக் கடற்கரையில் உடல் அடக்கம். வாழ்ந்த காலம் 72ஆண்டு 11 மாதம் 28 நாள்.

1965, ஏப்ரல் 21 - புதுவை கடற்கரை சார்ந்த பாப்பம்மா கோயில் இடுகாட்டில் பாரதிதாசன் நினைவு மண்டபம் புதுவை நகராட்சியினரால் எழுப்பப்பட்டது.

1968 - உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் போது சென்னைக் கடற்கரையில் பாவேந்தர் உருவம் நாட்டப் பெறல்.1970, சனவரி - இரமணி மறைவு.

1971, ஏப்ரல் 29 - பாவேந்தரின் பிறந்த நாள் விழா புதுவை அரசு விழாவாகக் கொண்டாடப் பெற்றது. ஒவ்வோராண்டும் அரசு விழா நிகழ்கிறது. பாவேந்தர் வாழ்ந்த பெருமாள் கோயில் தெரு, 95ஆம் எண் கொண்ட இல்லம் அரசுடைமையாயிற்று. அங்கே புரட்சிப் பாவலர் நினைவு நூலகம், காட்சிக் கூடம் நடந்து வருகிறது.

1972, ஏப்ரல் 29 - பாவேந்தரின் முழு உருவச் சிலை புதுவை அரசினரால் திறந்து வைக்கப்பெற்றது.

1979 - கடற்மேற் குமிழிகள் - பாவியத்தின் பிரஞ்சு மொழியாக்கம் வெளியிடப் பெறல்.

கமல் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு என் பதில்!!!


