Saturday, December 30, 2006

PILLCAM..மருத்துவப்படக்கருவி!!















உங்களில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம்.இது ஒரு கூட்டுக் குளிசைவடிவில் ;அளவிலமைந்த படப்பிடிப்பு மருத்துவக் கருவி!
குடல் வருத்தங்களைக் கண்டுபிடிக்க வழமையாகப் புழக்கத்திலுள்ள ENDOSCOPY க்கு பதிலாகக் கண்டுபிடித்து புழக்கத்தில் வந்து வெற்றியும் கண்டுள்ளது.
ENDOSCOPY யின் உதவியால் குடலின் குறிப்பிட்ட சிலபகுதிகளை குறிப்பாக சிறுகுடலின் மடிப்புகள்; நெளிவுகள் உள்ள பகுதியை இக்கருவியால் படமாக்க முடிவதில்லை.
அக் குறை இப் புதிய கருவியால் நிவிர்த்தியாவதுடன். நோயாளிக்கும் சிரமமேதும் இன்றி 20 நிமிடங்களில் தேவையான துல்லியமான தகவல்களை பெறமுடியுமென கூறப்படுகிறது.

கூட்டுக் குளிசை போல் அமைப்புடைய இதன் இரு முனையிலுமுள்ள வெளிச்சத்தைப் பீட்டியடிக்கக் கூடிய அமைப்புடைய படப்பிடிப்புக்கருவிகள்;செக்கனுக்குப் 14 படமாக மொத்தம் 2600படங்களை; வாயினூடு; குடல் மூலம் மலவாசல் வரைச் செல்லும் பாதையை படமாக்கி மின்காந்த அலைகளாக வெளிஉடம்பில் ஒட்டியிருக்கும் SENSORS க்குக் கம்பித் தொடர்பு மூலம் தகவல் பெற்று அதை; பதிவுக் கருவிக்கு அனுப்புகிறது.
அதைக் கணனியின் உதவியுடன் படமாகப் பார்த்து வியாதியைக் கண்டுபிடித்து வேண்டிய வைத்தியம் செய்ய வசதியாகவும்;இலகுவானதும்;வேதனையற்றதாகவும் இருப்பதாக மருத்துவ உலகு வரவேற்கிறது.
ஒரு தடவையே பாவிக்கக்கூடிய இக்கருவி மலத்துடன் சிரமமின்றி வெளிவேறுகிறது.

நான் ஒரு குடல் வியாதிக்காரன் இந்த ENDOSCOPY க்கு பலதடவை உட்பட்டவன் எனும் வகையில் இச்செய்தி எனக்கு மிக மகிழ்வைத் தந்தது.
மேலதிக விபரம் எஸ் கே அண்ணா போன்ற மருத்துவத்துறையில் உள்ளோர் தரலாம்.

Friday, December 22, 2006

இவரும் சாதனைப் பெண்ணே!





கடந்த 10 - 12 - 2006 அன்று பிரான்சில் நடை பெற்ற "மிஸ் பிரான்ஸ் - MISS FRANCE" தேர்வில் ; 2 ம் இடத்தைப் பெற்ற(Premiere Dauphine)Sophie VOUZELAUD என்னும் இந்தப் பெண் ஓர் வாய் பேசமுடியாதவர்.
இப்படிக் குறையுள்ளவர்களால் சாதிக்கமுடியும் என்பதை உணர்த்தவே!! தான் பங்கேற்றதாகக் கூறிய இவர் ஓர் 19 வயதுக் கணக்கியல் மாணவி.நீச்சல்,கராத்தி,சினிமா....இவர் ஆர்வங்கள்.
உலக அழகிகள் தேர்வு வரலாற்றிலேயே!! இப்படிப்பட்ட உடற்குறைபாடுடைய பெண்பங்கேற்றதும்; 2 ம் இடத்தைப் பெற்றதும் .
இதுவே முதற்தடவையாகும்.

MISS LIMOUSIN ஆக அவர் மாநிலத்தில் தெரிவாகி; பின்முதல் சுற்றுள் வரும் 45 அழகிகளில் ஒருவராகி, பின் 12 அழகிகள் அடங்கிய 2 ம் சுற்றுக்கும் தேர்வாகி ;இறுதிச் சுற்றில் ஐவருள் ஒருவராகி தன் இரண்டாம் இடத்தைத் தங்கவைத்துக் கொண்டார்.

தொலைக் காட்சியில் நேரடியாக நடந்த தேர்வில்; "சைகை நிபுணர்" உதவியுடன் பேசினார். அவர் குரலிலே சிலவார்த்தை பேச முயன்றார்.(அதற்காகக் கடும் பயிற்சி எடுக்கிறார்).

மிஸ் பிரான்சாகத் தெரிவானவரிலும் பலமடங்கு இவர் வசம் இருந்த போதும். இப் பதவியில் இருப்பவர்கள்;பேசக் கூடியவராக இருக்க வேண்டுமென நடுவர் குழு ;தீர்மானித்ததோ தெரியவில்லை.

இவருக்கு 2 ம் இடமே!! கிடைத்தது.எனினும் இவர் துணிவு பாராட்டுக்குரியதாக ;பத்திரிகைகள் புகழ்ந்தன.

Monday, December 11, 2006

அந்த மரத்தின் பெயரும் வரலாறும்.......





