Sunday, October 01, 2006

கலைமகளும் பாரதியும்



ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளிபெறு நாடு
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோண லந்த துருக்கம் மிசிரம்
சூழ் கடற்கப் புறத்தில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியில் ஒளிமிகுந் தோங்க!

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்!
ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்
ஓங்கு கல்வி உழைப்பை மறந்தீர்!
மானமற்று விலங்குகள் ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வெனலாமோ!
போனதற்கு வருந்துதல் வேண்டா
புன்மை தீர்க்க முயலுவம் வாரீர்!

இன்னறுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் அமைத்தல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக் கெழுத்தறிவித்தல்


நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப் பெருந் தொழில் நாட்டுவம் நாரீர்!

"என் பாட்டுத் திறத்தாலே வையகம் பாலித்திட வேண்டுமென"-பராசக்தியை வேண்டிய பாரதியாரின் எண்ணம்;எழுத்து எல்லாம்; தமிழ்மக்களின் கல்வி எழுச்சியும்; அறிவின் முதிற்சியும் வேண்டுவதாகவே!
இருந்துள்ளது;
கல்வி கேள்விகளில் சிறக்கும் சமுதாயமே! எதிர்கால உலகின் வளர்ச்சியுடன்,தாமும் வளரும் இல்லையேல் தேங்கிவிடும் ,இதற்கு எல்லோருக்கும் கல்வி!
"மீனைப் பிடித்துக் கொடுப்பதிலும், பிடிக்கக் கற்றுக் கொடு" என்ற கோட்பாட்டுடன்;பாரதி நம் சமுதாயத்தின் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களையும் ; கல்வியால் மேம்படச் செய்ய அவர்கள் வறுமை;முன்னெற்றத்துக்குத் தடையாக இருக்கக் கூடாதென்பதால்.......
உணவிலும் கல்விக் கண்ணைத் திறக்க வேண்டியதன் அவசியத்தை ; உணர்த்திப் பாடினார்.
முற்றிலும் இல்லாவிடிலும் தமிழ்ச்சமுதாயம் இப்போ தரணியில்;தன்னை நிலை நிலை நிறுத்தியுள்ளது.
பாரதியின் பெரும் ஆசை " பெண்களின் முன்னேற்றம்" ;அது திறம் பட நடந்தேறியுள்ளது.
இந்த "நவராத்திரி" காலத்தில்- சக்தி உபாசகரான "பாரதி" யையும் நினைவு கூர்வோம்.

14 comments:

குமரன் (Kumaran) said...

மிக நல்ல பொருத்தமான பாடல் ஐயா. நீங்கள் சொல்வது உண்மையே.

கானா பிரபா said...

வணக்கம் யோகன் அண்ணா

சகலகலாவல்லி மாலையுடன் எங்கள் வீட்டில் பாரதியின் சக்தி துதிகளும் நவராத்திரி காலத்தில் பாடப்படுவது வழக்கம்.

பதிவிற்கு நன்றி அண்ணா

வெற்றி said...

நல்ல பதிவு யோகனண்ணை.

கருப்பு said...

பாரதியை நினைத்தாலே எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்துக்கும்! பாரதியை மீண்டும் நினைக்க வைத்து விட்டீர்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரன்!
எளிமையான இப்பாடல்கள்; நவராத்திரிகாலத்தில் பாடப்படுவதால்; ஓர் ஈர்ப்புண்டு, பாரதியிலும் பிரியம். அதனால் தெரிவு செய்தேன்.
நன்றி
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பிரபா!
நம் சரஸ்வதிபூசைக்குச் சுண்டல் இல்லாமல் இருக்கும், சகலகலாவல்லி மாலையும்;பாரதியில் சக்தி துதிகளும் இல்லாமல் இருந்ததில்லை. உங்கள் பதிவிலும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.
நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
உங்களுக்கு பிடிக்காவிடிலும் ,சொல்லவேண்டும். முகமன் வேண்டாம்.பிடித்திருந்தால் சந்தோசமே!
என்னால் முடிந்ததே! தட்டெழுத்து ,வெட்டி ஒட்டல் வெகுசிரமமாக இருக்கிறது. வரவுக்கு நன்றி!
யோகன் பாரிஸ்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஐயா கருப்பு!
காலத்தைப் பாருங்க!உமக்கு பாரதி என்றால் உடல் சிலிர்க்கிறது; எனக்கோ "விடாது கருப்பு" என்னால் சிலிர்க்குது.உண்மையில் உங்கள் எழுத்தின் பரமரசிகன்;உங்கள் எழுத்துக் கட்டாயம் தேவையானது; ஆனால் எந்நிலையிலும் தனிமனித தாக்குதலாக இருக்க வேண்டாம். இது என் அன்பான வேண்டுகோள்.
என் வீட்டுக்கு முதல் முதல் உங்களைப் பாரதி கூட்டி வந்துள்ளார். எனக்கும் இந்தப் "பாட்டு வைத்தியரை" மிகப்பிடிக்கும்; உங்களைக் கூட!!!!
தங்கள் ரசிகன்
யோகன் பாரிஸ்

சின்னக்குட்டி said...

பாரதி காளி உபசாகனும் என்றும் கேள்வி பட்டிருக்கேன்... ரஸ்ய புரட்சியின் போது ஜார்ஜ் மன்னின் அழிவை பாரதி விவரித்து பாடினதாக கேள்விப்பட்டிருக்கேன்... யோகன் இந்த பதிவுக்கு நன்றி

கடல்கணேசன் said...
This comment has been removed by a blog administrator.
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டி அண்ணர்!
ஆம்;பாரதி ,காளி உபாசகர் தான், சக்தியை எல்லாவடிவிலும் தொழுதவர்.
மேலும் ருசியப் புரட்ச்சியில் ஜார் மன்னர் வீழ்ச்சியையே,பாடிமகிழ்ந்தவர். ஜார்ஜ் அல்ல!!!
ஜார்ஜ் ஆங்கிலேய மன்னர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
நன்றி
யோகன் பாரிஸ்

கடல்கணேசன் said...

வணக்கம் திரு. யோகன்.

உங்களைப் போல் நல்ல தமிழில் எழுதவேண்டும் என்ற ஆவலை, உங்கள் பதிவுகள் என்னிடம் ஏற்படுத்தியுள்ளன. நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கடல்கணேசனுக்கு!
இதைத் தான் "இக்கரைக்கு அக்கரை" என்கிறாங்களோ!!!;உங்களில் பலர் போல் எழுதவரவில்லையே என நான் ஏங்க !!!!!;நீங்க என் எழுத்தைப் பின்பற்ற வேண்டுமென ஆசைப்படுகிறீர்கள்.
சில சமயம் வாசிக்க யாருமில்லாதது போல்;உள்ளதால் எழுதுவதை நிறுத்தி வாசிப்புடன் நிற்க்க எண்ணுவதுமுண்டு."என் எழுத்துக்கும் ரசிகர் - அதிசயம்"
எழுத்துத் துறையில் மிக அனுபவமுள்ள உங்கள்;பாராட்டு மகிழ்வைத் தருகிறது.
ஏதோ முதல் முறை வந்துள்ளீர்கள்.
கருத்துக்கு; நன்றி
யோகன் பாரிஸ்

ரவி said...

பதிவுக்கு நன்றி யோகன்...