அனைவருக்கும் நன்றி!
என் கமல் பற்றிய பதிவுக்கு வந்த பின்னூட்டங்களுக்கு வெகு சிரமமில்லாமல் இரண்டே மறுபின்னூட்டம் இட்டால் போதும் என்ற நிலை.
அந்த இரண்டுக்குமே வெகுகாலம் எடுத்ததன் காரணம்.
பதட்டமடைய ஏதுமில்லை!
அத்துடன் சிலராவது பின்னூட்டினேனே இவனென்ன சொல்லப்போகிறானென
ஒரு த‌ட‌வையாவ‌து வ‌ந்து பார்த்திருப்பார்க‌ள்.
என் ப‌க்க‌ம் எந்த‌ எதிர்வினை கூட‌ இல்லாத‌து அவ‌ர்க‌ளுக்கு ம‌கிழ்வைத் த‌ந்திருக்க‌லாம்.
அந்த‌ அற்ப‌ ச‌ந்தோச‌த்தைக் கெடுக்க‌ ம‌ன‌ம் வ‌ர‌வில்லை. சிலர் பின்னூட்டம் அப்படியானது.
உங்க‌ள் க‌வ‌ன‌த்துக்கு! உங்க‌ள் சில‌ர‌து க‌ருத்துக்கு என் க‌ருத்து எதிரான‌தே த‌விர‌;
நான் உங்க‌ள் எதிரிய‌ல்ல‌!!
இந்த‌க் கால‌க் க‌ட்ட‌த்தில் நேர‌ம் கிடைத்த‌ போது அகில‌ உல‌க‌ப் பிர‌ப‌ல‌ங்க‌ளின்
குடும்ப‌ப் ப‌ட‌ங்க‌ளை இணைய‌த்தில் தேடினேன்.
என் பார்வையிலோ;நோக்க‌த்திலோ த‌வ‌று இல்லை என்ப‌தைப் புரிந்தேன்.
குறிப்பாக‌ ந‌ம‌து திரையுல‌க‌ ர‌ஜ‌னி;சிவ‌குமார்; எஸ்.வி.சேக‌ர் போன்றோரின்
ம‌க‌ள்மாரின் திரும‌ண‌ப் புகைப்ப‌ட‌த் தொகுப்புக்களையும் பார்த்தேன்.
யாவும் என் எண்ண‌த்துக்கு வ‌லுச் சேர்த்த‌து.
ஒருவ‌ர் கேட்டிருக்கிறார்..."உண்மையில் நீங்க‌ள் பாரிசில் தானா? இருக்கிறீர்க‌ள்"
அவ‌ருக்கு ..பாரிசில் எல்லோரும் அவுத்துப் போட்டுத் திரிவ‌தாக‌ ;நீங்க‌ள்
அறிந்திருப்ப‌தே...என‌க்குப் ப‌ரிதாப‌மாக‌ உள்ள‌து.
இங்கும் சில‌ பிரான்சிய‌ர்க‌ள் இந்தியா(எங்க‌ளையும் அப்ப‌டியே நினைக்கிறார்க‌ள்)
ப‌திவிர‌தைக‌ளையும்;ஸ்ரீ ராம‌ர்க‌ளையுமே கொண்ட‌ நாடு என‌ எண்ணுவ‌து போல்
உள்ள‌து.
சில‌ர் என்னைக் கரிந்துள்ளார்க‌ள்...நீ அப்ப‌டி அத‌னால் தான் அப்ப‌டி நினைக்கிறாய்...
ப‌ரிதாப‌ப்ப‌டுகிறேன், இவ‌ர்க‌ளையிட்டு!; இது கூட‌ ஒரு வ‌கைத் த‌ப்புத‌லே!
ஆனால் முதியோர்க‌ள்;ஆசிரிய‌ர்க‌ள்;வைத்திய‌ர்க‌ள் த‌வ‌றுக‌ளையும்;நோய்க‌ளையும் சுட்டிக்காட்டுகிறார்க‌ள். அத‌ற்காக‌ அவ‌ர்க‌ளை எவ‌ருமே அப்ப‌டிப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் என‌ எண்ணுவ‌தில்லை.
ஆடையே உடுத்தாத‌வர்கள் ஊருக்குச் சென்று ஆடையுட‌ன் நின்ற‌வன் க‌தியே என் க‌தி!!
ந‌ம்ம‌க்க‌ள் எதையுமே இலகுவாக‌‌ எடுக்கும் "இய‌ல்பாக்க‌ம்" அடைந்துவிட்டார்க‌ள்.
ச‌கோத‌ரி மீனா அருணுக்கு!.. நீங்க‌ள் குறிப்பிட்ட‌ த‌ள‌ம் சென்று பார்த்தேன்.க‌ண்ணிய‌ம் மிக்கோர்; க‌ண்ணிய‌ம‌ற்ற‌ ப‌குதிக‌ளை நீக்கி ஒரு ப‌ட‌ம் போட்டுள்ளார்க‌ள். நீங்க‌ளும் அதைக் க‌வ‌னித்திருக்க‌லாம்.
"க‌ம‌ல் த‌மிழ்நாட்டில் பிற‌ந்த‌ வெள்ளைக்கார‌ன்"....எதால் சிரிப்ப‌தென‌வே தெரிய‌வில்லை. நாங்க‌ள் இப்ப‌டிப் பெருமைப்ப‌ட‌லாம்.ஆனால் "முக்காலும் காக‌ம்
முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா??" என்ப‌தே உண்மை நிலை.
டொண்டு அண்ணாவின் ப‌ட‌ப்பிடிப்புத் த‌ள‌ச் செய்தி என‌க்குப் புதிது; குறிப்பாக‌
ந‌ம் ப‌ட‌ப்பிடிப்புக‌ளில் ந‌ட‌ந்த‌தாக‌க் கூற‌ப்ப‌டும் ப‌ல‌ செய்திக‌ள் துதி பாட‌லும்; முதுகு சொறித‌லும் அட‌ங்கிய‌ பேனைப் பெருமாளாக்கும் விடயமாகவே இருக்கும்.
உதார‌ண‌த்துக்கு " அக்காட்சியைப் ப‌ட‌மாக்கும் போது நாய‌கியின் சோக‌ ந‌டிப்பில்
முழுக் குழுவுமே ம‌ன‌ம் க‌சிந்து விட்ட‌ க‌ண்ணீரில் மொத்த‌ச் சென்னையும் க‌ண்ணீர்
வெள்ள‌த்தில் மித‌ந்த‌து" இந்த‌ மாதிரி எழுதுவ‌தும் பேட்டியில் கூறுவ‌துமாக‌வே எந்த‌ வெட்க‌மோ, கூச்சமோ இல்லாம‌ல் இந்த‌த் திரைத் துறை சொன்ன‌ பொய்க‌ளால்; தெளிந்து நான் இவ‌ற்றைக் க‌ண‌க்கில் எடுப்ப‌தேயில்லை ப‌ல‌ரைப் போல்.
தேடுத‌ல் செய்த‌ போது Hamara Photos எனும் த‌ள‌ம் இந்த‌ 1 ம் ப‌ட‌ம் த‌விர‌ ப‌ல‌ ப‌ட‌ங்க‌ள் இட்டுள்ள‌து. அவ‌ர்க‌ளுக்கும் அதை இடுவ‌து,அவர்கள் தளத்துக்குக் க‌ண்ணிய‌க் குறைவு என‌த் தோன்றிய‌தோ??!!.
அத்துட‌ன் நாமும் மீரா நாயரின் Monsoon Wedding; Water; 09‍- 04 -‍ 2008
யூனிய‌ர் விக‌ட‌ன் "ச‌ட்டையைக் க‌ழ‌ட்டு டான்ஸ் ஆடு" போன்ற‌ அதிர்ச்சிக‌ளைப்
ப‌டிக்க‌ வேண்டியுள்ள‌தால் த‌விர்க்க‌க் கூடிய‌வ‌ற்றைத் த‌விர்த்த‌லே சால‌ச் சிற‌ந்த‌து.
இன்னுமொரு அன்ப‌ர் பெண்க‌ளை அத‌ட்டி மிர‌ட்டுவ‌து ப‌ற்றிக் கூறியிருந்தார்.
இவ்வ‌ள‌வு புர‌ட்சி பேசும் அவ‌ரால் இன்று ப‌ல‌ ஆண்க‌ள் முன்னிர‌வு
சின்ன‌ வீட்டிலும்; பின்னிர‌வைப் பெரிய‌ வீட்டிலும் க‌ழிக்கிறார்க‌ளே!! இத்த‌னை
சிந்த‌னைத் தெளிவும்; விடுத‌லை எண்ண‌மும் வ‌ந்தும் ஏன் இன்னும் சில‌