1-ஈழத்தில் மன்னாரில் பள்ளிமுனையில் உள்ள "பெருக்க மரம்" பற்றிய விபரக்கோவை!

2-ஈழத்தில் மன்னாரில் பள்ளிமுனை எனும் சிறு கிராமத்தில் உள்ள;
BAO BAB -Adasonia Digitata இனம் ;ஆபிரிக்க அரேபிய இனத்தைச் சேர்ந்தது.
3-மடகஸ்காரிலுள்ள BAO BAB- Adasonia Grandidieri எனும் இனம்.
4-ஆபிரிக்க அரேபிய BAO BAB -Adasonia Digitata எனும் இனம்.
5-மடகஸ்காரில் BAO BAB- Adasonia Grandidieri இனம் தொகையாக உள்ள படம்.

நான் "புத்தளம் வரலாறும்,மரபுகளும்" எனும்; திரு.அசன் நெய்னா மரைக்கார் ஷாஜஷான் அவர்கள் எழுதிய புத்தகத்தை வாசித்தபோது; புத்தளம்;கற்பிட்டி; மன்னார் பகுதியில் ஒருவகை மரம்;அரேபியரால்(1477 மட்டில்) கொண்டுவந்து நடப்பட்டதாகவும்; அதன் பிரமாண்டத்தால் அதை "பெருக்க மரம்" என அழைக்கிறார்கள் என்பதையும் வாசித்தேன்.
2004 ல் மன்னார் சென்ற போது; பெருக்கமரம் பார்க்கப் போவோம். என்ற போது; அந்த மரம் இருக்கா???என ஆச்சரியப்பட்டுச் சென்று; பார்த்துப் படமும் பிடித்தேன்.இப்போ இந்த ஓர் மரமே!! மிகுதியாக உண்டென என்ணுகிறேன்; இதைப் பள்ளிமுனை கத்தோலிக்கத் தேவாலயத்தினர் பாதுகாக்கின்றார்கள்.
இனி அப்புத்தகத்தில் உள்ள பகுதி.........
அரேபியர்களின் செல்வாக்கு இப்பகுதியில் இருந்ததென்பதற்கு சான்றாக "பெருக்கமரம்" என்ற ஒரு வகைத் தாவரம் விளங்குகிறது. இம்மரம் மத்திய கிழக்குக் குரியதாகும். அரேபியர் வாழ்ந்த இடத்தில் இதை நட்டு வளர்த்தனர்.புத்தளம்;கற்பிட்டி;மன்னார்ப் பகுதிகளில் நின்றுள்ளது.
காலகதியில்முக்கியத்துவம் குன்றி பராமரிக்கப் படாமல் அழிந்து போயின.இதன் இலைகள் ஒட்டகத்துக்குத் தீனியாக இருந்ததாகக் கூறப்படுகிறது;அதிஸ்டவசமாக கற்பிட்டியிலுள்ள திகழி எனும் பண்டைச் சிறப்பு மிக்க கிராமப் பள்ளிவாசலில் வரலாற்று நினைவுச் சின்னமாக இருந்து; 1991 ல் வேரோடு சாய்ந்தது; துரதிஸ்டமே!!!
பெருக்க மரத்தைக் குறிப்பிட்டு வழங்கும் கிராமியப்பாடலொன்று.......
ஊருக்கலங்காரம் ஒசந்த பள்ளி பெருக்கமரம்
காட்டுக்கலங்காரம் கலை மானும் குட்டிகளும்
ஊட்டுக்கலங்காரம் விடிவிளக்கும் பிள்ளைகளும்
கடலுக்கலங்காரம் கப்பலும் பாய்மரமும்.
ஊருக்கலங்காரமெனப் பெருக்கமரத்தைக் குறிப்பதன் மூலம் அதன் அழகும் முக்கியமும் புலப்படுகிறது.பண்டைய பள்ளிவாசல்களிலும்;முஸ்லீம் குடியிருப்புகளிலும் இவை வளர்க்கப் பட்டுள்ளன.இம்மரம் பாரிய விருட்சமாகும்;1848ல் புத்தளம் வந்த "டெனன்ட்" எனும் வரலாற்றாசிரியர்; புத்தளம் பள்ளிவாசலில் இப்படி ஓர் மரம் நின்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.இதைப் பப்பரப்புளி(இராட்சதப்புளி);தொதி எனவும் தமிழில் கூறுவர்..;...இப்படி பல தகவல்கள் உள்ளன.
இன்னும் பல தகவல்கள் இவ்வகை மரம் பற்றி இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது.

Saturday, December 09, 2006

இந்த மரத்தின் பெயர் என்ன??




ஈழத்தில் இந்த மரத்துக்கு ஓர் பெரிய சரித்திரமே!!உள்ளது.


இந்த மரத்தில் பெயர் தெரியுமா???


இது இருக்கும் ஊர் தெரியுமா??


தெரிந்தவர் கூறுங்கள்.

Thursday, December 07, 2006

மரபுக் கவிதையும்....புதுக் கவிதையும்....


கவிதை!.....

உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் உயரிய வார்த்தை;இலக்கியத்தின் எழிற்குழந்தை....படிப்போரைக் கேட்போரை இன்பத்தின் எல்லைக்கே கொண்டு செல்லும் " காகிதத் தேன்" கவிதையைச் சுவைக்கத் தெரியாது மனிதனாக இருப்பதே! வீண்.
கவிஞர்கள்; தம் வாழ்வில் கற்றவற்றையும்;கேட்டவற்றையும்; அனுபவித்தவற்றையும்; தாம் சுவைத்தது மாத்திரமன்றி, யாமும் சுவைக்க அழகுற எழுதி வைத்தவையே! கவிதைகள்.
கவிஞன் பெற்ற அனுபவச் சாறு கவிதை; அவன் நமக்கு விட்டுச் சென்ற பெருநிதியும் அதுவே!தமிழ்க்கவிதையின் தோற்றுவாய், பக்தி;நீதி சார்ந்ததாக இருந்தது.
அத்துடன் அன்றைய காலக்கட்டத்தில் எல்லாவற்றையுமே செய்யுளாகவே! ஆக்கிவைத்தார்கள்.
மருத்துவம்;தத்துவம்;ஓவியம்,சிற்பம்;இலக்கணம் ;இலக்கியம் எதுவானாலும் அவற்றின் செயற்குறிப்புகளை நினைவில் நிறுத்த ஓசைநயம் பொருந்திய செய்யுள்களாகவே! ஆக்கிவைத்தார்கள்.
அத்துடன் இச்செய்யுட் குறிப்புகள் மிகப் பெரியவிடயங்களையும்; குறுகிய வடிவில் குறித்துவைக்க உதவியது.
"செவிவழி" இலக்கிய வடிவங்கள் பரவுவதற்குச் சந்தங்களும்;ஓசைநயமும் பேருதவியாக இருந்தது.
அதனால் அமரத்துவம் மிக்க செய்யுள்கள்;கவிதைகள் உருவாக யாப்புக்கள் இன்றியமையாததாகின.
நல்ல பாடகனுக்கு எப்படிச் சுரங்கள் தெரியவேண்டுமோ!நல்ல கவிஞனுக்கு யாப்புத் தெரிய வேண்டுமென்றானது.
இயல்பாகவே கவிவளம் உடையோருக்கு சந்தமும்;ஓசைநயமும்;யாப்புருவும் பிறப்புடனே கிடைத்த கொடை எனலாம்.உலகில்எப்படி? ஞானிகள்;யோகிகள்;வைத்தியர்கள்;பொறியியலாளர்கள்;வக்கீல்கள்; பாடகர்கள்,பேச்சாளர்கள்;சிந்தனைவாதிகள்;சிற்பிகள்;ஓவியர்கள்;சமைப்போர்;
சோம்பேறிகள்,சுரணையற்றோர்.....பிறக்கிறார்களோ!அப்படியே...

வித்தகப் பொருளின் மாட்சி வியத்தகு சொல்லின் ஆட்சி!மெய்த்திறம்;திட்பம்;நுட்பம் விளக்கம் மற்றுள யாவும் மேவி!
எத்தனை முறை கற்றாலும் எழில் நலம் மேல் மேலோங்கி
தித்திக்கும் பாடல் தானே தெய்வீகப் கவிதையாகும்!.
என்ற வகைக் கவிதையை உருவாக்கும் கவிஞர்களும் பிறக்கிறார்கள்.
எல்லோரும் வைத்தியராக முடியாது எவ்வளவு உண்மையோ!! அவ்வளவு உண்மை எல்லோரும் கவிஞர் ஆகமுடியாதது.
இதைப் பலர் உணரவேண்டும்.ஆனால் உணரவில்லை.
ஒவ்வொருவரிடமும் இன்றோ;இரண்டோ திறமையுண்டு.
ஆனால் எல்லோரிடமும் எல்லாத் திறனும் இல்லை.இதனால் "கவிதை" எனும் பெயரில் குப்பைகள் வலம் வருகின்றன.

கவிதை எழுதக் காகிதம்; எழுதுகோல் .....இவற்றுடன் பட்டறிவு;படிப்பறிவு;சிந்தனை;கற்பனைவளம்;சுவைபடக் கூறும்
ஆற்றலும் வேண்டும்.

