Tuesday, June 19, 2007

கருத்துக் கணிப்பும் ….பிரன்சுப் பொதுத் தேர்தலும்...



பிரான்சின் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் , அதிபர் தேர்தல் வெற்றிச் சூட்டுடன் முதற்சுற்று யூன் 10 லும், இரண்டாம் சுற்று
சென்ற 17 யூனிலும் நடைபெற்று , அரசியல் கருத்துக் கணிப்புக்க ளையும், ஆரூடங்களையும் பொய்யாக்கி நிறைவுக்கு வந்துள்ளது.

அதிபர் தேர்தலில் நிக்கோலா சார்கோசி (Nicolas SARKOZY) பெற்ற பெருவெற்றியை
வைத்தும் முதற் சுற்றையும் வைத்து சொன்ன கணிப்புகளும் ஆரூடங்களும் தவிடுபொடியாகின.

அதிபரின் கட்சியினர் தங்களுக்கு வரப்போகும் வெற்றி , சுனாமியை ஒத்தது என மிகக் கர்வமாகத் தான் இருந்தார்கள்.
அதற்கேதுவாக முதற்சுற்றில் 450 இடங்களில் முதன்மையாகவும்
வந்தார்கள். ஆனாலும் பிரான்ஸ் வாக்காளர்கள் மிருக பலம் கொடுக்காமல், நல்லதொரு எதிர்க்கட்சியும் இருக்க வேண்டுமெனத் தீர்ப்பளித்து, ஆரூடங்களையும் பொய்பித்து விட்டார்கள்.





அத்துடன் அதிபருக்கு ஒரு எச்சரிக்கை மணியையும் , அவர் கட்சியில் இரண்டாவது முக்கியமானவர் எனக் கருதப்படுபவரும்,முன்னாள் பிரதமர்,இன்னாள் அமைச்சர், போர்தோ நகரபிதா (சுற்றுச்சூழல்,அபிவிருத்தி,கட்டுமான ம்) அலன் யூப்பே (Alain JUPEE) யை தோற்கடித்துள்ளார்கள். 18-06-2007 அன்று அவர் தன் இராஜினாமாவை , தேர்தல் நேரத்தில் பிரதமர் கூறியவண்ணம், தோல்வியடைந்தால் இராஜினாமா செய்ய வேண்டுமென்பதற் கிணங்க, செய்துள்ளார்.

ஊழல் குற்றத்திற்காக தண்டனைபெற்று மறியலில் இருந்து, விடுதலையானவருக்கு, அதிபர், மந்திரி பதவி கொடுத்து பாதுகாப்பான இடத்தில் வைக்க முற்பட்டார். ஆனால் மக்கள் அமைதியாக வீட்டுக்கே அனுப்பிவிட்டார்கள். இவரெல்லாம் வெல்லுவார் எனவே பத்திரிகைகள் கூறின.


அதிபர் தேர்தலை அளவு கோலாகக் கொண்டதால், அதிபரின் வலது சாரிக் கூட்டு, மிக அதிக இடங்களைப் பிடிக்கும், எனக் கணக்குப் போட, நேரேதிராக எதிர் கட்சியான சோசலிசக் கட்சியும் அதன் கூட்டுக் கட்சிகளுமான இடது சாரிகள், எவருமே எதிர் பாராவண்ணம்...சென்ற 2002 ஆண்டுத் தேர்தலிலும் ,அதிக இடங்களைப் பெற்று, அதிபர் தேர்தலின் பின் துவண்டு போயிருந்த அவர்கள், மீளுயிர் பெற்றுள்ளார்கள். அவர்களே எதிர் பாராவெற்றி. ஆனால் அதிபர் தேர்தலில் அவர்களுக்குக் கிடைத்த
17 மில்லியன் வாக்கு சிதறாமல் கிடைத்துள்ளது.

இப்பொதுத் தேர்தலில் வரலாற்றில் இல்லாவண்ணம் முதல், இரண்டாம் சுற்றுக்களுக்கு 40 % வாக்களிக்கவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது. இதே வேளை அதிபர் தேர்தலுக்கு 85% வாக்களித்தார்கள். இதையும் மறக்கக் கூடாது.

நிக்கோலா சார்க்கோசி போன்ற சற்றுக் கடும்போக்கான அதிபர் ஒருவர் வேண்டுமென விரும்பிய வாக்காளர்கள், மிருகபலம் மிக்க பாராளுமன்றம் தேவையில்லையென நினைத்தது. வரவேற்கத் தக்கது.



ஏற்கனவே இருந்த இடங்களில் 60 இடத்தை ஆளும் அதிபர் கட்சி இழந்ததற்கு, அவர்கள் கொண்டுவர இருக்கும் விற்பனை வரி உயர்வே என இவர்கள் கட்சிச் சகாவும் முன்னாள் பிரதமருமான யோன் பியர் ரவரன் (Jean-Pierre RAFFARIN) கூறிவிட்டார். அதாவது இவர்கள் புதிய திட்டதில் ஒன்று சரிப்படாது. என்பதனை தேர்தல் சூட்டுடனே உணரத் தலைப்பட்டுவிட்டார்கள்.