பெண்க‌ளாவ‌து;இப்ப‌டி வெளிப்ப‌டையாக‌ இர‌ட்டை வாழ்க்கை ந‌ட‌த்த‌ முடிய‌
வில்லை.ஆண்க‌ள் அள‌வுக்கு விவாக‌ர‌த்து செய்து புது உற‌வை உட‌னுக்குட‌ன்
மாற்ற‌வில்லை. இப்ப‌டியெல்லாம் வாழ‌லாம் என்கிறீர்க‌ளா??
பாலசந்தரின் அரங்கேற்ற நாயகி கூறியதுபோல் "ஆணென்பதே மரத்துப் போச்சு" என நம் பிள்ளைகள் கூறுமளவுக்கு எவ்வளவு வசதி; புகழ் இருப்பினும் வாழ விடுவது தவறென்பதே என் அபிப்பிராயம். ஆண்பிள்ளைகளானாலும்
கமலுக்கும் பிடித்த கண்ணதாசன் கூறினார்....ஆடைகள் ஆணுக்கோ பெண்ணுக்கோ கைகூப்பக் கூடிய வகையில் கண்ணியம் காக்கப்படவேண்டும்.
நீங்கள் நமிதாவுக்கும்,ரகசியாவுக்கும் அரைக்கால் மீட்டர் அரியல் துணியைச் சுற்றிவிட்டு ஆடுவோரிடம், இதை எதிர்பார்க்கக் கூடாதென்கிறீர்களா??
தந்தை எனும் வகையில் உடையில் ஓரளவாவது கண்ணியத்தையும் காக்கவேண்டுமென பெற்ற பெண்ணுக்கு (அது ஆணானாலும்) கற்றுத் தரவேண்டியது இவர் கடனல்லவா???
மனநோயாளிப் பெண்ணானாலும் மாராப்புச் சரியவிடார்கள் எம்மக்கள்..
அந்தப் பக்குவமும் கண்ணியமும் எங்கே போனது....
அது ஒரு விபச்சாரியே கூச்சப்படும் ஆடை....இதை நாகரீகம் எனலாம் நீங்கள்...இதா?? நாகரீகம்.
Sunday is longer than Monday இது பற்றி நான் இந்த இடத்தில் சொல்லியே ஆக வேண்டும். நடந்த விடயம்...ஒரு பாடசாலையில் ஒரு மாணவனும் மாணவியும் பேசுக்கொண்டிடுக்கிறார்கள். வகுப்புள் இருந்த அவள் தோழி.. எழுந்து வந்து அவர்கள் இருவரையும் கடந்து செல்லும் போது கூறிச் சென்ற ஆங்கில வசனமே!! மேற்குறிப்பிட்டது.அதை அந்தப் பெண்கூறிச் சென்ற சில வினாடிகளில் ;பேசிக் கொண்டு நின்ற மாணவி தன் ஆடையைச் சரி செய்தாள். அதே நேரம் அவள் முகத்தில் சிறு கலவரம்...மாணவனுக்கு ஏதுமே புரியவில்லை.வீடு வந்த மாணவன்,தன் சகோதரியிடம் ...அடுத்த பெண் கூறிய ஆங்கில வாக்கியம் பற்றிக் கேட்டேன். தங்கையோ அது ஒன்றுமில்லை என்றாள்.ஆனாலும் அவனுக்கு இதுக்குள் ஏதோ இருக்கு எனத் தோன்றியதால்,மீண்டும் கேட்டபோது , தங்கை கூறியது.இது ஒரு குறியீட்டு மொழி..
தங்கள் உடை பிசகியிருக்கும் போது,அடுத்தவர் முன் அந்த அடுத்தவருக்குப் புரியா வண்ணம் கூறுவதற்கு இதைப் பாவிக்கிறோம். தன் தோழியின் உள்பாவாடை,பாவாடைக்கு வெளியே தெரிந்துள்ளதை சூக்குமமாக தன் தோழிக்குத் தெரியப்படுத்த இந்த சங்கேத மொழி...அதாவது உள்பாவடையை அடுத்தவர் பார்த்திரக்கூடாதெனும் பக்குவம். அத்துடன் அப்படி ஒரு சம்பவம் நடந்ததை அருகில் உள்ள ஆண் தெரிவதைப் பெண்கள் விரும்பவில்லை.
ஆனால் உள்பாவாடையே எங்களுக்கு உடையென்கிறீர்கள்.
ஆனந்த விகடனில் (23-04-2008) ஜெயகாந்தன் கூறியிருந்ததை நினைவு படுத்துகிறேன்.
//பொதுவா, அந்த மாற்றங்கள் பெண்கள் மத்தியில்தான் நிகழும் என்று நினைத்தேன். ஆனால், அது இவ்வளவு விபரீதமாக மாறும் என்று நினைக்கவில்லை'' என்ற ஜெயகாந்தன், சில விநாடிகளுக்குப் பிறகு அமைதியைக் கிழிக்கிறார்.
''' 'ஏம்மா மாராப்பு போட லை?'னு கேட்டுப் பாருங்க. 'எதுக்குத் தொடையைக் காட்டுறே?'ன்னு கேட்டுப் பாருங்க. 'என் தொடை... நான் காட்டுறேன்'னு பதில் வரும்.
ஏழ்மையின் காரணமாக, வீடு இல்லாத ஒரு குடும்பம் பனகல் பார்க் பிளாட்ஃபாரத்தில் குடும்பம் நடத்தி, வெட்டவெளியில் ஆசையில் கூடி, எதிர்காலச் சந்ததிக்கு அவள் வயிற்றில் விதை போட்டான்னு முன்ன ஒருசமயம் எழுதியிருந்தேன். இப்போ என்ன நடக்குது... எல்லா வசதியும் இருக்கிறவன் அதையே வீதியில் காருக்குள்ள பண்றான்.
நான் நினைத்த மாற்றம் இதுவா?'' என்கிறார் வருத்தம் சொட்டும் குரலில்.//
உடுக்கவில்லாது அரைகுறையாக உடுத்துவது வேறு, எல்லாம் இருந்தும் அலங்கோலமாக நிற்பது வேறு...
மாட்டுக்கு மாடு சொன்னால் கேளாது மணி கட்டின மாடு சொல்ல வேண்டு மென்பாங்க..
கமல், கௌதமி தத்தமது பிள்ளைகளுடன் முதல் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்ட போது ஆனந்த விகடன் நிருபர் இவர்களைப் பேட்டி கண்ட போது, கமலின் மகளின் யீன்ஸ் நழுவி விழுந்துடுமோ??(அந்த அளவு இறக்கம்) எனும் அச்சத்துடன் இருந்தேன். எனப் படத்துடன் அவ்வுடுப்புப் பற்றி கோடிட்டுக் காட்டியிருந்தார்.
ஆனால் அவர்கள் பிறருக்காக வாழும் குடும்பமல்ல! தமக்காக வாழும் குடும்பமாம்...இது நடைமுறைக்கு ஒவ்வுமா??
வாரியாரோ, சு.கி.சிவமோ, தமிழருவி மணியனோ கூறியதாக ஞாபகம் 'பெற்ற பெண்ணானாலும் குறிப்பிட்ட வயதுக்குப் பின் அவர்களைத் தொடுவதில் கண்ணியம் இருக்க வேண்டும்'