இவற்றின் மொத்த உருவமாகத் தமிழினத்தில் கம்பன்;வள்ளுவன்;இளங்கோ;ஔவை;ஒட்டக்கூத்தன்;
பாரதி;கண்ணதாசன்;பாரதிதாசன்;நவாலியூர் சோமசுந்தரப் புலவர்;சின்னத்தம்பிப் புலவர்; நல்லதம்பிப் புலவர்;உருத்திரமூர்த்தி;பேராசிரியர் சுந்தரம் பிள்ளை;சமய குரவர்கள்;மற்றும் பலர் கவிஞர்களாகப் பிறந்தார்கள்....இன்பக் கவிதைகளைத் தந்தார்கள்.
ஆனால்;இன்று இந்த உன்னத இலக்கிய வடிவத்தின் நிலை என்ன? "நடக்க மாட்டாதவன் குஞ்சியாத்தை வீட்டில் பெண்ணெடுப்பது போல்" ஆகிவிட்டது.சீரான கல்விஅறிவற்றவர்களினதும்; இலக்கிய இலக்கண அனுபவமற்றவர்களினதும் கைகளில், அது சிக்கிச் சீரழிவதைக் கண்கூடாகப் காணக் கூடியதாக உள்ளது.
இன்று கம்பனும் பாரதியும் இருந்திருந்தால் "மறம்" பாடியே இக்கூட்டத்தை அழித்திருப்பார்கள்.
இன்று கவிஞர்கள் என்று "கக்கத்துள்" காகிதக் கட்டுடன் அலையும் "திருக்கூட்டம்;தாம் எதோ தமிழை அழிவில் இருந்து காக்க உதித்தவர்கள் போல் எண்ணி; தமிழையே சாகடிக்கிறார்கள்.
மொத்தமாகத் தமக்குத் தெரியாத பரீட்சயமில்லாத ஒன்றைச் சாதிக்க முற்பட்டு;சோதனையில் மாட்டித் தவிக்கிறார்கள். மற்றவர்களையும் தவிக்க வைக்கிறார்கள்.
இதைப் பேராசிரியர் கலாநிதி வெங்கடசுப்பிரமணியம் குறிப்பிடும் போது "நாம் யார்? பாரதியின் வழித்தோன்றல்கள்;பாவேந்தர் பரம்பரை,ஔவ்வைப்பாட்டியின் பேரர்கள்....உலகுக்கு வழிகாட்டிய வள்ளுவரின் திருக்குமாரர்கள் எனவே நமக்கு அறிவுக்குப் பஞ்சமில்லை.
கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவி பாடுமென்றால்;எமக்குக் கவிதை கைவந்த கலையாகத்தான் இருக்க வேண்டும்.அதனால்தான் வசனத்தைக்கூடக் கவிதையாக்கி,ஆணைப் பெண்ணாக்குவது போன்ற இரச(இரசமற்ற) வாதங்கள் செய்துவருகிறோம்.

ஒரு பத்து வரிகளைச் சேர்த்து எழுதினால் "பந்தி" அதையேவரிசையாக ஒன்றுக்கு கீழ் ஒன்றாக எழுதினால் "புதுக்கவிதை" என்று கேலி செய்கிறார்.
யாப்புக் கூறும் இலக்கியவடிவம் வயலுக்கு வரம்பு போல்...ஆனால் வரம்பு வயல் ஆகாது உண்மை;அதுபோல் வரம்பின்றி வயல் செழிக்காது.
அதுவும் உண்மையே!காவியங்கள்;கதைகள்;நாடகங்கள்;கட்டுரைகள்;கடிதங்கள் எப்படி இருக்க வேண்டுமெனும் கட்டமைப்பு ஒன்று இருக்குமானால்; கட்டாயம் கவிதை இப்படித்தான் இருக்கவேண்டும் எனும் கட்டமைப்பு இருந்தே ஆகவேண்டும்.
அதுவே "யாப்பு". கவிதைக்கு வரைபிலக்கணம் இல்லை என்பதுமனிதனுக்கு வரைவிலக்கணம் இல்லை என்பதற்கு ஒப்பானது.
வரைபின்றி வளர்ந்த கலை என்று கவிதையை எண்ணுவது "ஆழ்ந்த அறிவின்மையின் புலம்பல்".மனிதன் ,பின்பு தமிழன்;பிரான்சியன்;இந்து;கிருஸ்தவன் என்பது போன்றே!கவிதை,வெண்பா,விருத்தம்....இவற்றுக்கு வரைபுண்டு.
கவிஞன் என்பவன் மொழியைத் தனக்குச் சேவகம் செய்ய வைப்பவன் என்பர்.நல்ல கவிஞனுக்கு மொழி அவன் சிந்தனையை வடிக்க என்றுமே தடையாக இருந்ததில்லை.
"இம் என்றால் எழுநூறு;எண்ணூறு ;அம்மென்றால் ஆயிரம்" எனக் கவிபடைத்த தமிழ்க்கவிஞர்கள் இருந்தே உள்ளார்கள்.அவர்கள் என்றுமே தம் சிந்தனைக்கு மொழியும்,யாப்பும்;வரைபும் தடையாகவிருந்ததென சிணுங்கியதே! இல்லை.
ஆனால் இன்றைய அறிவு "சூனியங்கள்" ஆடத் தெரியாதவன் கூடம் கோணை என்பது போல் யாப்புத் தடையாம்."யாப்பைத் தவிர்ப்பதனால் கவிதை தன் அனைத்துச் சக்தியோடும் புறப்படுகிறது" பழைய யாப்பு உருவங்கள் புதிய சிந்தனைகளைத்தாங்காது என்கிறார்களே!பாரதியும்;பாரதிதாசனும்;கண்ணதாசனும்;உருத்திரமூர்த்தியும்,காசி ஆனந்தனும் கூறியவை பழைய சிந்தனைகளா? இப்படிக் கூறுபவர்கள்....
இதோ ஓர் தற்காலச் சிந்தனையில் உருவான கவிதை நெல்லை சு.முத்து வினால் எழுதப்பட்டது.

உலகம் ஒரு கைப்பந்தாய்ச் சுருங்கச் செய்யும்
உன்னதமாம் விஞ்னானப் பொற்காலத்தில்
பலதுறையில் ஆய்வுகளில் சிறந்து ஓங்கும்
பாரதமும் பாரிடையே உயர்ந்து வெற்றித்
திலகமெனப் பல்நோக்குச் செயற்கைக்கோள்கள்
செலுத்திவிடும் தனிப்பெருமை உவகை நல்கும்!
உலவிவரும் இன்சாட்டில் உயர்ச்சி சொல்வோம்!
உறு வான சாத்திரத்தில் புரட்சி செய்வோம்!