அதிபர் கட்சி எதிர்பார்த்த பெரும்பான்மை இல்லாவிடிலும், அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கிறது. தாங்கள் கூறியவற்றை உடனே நடைமுறைப் படுத்த உள்ளோம். என சற்று தொங்கிய முகத்துடன் ஆட்சியமைக்க உள்ளார்கள்.

ஆளும் அதிபர் கட்சியின் பல முக்கிய புள்ளிகள் தோல்வியத் தழுவியுள்ளார்கள். அதிபர் தேர்தல் முடிந்து 1 ½ மாதத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு. கருத்துக்கணிப்பால் கணக்கிட முடியாச் சரிவு.

அதிபரின் கட்சி ஆதரவாளர்களில் பலர் நல்ல பலமான எதிர்கட்சி நாட்டுக்கும், மக்களுக்கும் நல்லது என இதை வரவேற்கிறார்கள்.

ஒரு வெளிநாட்டுவாசியாகிய நான்,இவர்கள் வெளிப்படையான இனவாதத்தை விரும்புவதில்லை. எனினும் பிரான்ஸ் வாக்காளர்கள் தீர்ப்பு, கணிப்புக்களைத் தாண்டி மிக மகிழ்வைத் தந்தது.

இத்தேர்தலில் மிகக் குறைந்த 28 வயதில் ஒரு உறுப்பினர் தேர்வாகியுள்ளார், மிகக் கூடிய வயது 78. அத்துடன் 108 பெண்களும் தெரிவாகியுள்ளார்கள்.

அத்துடன் 50 வருடங்கள் தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து உறுப்பினராக இருந்த ஒரு குடும்பத்தினரையும், ஓரம் கட்டியுள்ளார்கள். இவர்கள் யாவரும் செய்தித்துறையின் கண்ணில் படாதவர்கள்.

இவ்வண்ணம் கருத்துக்கணிப்பின் கண்ணைக் கட்டி, பிரான்ஸ் தேர்தல், எந்த உயிரையும் காவு கொள்ளாமல் அமைதியாக நடந்ததே தெரியாமல், நிறைவுபெற்றுள்ளது.

நம் நாட்டவர்கள் படிக்க வேண்டியது.

ஆளும் அதிபர் வலது சாரிகள் (UMP) ,345 இடத்தையும், எதிர்க் கட்சியான இடது சாரிகள், 232 இடங்களையும் பெற்றுள்ளார்கள். இவர்கள் மக்களுக்கு நல்லாட்சி தருவார்கள் என நம்புவோம்.


படங்கள்:


1- பிரான்ஸ் அதிபர் நிக்கோலா சார்க்கோசி

2- பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பெலன் (Francois FILLON)

3- முன்னாள் பிரதமர், தோல்வியுற்ற மந்திரி அலன் யூப்பே

4- சோசலிச கட்சி தலைவர் பிரான்சுவா ஒல்லாண்ட்( Francois HOLLANDE), இடது சாரிகள் சார்பில் அதிபர் தேர்தலின் நின்று தோற்ற செகலன் ரோயல் (Segolene ROYAL)

5- முன்னாள் பிரதமர், அதிபர் கட்சி முக்கிய புள்ளி யோன் பியர் ரவரன் ( jean pierre raffarin )

4 comments:

வைசா said...

எப்படியோ, யோகன், கருத்துக் கணிப்பின்படி வலதுசாரி அணி வெற்றி பெற்றுவிட்டதல்லவா? :-))

பல கருத்துக் கணிப்புகள் இப்படித்தான். மக்களின் மனநிலையைச் சரியாகப் பிரதிபலிக்காமல் போய் விடுகின்றன.

வைசா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை பெரும்பாலும் பிரதிபலிப்பதில்லை; என்றபோதும்; அதற்காக அப்பாவிகளை எரிக்கிறார்கள் நம்மவர்கள்.
சந்தோசப்படுவோம். இங்கு இந்தப் போக்கில்லை.

சின்னக்குட்டி said...

கருத்து கணிப்பு படியே கடுபோக்கான வலது சாரிகள் தானே வென்றுள்ளனர்?

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சின்னக்குட்டியர்!
வலதுசாரிகள் வெல்வார்கள் எனக்கூற ஒரு கருத்துக்கணிப்புத் தேவையே இருக்கவில்லை. குறிப்பாக அதிபர் தேர்தலின் பின்.
ஆனால் முதற்சுற்றைக் கருத்தில் வைத்து; சுமார் 450 இடங்கள் ;அதிபர் கட்சிக் கூட்டுக்குக் கிடைக்குமென
எதிர் பார்த்துக் கணிப்புக் கூறியது பற்றியே; நான் எழுதினேன்.
அதைத் தான் " மிருக பலம்" எனக் குறிப்பிட்டேன்.