சொந்த அக்காவை (நடிகை) விபச்சாரத்துக்குக் கூட்டிவந்து விடுதியில் கொரிய கார் நிறுவன இயக்குனருக்கு விட்டு விட்டு; லட்சக்கணக்கில் காசை வாங்கி வெளியே காவலுக்கு நின்ற தம்பியையும் படித்திருப்பீர்கள்.
கணவனைப் பிரிந்து கைக்குழந்தையுடன் வாழ்ந்த பெண்ணை மணம் முடிக்கிறான் ஒருவன்;அவனுக்கும் அவளுக்கும் பிள்ளைகளும் பிறக்கின்றன.முதற் கணவனுக்குப் பிறந்த‌ பிள்ளைக்கு 13 வயதாகிறது. அவன் தன் மனைவியை ஆய்கினைப் படுத்துகிறான். அந்த முதற்கணவனுக்குப் பிறந்த பெண்ணைப் பெண்டாட..இதைச் சகிக்காத தாய்.. இரவு ப‌டுக்கையில் அம்மிக் குழவியால் தலையில் அடித்து தன் கணவனையே கொன்று விட்டு போலிசுக்கு நேரே போகிறாள். அவன் பெற்ற பெண்ணுக்கும் ஆதரவு அவன் பெண்டாட நினைத்தபெண்...படித்திருப்பீர்கள்..
மகளே!! நீ நல்லாயிரு!!என கையைத் தலையில் வைத்து ஆசி வழங்கிய துறவிகள் எனக் கூறப்பட்டவர்களும், தந்தையே! எனக் காலில் மண்டியிட்ட பெண்ணைத் தன் குழந்தைக்குத் தாயாக்கிய மதகுருமார்களும் சந்தேகக் கூண்டில் சிக்கியதை நாம் அறிவோம்.
வசந்தனுக்கு!..
நீங்கள் நினைப்பது போல்;அப்படி எதுவும் நடக்கவில்லை.
இப்படி நான் நடக்கவுமில்லை; காணவுமில்லை என்பதே கூறப்பட்டது.
இப்பதிவிட்டபின் ஊரில் இருந்து வந்த உறவினர் DVD யில் இப்படி ஒரு காட்சி தேடினேன் கிடைக்கவில்லை. ஆனால் ஒரே மகள் ஆசையாகத் தான் திருமணம் செய்து வைத்தார்கள்.
தாய் கன்னத்தில் கன்னம் வைத்தார்..தந்தையார் கன்னத்தருகில் கன்னம் வைத்தார்.(என் சிறிய தந்தையார்)
இங்கு ஒரு சாமத்தியச் சடங்கில்.. வீடியோ எடுப்பவர்" அண்ணே பிள்ளையைக் கொஞ்சுங்கோ" எனத் தகப்பனிடம் கூற ..அவரோ "இது என்ன? புதுக் கூத்து" என்றார். தந்தை வயது 40 . கன்னத்தில் கன்னம் வைத்தார்..ஆனால் கட்டி அணைக்கவில்லை. இவருக்கும் ஒரே மகளே!
இன்னுமொரு சாமத்தியச் சடங்கு ..வீடியோ எடுப்பவர் தந்தையைக் கொஞ்சும் படி கூறிய போது காலில் விழுந்து வணங்கிய பிள்ளையைத் தோளில் தொட்டுத் தூக்கி கன்னத்தில் கன்னம் முட்டியும் முட்டாமலும் வைத்ததுடன், " இனி எல்லாம் சரி தானே" என்றார்.அதாவது அந்த அன்பிற்கும் "எல்லை" வந்து விட்டது.
இவர்களை நாகரீகம் தெரியாத "காட்டார்" எனக் கருதினால் யார்தான் என்ன ? செய்யமுடியும்.
சமீபத்தில் திரைக் கவிஞர் சினேகன் அவர்கள் நடத்திவைத்த ஒரு திருமண நிகழ்வில் வந்த அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, முத்தமிட்டதை
அதிர்ச்சியுடன் விமர்சித்து பத்திரிகைகள் எழுதியிருந்தன. அவர் அதற்கு விளக்கமும் எழுதியிருந்தார். பதிவும் இட்டு இருந்தார்கள்.
நான் நெறி;வரையறை;எல்லை என்பது பற்றிப் பேசுகிறேன்.
கலைஞர் இம்முறை பதவியேற்கும் போது எடுக்கப்பட்ட படத்தில் அவர் இரு மனைவிமார்களும் இருந்த போது...ஒரு பதிவர் அப்படம் 'தமிழகத்தின் அவமானம்' போல் படத்துடன் பதிவிட்டிருந்தார்.
அதைப் பார்த்து எதுவுமே கூறமுடியாத நிலையே என் நிலையும்...நான் கலைஞரை மதிக்கிறேன் ஆனால்
அவர் விமர்சனத்துக்கு அப்பாற்ப்பட்டவரல்ல என்பதையும் உணர்கிறேன்.
அதுபோல் கமலின் ஆளுமையில் மதிப்புண்டு. அதனால் அவர் விமர்சனத்துக்