ஏழாண்டு அண்டவெளி சுற்றும் வண்டாம்;
இந்தியத் தேசியச் செயற்கைக் கோளால் - விண்மீன்
கோளாண்டு,மின்காந்த அலைகள் கொண்டுகூறு புகழும் வானொலியும்;வானிலையும்
நாளாண்டு நம்நாட்டில் கல்வி கேள்விஞானமுடன்
விஞ்ஞானம் செழிக்க மக்கள்வாழ்வாண்டு தொலை பேசி;தூரக்காட்சி
வளமாண்டு இன்சாட்டே வாழி நீடு!

கலைமகள் - யூன் - 1993

இது புதிய சிந்தனை வடிவமல்லவா?!கவிஞன் நினைத்ததை யாப்புக்குள் அடக்கவில்லையா???இது சுவையில்லையா???
அடுத்து காளமேகப் புலவர்; ஒரு சத்திரத்தில் உணவருந்துகிறார். அவர் அருகில் இங்கிதம் தெரியாதவர், சோறிட்டதும் பாய்ந்து குடுமி கலைய
அள்ளி வாயிலடைகிறார்.
விருந்தின் நெறியைக் கடைப்பிடிக்கத் தெரியாதவரை புலவர் பாடலால் கண்டிக்கிறார்.
இலக்கியத்துக்கு ஓர் அழகிய பொருள் பொதிந்த பாடல்....புலவரின் எண்ணம் அப்படியே நாலு வரிக்குள் அழகுற அடங்கிவிட்டது.
அது.........

முடிச்சவிழ்ந்த முன் குடிமிச் சோழியா!சோற்றுப்
பொருக்குலர்ந்த வாயா!! புலையா,!!
திருவானைக்காக் கோட்டானே! நாயே! குரங்கே!
உனையொருத்திபோட்டாளே! வேலையற்றுப் போய்!!!!
காள மேகமல்லவா!!!! தமிழ் கைகட்டிச் சேவகம் செய்துள்ளது.
பெற்றாளே!!!!! என்று கூறாமல் போட்டாளே!! என மிருகமே....என இன்னுமொரு போடு போட்டுள்ளார்.

புதிய சிந்தனைகளின் ஊற்று ;நம் புரட்சிக் கவி பாரதியார்........

இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்
இது புதுமைக் கருத்தில்லையா? கல்வியின் மகத்துவத்தையும்; இன்றியமையாமையையும் புரிய வைக்கப் பாரதி சொற்களின்றியா?? தவித்தார்.
இக்கவிதையில் உயிரோட்டம் இல்லையா??,பாரதி சொற்களுடன் விளையாடவில்லையா???தன் எண்ணத்திற்கு எழுத்துருக் கொடுக்கவில்லையா???சொல்லவந்த விடயத்தை பாரதி செட்டாகச் சொல்லிவிட்டார்.
இவை ஏன்??, "புதுசு" களுக்குப் புரியவில்லை. எம் தமிழ் மொழியிலா ? சொல்லுக்குப் பஞ்சம்.மலயாளம்; தெலுங்கு;கன்னடம் என மழலைகளைத் தன் சொல்வளத்தால் பெற்ற தாயல்லவா?, எம் தமிழ்!

"பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சு!வெள்ளைப் பறங்கியனைத் துரையென்ற காலமும் போச்சு!எனப் பாரதி புதுமை பேச !

அவர் தாசன் - சுப்பு ரெத்தினம் என்ற பாரதி தாசன்

"ஆடுகிறாய்! உலகப்பா யோசித்துப் பார்!
ஆர்ப்பாட்டக் காரர் இதை ஒப்பாரப்பா!
தேடப்பா ஒரு வழியை என்று சொன்னான்.
செகதப்பன் யோசித்துச் சித்தம் சோர்ந்தான்
ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பராகிவிட்டார் - ஓர் நொடிக்குள்
ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி
ஒப்பப்பர் ஆய் விடுவர் உரையப்பா நீ!