அப்பாற்ப்பட்டவர் என்பதில் ஏற்பில்லை.
நான் 'கட்டவுட்டுக்கு' பால் ஊற்றும் வகையறா அல்ல. விசிலடிச்சான் குஞ்சுமல்ல!
காந்திக்கு....ஜி! கமலுக்கு...ஜி! பாவம்… காந்திஜி!!!!....
நெற்றிக் கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே எனக் கூறுவோம், நக்கீரர் பரம்பரை என மார்தட்டுவோம்... பின் குருக்கள் செய்தால் குற்றமில்லை என்று கும்பலில் கூப்பாடு போடுவதை கொள்கையாக்கி விட்டோம்...
தந்தை மகள் உறவு என்ற போதிலும் பொது இடத்தில் இவ்வளவு நெருக்கம் நெருடல் தான். தன் மகளாக இல்லாமல் இருந்து வேறொரு அதே வயது பெண் அங்கிருந்தால் அதையும் மகளைப் போல் தான் கமல் நினைத்து அணைத்து முத்தமிட்டார் என்று எவரும் அருவெறுப்பின்றி பார்ப்பார்களா ? அல்லது கமல் தான் அதே போன்று தன் வயது ஆடவரை தன் மகளுக்கு அந்த கோலத்தில் முத்தமிட அனுமதித்து தந்தை -மகள் என்ற உறவுக்கு புனிதம் கற்பிப்பாரா ?
அந்த படத்தைப் பார்க்கும் எல்லா மனிதர்களுமே முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் அப்பா - மகள் உறவு என்று தேற்றிக் கொள்கின்றனர்.
அந்த காலத்தில் வயது வந்த பெண்ணையும், அவள் தந்தையும் தனித்துவிட மாட்டார்கள், தவறுகளுக்கு மனம் கூசி தற்கொலை செய்து கொள்வதைவிட கொஞ்சம் கசப்பாக இருந்தாலும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் இருப்பதே அறிவான செயல். தனது மகள் இல்லை, தனது இரத்தம் இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அண்ணன் மகளைக் கெடுத்த காமுகர்களும் சமூகத்தில் உண்டு.
நான் நெருப்பென்றாலே உன் வாய் ஏற்கனவே வெந்து இருக்கிறது என்று சொல்லும் தாங்கள், சினிமா எல்லாமே நடிப்புதான், அதை கமல் சிறப்பாக செய்கிறார், வெறும் நடிப்புதானே என்று
நடிகையாகி இருக்கும் தன் மகளுடன் ஜோடியாக மற்ற நடிகைகளுடன் காட்டும் அதே நெருக்கத்துடன் கமல் நடித்தால், அதை இங்கே பின்னூட்டமிட்டு வதைத்தவர்கள் ஏற்றுக் கொள்வார்களா ? அதற்கும் 'ஆம், நடிப்புதானே பரவாயில்லை, தவறாக நினைக்கமாட்டோம்' என்று மனம் திறந்து சொன்னால் எனது பார்வை தவறு, நான் மோசமான மனநிலைக் கொண்டவன் என்று ஒப்புக் கொண்டு உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கமல் அப்படி செய்தால் அதை மீண்டும் கண்டிக்கும் முதல் ஆள் நானாகவே இருக்கும்.
அதனால் ...தூங்குபவரை எழுப்பலாம்...தூங்குவதுபோல் நடிப்போரை... முடியுமா??

எனவே, இதுவரை வந்த வரப்போகும் அனைத்துப் பின்னூட்டத்திற்கும் இதுவே என் பதில்.

Monday, April 14, 2008

101 வயது மரதனோட்ட வீரர்...

இலண்டனில் வாழும் திரு. மாட்டின் பஸ்ரர் (Martin BUSTER) எனும் 101 வயது முதியவர் 13-04-2008 ,ஞாயிறு,- Essex ல் நடைபெற்ற Roding Valley மரதனோட்டப் போட்டியில் 42 கிலோ மீட்டரைக் ஓடி முடித்து , உலகிலே மரதனோட்டப் போட்டியில் பங்குபற்றி ஓடி முடித்த அதி வயதுகூடியவர் எனும் பெருமையைத் பெற்றுள்ளார்.
இவர் குழாய் பொருத்தும் வேலை செய்துள்ளார். கடந்த 3 வருடங்களுக்கு
முன் தனக்கு வேலைசெய்யாதிருப்பது அலுப்பைத் தருகிறதென இப்போதும்
வாரம் 3 நாள் வேலை செய்வதால், இங்கிலாந்தில் வேலைசெய்து சம்பாதிக்கும் அதிக வயதானவர் எனும் பெருமையையும் பெற்றுள்ள இவருக்கு 17 பிள்ளைகள் உண்டாம்.
அவரை பி.பி.சி கண்ட பேட்டியையும் காணலாம்