என இலகு தமிழில் எவ்வளவு பொருள் பொதிந்த புதுமைக் கருத்தைக் வெளிக் கொண்டுவந்துள்ளார்.மரபுடன் புதுமைக் கருத்துக்களைச் சேர்த்து கவிதை அமைக்கலாம் என்று முதல் முயன்று வெற்றி பெற்றவர்கள் பாரதியும்; பாரதிதாசனும்.
பாரதியார் - மடங்களிலும் மாளிகைகளிலும் கொலுவிருந்த தமிழைக் கையைப்பிடித்துத் திண்ணைக்கும் ;தெருவுக்கும் கூட்டிவந்து தமிழுலகில் பிடித்திருந்த நோயை விரட்ட நல்மருத்துவராக கவிதை மருந்து கொண்டுவந்த கவி வைத்தியர் ;பொற்கவி பாடிய சித்திரக்கோ!!!சுதந்திரத்தின் சுவையைச் சொற்களில் வடித்தவர்.
அவர் கருத்துக்கள் புதுமை;புரட்சி;சுதந்திரம் விரும்பும் யாவராலும் போற்றப்பட்டது.
மரபு மீறி அவர் கவி எழுத முற்படவில்லை. இலக்கணப் புலமை மிக்க அவருக்கு அத் தேவை இருக்கவுமில்லை.
பரீட்சார்த்தமாக அவரெழுதிய "வசனக்கவிதை" கள் கூட ஆற்றொழுக்கெனச் சீராக இருந்தது.
வெண்பாவில் புகழேந்தி எனப் புகழப்பட்ட "நளவெண்பா" ஆசிரியர் எழில் கொஞ்சும் கவிதைக்கு ஒப்பாரும் மிக்காருமற்றவர்.
காட்சியொன்றைக் கண்முன்னே கொணர்வதுபோல் உவமான உவமேயங்களைக் கையாண்டு படிப்போர் மனதில் பதியவைப்பதில் வல்லவர்.அவர் பாடலொன்றைப் பார்ப்போம்.
சுயம்வரமண்டபத்தில் மன்னர்கள் வரிசையாக இருக்கிறார்கள்.தமயந்தி நுளைகிறாள்.காட்சி இதுதான் கவிஞர் பதியவைக்கிறார்.
மன்னர் விழித்தாமரை பூத்த மண்டபத்தே!
பொன்னின் மடப்பாவை போய்ப் புக்காள்!- மின்னிறைத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறகன்னஞ்செங்கமலப்
பொய்கைவாய் போவதே போன்று........
கண்களுக்குத் தாமரையும்;மண்டபத்தைத் தடாகமாகவும்;தமயந்தியை அன்னமாகவும் உவமித்து;மறக்க முடியாததாகிவிட்டது.

"அபூர்வ ராகங்கள்" திரைப்படத்தில் ஒரு காட்சி சூரி எனும் வைத்தியராக பல பிரபலங்களுக்கு வைத்தியம் செய்பவர் கவியரசர் கண்ணதாசனுக்கும் வைத்தியம் செய்துவிட்டு ஒரு பாடல் தன்னைப் பற்றிப் பாடும்படி கேட்கிறார்.
தமிழுக்கு ஓர் கவிதை!!!!!!

அருமருந்துகள் போன்றவர் தமிழரசராம் திருவள்ளுவர்!
பெருமருந்துயர் பக்தியென்பதைப் பெரியவர் பலர் பேசுவர்!
சுரமருந்தென எதனையோ தரும் சூரி யெனும் மருத்துவர்!
கரி மெலிந்தது போல் மெலிந்தவர் கால காலங்கள் வாழ்கவே!!......
வைத்தியருக்கு மருந்து என்ற விடயத்தை வைத்து யாப்புப் பிசகாமல் வார்த்தெடுத்த கவிதை.இப்படத்தில் சூரி எனும் வைத்தியராக நடிப்பவர் நடிகர் நாகேஷ்..... அவர் தோற்றம் அவரைக்காய் போல் மெலிவு.
அதைக் கவிஞர் "கரி மெலிந்தது" என நயம் பட உரைக்கிறார். யானை மெலிந்தால் பார்க்கச் சகிக்காது.இவர்களல்லவா ! கவிஞர்கள்.
இனிக் கம்பன் பாடல் ஒன்று பார்ப்போம்.பல்லாயிரம் பாடல்கள் பாடி தமிழைச் சிறப்பித்தவர் கம்பர் பெருமான்; அவர் தமிழை ஆண்டு கவிச்சக்கரவர்த்தியானவர்.அவர் ஆற்றலுக்கு எவ்வளவோ பாடல்களைக் காட்டலாம்.ஓர் பாடலை உங்களுடன் பகிர்கிறேன்.

வெள்ளெருக்கஞ் சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி மேலும் கீழும்!எள்ளிருக்கும் இடமின்றி உயிரிருக்கும் இடம்நாடி - இழைத்தவாறே!கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல்உள்ளிருக்கும் எனக் கருதி உடல் புகுந்து தடவியதோ! ஒருவன் வாளி!!!
இராம பாணத்தால் இராவணன் உடல் சல்லடையாகிக் கிடக்கிறது. மண்டோதரி அதைக் காண்கிறாள்.