Saturday, April 12, 2008

இத்தாலி ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி ஆலயம்





















இத்தாலியில் Savona மாநிலத்தில் Altare எனும் மலைப் பிரதேசத்தில் எழுந்தருளும் இந்த
ஆலயம், UNIONE INDUISTA ITALIANA - SANATANA DHARMA SAMGHA -GITANANDA ASHRAM
எனும் இத்தாலிய இந்து ஒன்றியத்தில் ஆச்சிரமத்தினரால் சுமார் 15 வருடங்களாக வழிபாடுகள் நடந்த போதும் இத்தாலி வாழும் இந்துக்களுக்கு சமீபகாலமாகத் தெரிய வந்து, பலர் வழிபாட்டுக்குச் செல்லத் தொடங்கியுள்ளார்கள்.
பிரான்சின் எல்லையில் இருந்து இருமணி நேர வண்டி ஓட்டத்தில் செல்லக்கூடியதாக உள்ளதால் நான் 2004, பெப்ருவரி 2008 லும் சென்றேன்.
கூட்டுப்பிராத்தனையுடன் கூடிய வழிபாடு ஆச்சிரம தலைமையே வழிபாட்டை நடத்துகிறார்.
ஆலயத்தைச் சார்ந்தோர் அனைவரும் அழகாகப் பாடி பிராத்தனை செய்கிறார்கள்.
சமஸ்கிருதம், தமிழ்ப் பாடல்கள் ஆர்மோனியம், மிருதங்கத்துடன் பாடப்பட்டன.
தீபாரதனையின் பின், வீபூதி,குங்குமம் ,சக்கரைப் பொங்கல் வழங்கப்படுகிறது.
அத்துடன் மதிய போசனமும் உண்டு.
வேற்று மொழிபேசுவோரின் கொஞ்சுதமிழ் உச்சரிப்பு மிக இனிமையாக இருந்தது.
தினமும் வழிபாடு நடந்தபோதும் செவ்வாய்,வெள்ளி சிறப்பு வழிபாடு...சதுர்த்தி,சிவராத்திரி,
நவராத்திரி கலைநிகழ்சிகளுடனான வழிபாடு, மிக விமரிசையாக நடைபெறுகிறது.
கண்ணுக்கெட்டியவரை உண்டியலைக் காணவில்லை.
இந்த மலைப்பிரதேசத்தை அரசவுதவியுடன் பெற்று சிறுகச் சிறுக நன்கொடைகள் மூலம்
மிக மெதுவாகக் கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன.
யோகா, பரத வகுப்புகள் கூட இருப்பதாக அறிந்தேன்.
சில சொற்கள் தமிழும் பேசுகிறார்கள்.
சேலை ,சுடிதார்,குர்தா என கண்ணியம் மிக்க உடைகள், கைலாகு கூட இல்லை.
அனைவரையும் கைகூப்பி வணக்கம் தெரிவிக்கிறார்கள்.
கண்ணியம் மிக்கோராகக் காணப்பட்டார்கள்.
அங்கு இருந்த 4 மணி நேரம் எனக்கு அமைதிமிக்கதாக இருந்தது.
இப்புது வருட தினத்தில் இத்தாலி- அன்னை திரிபுர சுந்தரியின் கோவிலைக் காட்டுவதில்
மகிழ்கிறேன்.
இக்கோவில் செல்ல விரும்புவோர் Italy- Altare புகைவண்டி நிலையத்தில் இருந்து
019-584692 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்தால், வண்டியில் வந்து கூட்டிச் செல்வார்கள். ஆங்கிலம் பேசுவார்கள்.
அனைவருக்கும் என் இனிய புதுவருட வாழ்த்துக்கள்...

Tuesday, April 08, 2008

கமல் இதைத் தவிர்த்திருக்கலாம்...

வட்டாள் நாகராஜ் எப்படி இருப்பார் என பார்க்க ;அவர் படம் தேடிப் போனபோது இந்தப் படங்களையும் கண்டேன்.ஏதோ; பார்த்த போது கமல் பற்றிய என் எண்ணத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இது வரை எத்தனையோ நடிகர்களின் குடும்பப் படங்கள் பார்த்துள்ளேன்.


இப்படி ஒரு படம்பார்க்கவில்லை.

கமல் பரந்து பட்ட வாசனைப் பழக்கம் உள்ளவர் எனத் தன்னைப் குறிப்பிடுவார்!! அவர் பெண்களானால்; பெற்ற பிள்ளையானாலும்; முகர்வதைக் குறிப்பிட்டாரோ?? எனச் சந்தேகிக்கிறேன்.
என்ன??தான் அன்பானாலும் வயது வந்த பெண்களை ஏன் ? சிறுமிகளில் கூட கையை எங்கே? வைக்கலாமெனும் நியதி மனித சமுதாயத்துக்கு உண்டு.

போக்கற்ற எம் சினிமாவில் தான் ஊரான் பெற்ற பிள்ளையை கிழவர்கள் முதல் குமரர்கள் வரை தோடம்பழம் பிளிவதுபோல் பிளிவதைப் பார்க்கிறோம்.
அதற்காகப் பெற்ற பிள்ளையையுமா??கமல் தன் படங்களில் பல இளம் நாயகிகளை எங்கெல்லாம் தொட்டு; எப்படிக் கட்டிப் பிடித்து; முகர்வாரோ அதைத்தானே இந்தப் பெற்றபிள்ளைக்குச் செய்கிறார்.
இதே காட்சிகளை சிம்ரனிடம் பார்த்துள்ளேன்.
அது காதற்காட்சியானால் இது???
இப்படிப்பட்ட காட்சிகளை நாம் இந்த மேற்கத்தேய நாடுகளில் கூட காண்பதரிது.
அன்று சுகாசினி பிரபலமாக இருந்த போது, கமலுடன் ஒரு படமும் சேர்ந்து நடிக்கவில்லை.சித்தப்பன் + மகள் உறவு எனத் தவிர்த்தார்கள் எனக் கொண்டோம்.
ஆனால் இதைப் பார்த்த போதுஅதைச் சுகாசினி தான் தவிர்த்திருப்பாரோ எனத் தோன்றுகிறது.
இந்த கமலின் மகள் உடுத்தியுள்ள ஆடை; இந்தக் காட்சியை பார்க்க எவ்வளவு தான் நவநாகரீகமாக வளர்த்தாலும் அவற்றுக்கும் ஒரு எல்லையுண்டு; என்பது இப் புத்திஜீவி உணராமல் போனது வருத்தமே!
இப்படங்களையாவது தவிர்த்திருக்கலாம்,தான் பெற்ற பெண்ணானாலும்..
இது என் கருத்து...கமல் அன்பர்கள் தடியெடுத்து வரலாம்.
எனக்கு சொல்லவேண்டும் போல் இருந்தது.