எள்ளிருக்க இடமில்லாதவண்ணம் இராமபாணம் உடலெங்கும் தைத்துள்ளது.
கம்பன் கற்பனை பெருக்கெடுத்து அந்தக் காட்சிக்கு உயிரூட்டுகிறது.ஓர் அம்பால் உயிரை வாங்காமல் இப்படி உடலெங்கும் அம்பு பாய்ந்ததற்கு காரணம் கற்ப்பிக்கப்படுகிறது."கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்சானகியை மனச்சிறையில் கரந்த காதல்; உள்ளிருக்குதோ????என உடலெங்கும் தேடியது.என மண்டோதரி புலம்புவதாகக் கூறுகிறார்.
கவிஞன் தானும் அனுபவித்துப் படிப்போரையும் அனுபவக்கவைப்பதே!!!கவிதை.
அதனால் தான் கம்பர் சொற்களுக்கு அனுகூலமாக கருத்து ;செம்மை;இனிமை; தெளிவு, நடையெழில்;இலக்கிய இலக்கணப் புலமை;புராண வரலாறுகள் நாட்டு நடப்பு அறிந்திருத்தல் ஆகியன உடையோரே கவிதை எழுதும் தகுதியுடையோர் என்கிறார்.
சிறந்த இயல் இசை நாடக விமர்சகர் "சுப்புடு" ;இன்றைய புதுக்கவிதை பற்றிக் குறிப்பிடும் போது" அவிழ்த்து விட்ட அரபுக்குதிரை" என்கிறார்; அவற்றின் ஓட்டம் பயனற்றது; புரியவேண்டியவர்கள் புரிய வேண்டும்.
இன்றைய புதுக்கவிதையாளர்கள்; தாங்கள் நினைத்த போக்கில் எழுதுகிறார்கள். அவர்களுக்கு இலக்கணம் என்பதைப் பற்றியே கவலையில்லை; ஏன்,,?? அது தெரியாததும் கூட; பொருளுக்கிசைய எழுதுகிறோம் என்று ;சொல்லவந்த விடயத்தைத் தலைகீழாக்கி விடுவார்கள்.
உதாரணம்:-
உண்ண உணவும்!
டுக்க உடையுமின்றிய சிறுவன்;
தந்தையும் தாயுமிழந்து இன்று
சொந்த மண்ணில்அகதியானான்
.
இது ஒரு புதுக் கவிதையாம்.....இதைச் சற்று ஆய்வோம்.
உண்ண உணவும் உடுக்க உடையுமின்றிய சிறுவன் தந்தையையும் தாயையும் இழக்கிறான்.
உண்ண உணவும் உடுக்க உடையும் இல்லாததால் அச்சிறுவன் தந்தைதாயை இழந்தான் என்பதே அதன் கருத்து.
இது எப்படி??ச்சாத்தியமாகும்.கருத்தையே தலை கீழாக்கிவிட்டார்கள்;
தந்தை தாயை இழந்து; உண்ண உணவும் உடுக்க உடையும் அற்ற சிறுவன் என்பதே!!!உலகுக் கொப்பும்.
இதுவே இன்றைய புதுக்கவிதையாளர்களால் ஏற்படும் கேடு. எழுவாய் ஏது??? பயனிலை ஏது???என்பதின்றி மனதில் பட்டதையெல்லாம் எழுதி நிரப்புவதே!!!! அவர்கள் கூத்து.

இதன் தலைப்பு
ஊரும் நாட்கள்!

வாசுதேவன் கவிதை (யாம்)

இன்று எனது முறையாய் இருக்க வேண்டும்;
அவன் என்னிடம் வந்தான்
அவன் கேள்விகளுக்கு
அவன் விரும்பிய பதில்களை
என்னிடம் எதிர் பார்த்தான்
என் நியாயங்களில் பொருட்டு
அவன் எதிர் பார்ப்பைச் சிதறடித்தேன்
அவன் ஒரு முண்டமாய் மாறினான்
தோலை உரித்து
என் மனிதனை
அவன் முன் வைத்தேன்!
அசௌகரியம் தாங்க வொண்ணாது
முண்டம் திடீரென
ஒரு துப்பாக்கியாய் மாறியது.
அதுவரை
இரும்பென உறுதிகாத்த நான்
இதோ
அதன் காலடியில்மெழுகாய்
உருகி வழிகிறேன்
ஐந்தடி எட்டங்குலமும்
எழுபது கிலோ
எடையும் கொண்டதொரு
உருப்படி என்பதற்கப்பால்
எந்தப் பெறுமதியும்
எனக்கில்லாது போயிற்று
ஒரு இலையானாய்
நசுக்குண்டு கிடந்தேன்
அறுவடைகள் சகிதம்
வாசலில் அவன் தலைக் கறுப்பு மறைய
கூட்டிப் பொறுக்கி அள்ளி எடுக்கிறேன்;
என்னை!!

தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா???இவர் ஏன்.???இப்படி முக்கி முனகுகிறார்;இப்படித்தான்....
இன்று பல கவிதைத் தொகுப்புக்கள் ;வெறும் புலம்பலாகவே!! இருக்கிறது.
நூறு பக்கத்தில் ஓர் கவிதைத் தொகுப்பெனில் பக்கத்துக்கு 25 சொல்; இப்படிப் புரிந்து கொள்ள முடியாத புலம்பலாக நிரப்பப் பட்டிருப்பதும்;எப்போதுமே எதியோப்பிய வறுமை போல்"பிலாக்கன ஒலியும்" ;இவை என்னைப் போன்றோருக்கு! வெறும் ஏமாற்றமும்;வேதனையுமே!!!
இப்படி ஆயிரம் உதாரணம் காட்டலாம்.
எப்போதாவது ஒன்று....அது போதாது...;கவி உலகம் தன்னை மாற்ற வேண்டும்...;
இன்றைய "புதிசுகள்" யாப்பைப் பற்றியோ எதுகை;மோனையைப் பற்றியோ கவலைப்படுவதில்லை.
தாங்கள் எழுதுபவை செய்யுளா?, வசனமா?? என்று அலட்டிக் கொள்வதில்லை. சொற்களை வைத்து விளையாடுகிறார்கள். உணர்ச்சியைக் கொட்டுகிறார்கள். மொத்தத்தில் இவற்றை யாரும் படிக்க வேண்டுமே என்று எண்ணுவதும் இல்லை.
இவை இலக்கியத் தரம் பெறவேண்டுமே எனச் சிந்திப்பதுமில்லை. எவரெல்லாம் எதோ செய்கிறார்கள்; நாம் இதையாவது செய்வோம் எனக் கிறுக்கிவிட்டு "கிறுக்கர்கள்" போல் இருக்கிறார்கள்.
அதாவது துக்ளக் ஆசிரியர் கூறியது போல் தமிழில் எதுவுமே எழுதத் தெரியாதவர்கள் புதுக் கவிதை எழுதுகிறார்கள்.
இன்று ஐயாயிரம் ரூபாவும்; 25 பேரை ஓரிடத்தில் கூட்டும் தகுதியும் இருந்தால் எவருமே கவிராயர்கள் ஆகிவிடலாம்.
நவீன இயந்திர யுகத்தில் அச்சு வேலைகள் மிக இலகுவாக்கப்பட்டதால் ; புற்றீசல் போல் பத்திரிகைகள் உருவாகியுள்ளன.
அவற்றில் இடத்தை நிரப்ப ;இந்தப் "புதிசு" உதவுகிறது.புதிசை எழுதியவரும் அவர் சார்ந்தோரும் வாங்குவதால் சில பிரதிகள் விலைபோகும்.
இது வெறும் கல்லாப்பெட்டி நிரப்புபவருக்கும் ,கஸ்டமின்றிப் புகழ் தேடுபவருக்கும் உள்ள உடன்படிக்கையே!!! இதனால் இலக்கிய உலகுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
ஆனால் இவர்கள் ஒன்று புரிய வேண்டும்.மரபுக்கவிதை ஆர்றலுக்குத் தடை என்று; இந்த இலகு வழியைத் தொடர்ந்து நாடாமல்; மரபுக்கவிதைகளையும் படித்து அதில் மரபை மாத்திரமன்றி ஏனைய கவித்துவத்தின் அழகியல் அம்சங்களையும் அறிந்து திருந்த வேண்டும்.
இன்றைய வெகுசனப் பத்திரிகைகளில் வரும் பல கவிதை விமர்சனங்களைச் செய்வது முழுக்க முழுக்க கவிஞர் எனத் தன்னைத் தானே அடையாளம் காட்டிய ஒருவராக இருப்பது வேதனை.
ஒரு திரைப் படத்தை இன்னுமொரு இயக்குநர்;விமர்சிப்பதில்லை.
ஒரு பாடகனை இன்னுமொரு பாடகன் விமர்சிப்பதில்லை; ஒரு கதாசிரியரை இன்னுமொரு கதாசிரியர் விமர்சிப்பதில்லை.....
ஆனால் இந்த கவிதை மாத்திரம் இன்னுமொரு கவிஞரென்பவரால் அதாவது அதே கூட்டத்தையோ;குழுவையோ சேர்ந்தவரால் விமர்சிக்கப் படுவது;
மிக வினசமானதுடன்;நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகிறது;
ஆளுக்கு ஆள் முதுகில் தட்ட வகை செய்கிறது.
"இந்தியா ருடே" யில் பல தடவை பார்த்துள்ளேன்; மாறி மாறி முதுகில் தட்டியதை!!!!இந்த நவீன கவிதையுருவை;இன்னுமொரு இந்த நவீனத்தை எழுதுபவரால் தான் புரிந்து கொள்ளமுடியும்;உணரமுடியும் என்பது வேடிக்கையாக உள்ளது;இவர்களின் நம்பகத் தன்மை அடிபட்டுப் போகிறது.
அதிலும் தமிழ்க் கவியுலகினர் "கூழுக்குப் பாடுவதில்" ஒப்பாரும்;மிக்காருமற்றவர்கள்.
கம்பனையும்,பாரதியையும்;கண்ணதாசனையும்.....சாதாரண அறிவு படைத்தோர்;உணர்ந்தார்கள்;விமர்சித்தார்கள். ஆனால் இந்தபுதுக் கவிராயர்களை;என்னுமொரு கவிராயர் தான் விமர்சிக்க முடியும் ;உணரமுடியுமென்பது.....வேடிக்கை மிக்கது.

ஒன்று என்றும் உண்மை. "நிழலின் அருமை வெய்யிலில் போல்" இப் புதிது ,வந்த பின் "OLD IS GOLD " என கம்பனையும்;பாரதியையும் தேடி ஓட வைத்துள்ளது.

இன்று புதுக்கவியுலகு ஆரம்பம் போல் இல்லை.ஓர் தேக்கநிலை ஏற்பட்டுள்ளது.கண்ணதாசன் கூறியது போல்"எழுத முன் படியுங்கள்".

இதுவே புதுக் கவிராயர்கள் தெரிய வேண்டியது.

குறிப்பு: இக் கட்டுரை "பாரிஸ் கல்வி நிலைய 7ம் ஆண்டு மலரில்; 31- 08- 1993 வெளிவந்தது.

பலர் தடி;கம்பு ஏன் துப்பாக்கியுடன் கூட ஓடிவரலாம்.உனக்கென்ன தெரியுமென...ஆனால் பொறுமையாக எனக்குப் புரிய வைக்கவும்.
Labels: poems

Saturday, December 02, 2006