Sunday, March 30, 2008

எப்படி இருந்தோம்... இப்படி ஆக்கிப் போட்டீங்களே!!

மனித அறிவு வளர்ச்சியில் பல உயிர்கள் மாற்றத்தைக் கண்டுவருவது

நாம் நாளாந்தம் செய்தியாகக் கேட்கிறோம்.

இந்த Glo fish எனும் வியாபரக் குறியுடன் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும், இவ் ஒளிரும் மீன்கள் மரபில் மாற்றம் செய்யப்பட்ட ZEBRA FISH .

இவை கடும் சிவப்பு,பச்சை, ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது.


1999 ல், Dr. Zhiyuan GONG உடன் அவர் உதவியாளர்களும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் ஒருவகை jelly fish இருந்து கிடைத்த பச்சை ஒளிரும் புரட்டீனை, சாதாரண ZEBRA FISH GENOME ல் செலுத்திய போது அந்த மீன் ,ஓளிர்வதை அவதானித்து...


அதையே ஒரு வியாபார உத்தியாக்கி, செல்லப்பிராணியாக உலகம் பூராக விற்பனை செய்கிறார்கள். நிறையவே சம்பாதிக்கிறார்கள். சோடி 10 யூரோ விலை போகிறது...






Saturday, March 22, 2008

ஆடல் காண்பீரோ...அழகு மயிலாடல் காண்பீரோ!!.

பாம்புக்குப் படையும் நடுங்கும் ஆனாலும் அதைப் பிடித்து ஆடவைத்துவிடலாம். மயில் அப்படியல்ல...எம் நினைப்புக்கு ஆடுவதல்ல....அது நினைத்தே ஆடும்...

நான் மயில்களைப் பல தடவை கண்ட போதும், ஆடும் மயிலை ஒரு தடவை கதிர்காமத்தில் சில விநாடிகள் கண்டுள்ளேன்.
2004 ஈழம், இந்தியா சென்றபோது பல மயில்களைக் கண்டேன். ஆனால்
ஆடும் மயில் காணக் கிடைக்கவில்லை.
இப்படத்தில் நீலமயிலுடன்,வெள்ளை மயிலும் எப்படி அழகு நடம் புரிகிறது.
படத்திலாவது இந்த அரிய காட்சியைக் கண்டு மகிழ்வோம்.


Thursday, March 20, 2008

வேதனையற்ற மரணம் நிராகரிக்கப்பட்ட பெண் மரணம்


பிரான்சில், சாந்தல் செபிர் (Chantal Sebire)எனும் 52 வயது முன்னாள் பள்ளி ஆசிரியையும் 3 பிள்ளைகளுக்குத் தாயான பெண் பல வருட காலமாக மூக்குப் பகுதியில் அபூர்வ மாற்ற முடியாத புற்று நோயால் பாதிக்கப்பட்டதால் , தான் வேதனையற்ற மரணத்தைத்(euthanasia) தழுவ அனுமதி தரவேண்டுமென அரசைக் கேட்டிருந்தார்.

பிரான்சு அதிபர் நிக்கோலா சார்கோசிக்கும் எழுதியிருந்தார்.
சமீபத்தில் தொலைக்காட்சியில் தோன்றி.. நாளாக ஆக வேதனையுடன் பார்வை,நுகரும் தன்மை, மணம் என்பனவற்றையும் உணரும் தன்மையைத் தான் இழந்துவிட்டதாகவும், இதைவிட தன்னைத் தெருவில் காணும் குழந்தைகள் பயப்படுவதும், சமீபத்தில் ஒரு பெண் தன்னைக்கண்டு ஓடியதும் தனக்கு மிக வேதனை தருவதாகவும் கூறியிருந்தார்.
இந்நிலையில் இவர் நீதிமன்றத்தையும் நாடியிருந்தார்.
இவர் கோரிக்கை டியோன் நீதிமன்றத்தால்நிராகரிக்கப்பட்ட நிலையில், இவர் சுவிஸ்,பெல்சியம்,ஒல்லாந்து போன்ற ஐரோப்பிய 'வேதனையற்ற மரணத்தை' தழுவ அனுமதியுள்ள நாடுகளில் ஒன்றில் சென்று தன் வாழ்வை முடிக்க எண்ணியிருந்துள்ளார்.
அத்துடன் எந்த வைத்தியத்தையும் நிராகரித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் இல்லத்தில் தனிமையில் மரணத்தைத் தழுவியுள்ளார்.
'வேதனையற்ற மரணம்' பிரான்சில் சட்டபூர்வமாக அனுமதியில்லை.
இதையொட்டிய சர்ச்சைகள்,விவாதங்கள் இப்போ முக்கிய இடம் வகுக்கிறது.என்ன??இருந்தென்ன ? நோயற்ற வாழ்வு போல் வருமா??
அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
http://news.bbc.co.uk/2/hi/europe/7305970.stm