Saturday, June 09, 2007

புனித மைக்கல் தேவாலயம்-Normandy யின் கட்டடக் கலையின் இரத்தினம்




வட பிரான்சின் நோர்மண்டிப் பகுதியில் , Couesnon நதியின் முகத்துவாரத்துச் சதுப்பு நிலத்தில் உள்ள ஓர் கல்மலையே
இந்த புனித மைக்கல் தேவாலயம் அமைந்துள்ள “MONT St. MICHEL” ஆகும். இதன் அமைப்பு மற்றும் கட்டிய காலப்பகுதி
மற்றும் இம் மலையில் இதைக் கட்டிய விதம் போன்றவற்றால்
இதை மேற்கின் அதிசயமாக நோக்குகிறார்கள்.



கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்
இம்மலைக்குச் செல்ல சிறு மணல் மேடு இருந்துள்ளது. அதுவும்
ஒரு நாளைக்கு இரு தடவை கடல் வெள்ளம் பெருகும் போது
மூடிவிடுவதாக இருந்துள்ளது. அப்போது ஒரு தீவுபோல் தான் இது காட்சிதரும்.



ஆரம்பகாலத்தில் இடுகாடாக இருந்த இந்த மலைப்பகுதி , AUBERT- BISHOP OF AVRANCHES ன் கனவில், புனித மைக்கேல் தோன்றி தனக்கொரு தேவாலயம் ,இம்மலையில் அமைக்கும்
படி கேட்டுக் கொண்டதால் 16-10-709ல் ஒரு சிறிய தேவாலயமாகக் கட்டப்பட்டது.


பின் நோர்மண்டி மன்னர் விருப்பப்படி 966ல் , மதகுருக்களின்
மேற்பார்வையில் றோமபாணி தேவாலயம் எழுப்பப்பட்டது.
11,12,13 ம் நூற்றாண்டுகளின் இத் தேவாலயம் பெருப்பிக்கப்பட்டு
பல வசதிகளும் செய்யப்பட்டது.
14ம் நூற்றாண்டு இதைச் சுற்றி இராணுவப் பாதுகாப்புக்குரிய கோட்டை கொத்தளங்கள் கட்டப்பட்டது.
சுமார் ஆயிரம் வருடங்களாக மக்கள் பாதயாத்திரையாக இவ்வாலயம் வருகிறார்கள். புனித மைக்கல் அருள் நோக்கி வரும் இந்த யாத்திரையை சொர்க்கத்தின் பாதை என வர்ணிப்பர்.
19ம் நூற்றாண்டுப் பிரன்ஸ்சுப் புரட்சியின் போது, இதன் சிலபகுதிகள் சிறைக்கூடமாக மாற்றினர்.



1966ல் ,இவ்வாலயத்தின் 1000 ஆண்டு நிறைவுக் கொண்டாட்டத்தின் போது, கிருஸ்தவக் குருக்களின்
பயிற்சி, தியானக் கூடமாக ஆக்கப்பட்டு இன்றுவரை செயல்படுகிறது.
2001ல் இருந்து ஜெருசலேமின் குருமடத்தினரால் இறைவழிபாட்டுப் பொறுப்பேற்கப்பட்டு தினமும் பூசை நடை பெறுகிறது. ஏனைய நேரங்களில் கட்டணம் அறவிட்டு காட்சியகமாகச் செயல்படுகிறது.
இம்மலையின் தென்பகுதி சிறு குடியுருப்பில், தற்போது 50 பேர்
பதிவு செய்யப்பட்ட குடியிருப்பாளர்களாக இருக்கிறார்கள்.
1979ல் யுனஸ்கோ பாதுகாக்க வேண்டிய உலகின் உன்னதமாகப் பிடகடனப்படுத்தியுள்ளது.


இதனைப் பார்க்க 3 தடவை சென்ற போதும், 85/87ல் சென்ற போது பிரான்சில் என் ஆரம்பகாலமாதலால், இது பற்றி மிக அறிய முடியவில்லை.
பின் தொலைக்காட்சியிலும், இப்போ நேரிலும் பார்த்த போது
பிரமித்தேன்.
தஞ்சைப் பெரிய கோவில் என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்
தியது.
அதைவிட இது என்னை வியக்கவைத்தது. காரணம் அது சம தளத்தில் கட்டப்பட்டது. இதுவோ ஒரு சிறுமலை சுமார் 300 மீட்டர் உயரம்... கடலுள்.....சிலபகுதி மிகச் செங்குத்தானது. இலங்கையில் சிகிரியாக் குன்றில் பழைய கட்டிடங்கள் அழியாதிருந்தால் இப்படி இருக்குமோ?


மனம் வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது இக்கட்டிடம்.
நமது எத்தனையோ பழைமையான , வியத்தகு கலைகள், சாதனைகள் அழிய விடுகிறோம்.
இவர்கள் இன்றும் திருத்தம் செய்து பேணுகிறார்கள். பழைமையின் பெருமையை உணர்ந்து போற்றுவது மனதுக்கு
இதமாக உள்ளது.



இம்மலையைச் சுற்றியுள்ள பல ஏக்கர் நிலப்பரப்பு, கடல், ஆறு இரண்டும் கொண்டுவந்து சேர்த்த வண்டல் மண் நிறைந்த ஆபத்தான அசையும் சேற்றால் ஆன புதைகுழிகளையுடையது.
மிகத் தேர்ந்த அனுபவம் மிக்க வழிகாட்டிகளுடன் கடல் வற்றி வடிந்திருக்கும் போது நடந்து செல்லலாம்.



இப்பகுதியில் குதிரை வளர்ப்போர் ,தங்கள் குதிரைக்குக் கால்பலத்துக்காக இச்சதுப்புநிலத்தில் நடைபயில்வார்கள்.தரைப்பகுதியின் புல்வளத்தை ஆடுவளர்ப்போர்
பயன்படுத்துகிறார்கள்.


கடல்,மலை, பழைமைமிக்க கட்டிடக்கலை அத்துடன் இறைஇல்லம் என எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற சுற்றுலாத்
தலமானபடியால்....
உலகம் பூராகவும் இருந்து வருடம் 3 மில்லியன் மக்கள் வந்து பார்த்து ரசிக்கிறார்கள்



குறிப்பாக தினமும் இருதரம் வற்றி நிரம்பும், இம்மலையைச் சூழ்ந்துள்ள நிலப்பரப்பு ஆச்சரியமாக இருக்கும். தரவையாகக் கிடந்த நிலப்பரப்பு சில நிமிடங்களில் நீரால் நிரம்புவது பிரமிப்புடன் பார்த்துக் களிக்கக் கூடியது.

இத்தடவை பல இந்தியப் பயணிகளையும் காணக்கூடியதாக இருந்தது.



அங்கே ,நான் எடுத்த படங்களில் சில.......

(புனித மைக்கல் சிலை, பறவைப் பார்வைப் படம் எனதல்ல!இணையத்தில் பிரதி செய்தது.)



































































20 comments:

வி. ஜெ. சந்திரன் said...

அழகான காட்சிகள், மற்றும் அறிமுகம். ஐரோப்பா வந்தால் பார்க்க முயற்சிக்க வேண்டும்.

தென்றல் said...

ஆச்சரியமான தகவல்கள், யோகன் - பாரிஸ்!

படங்களை அருமையாக தொகுத்து வழங்கியதற்கு நன்றி!

வடுவூர் குமார் said...

நல்ல படங்கள்.இதற்கு முன்பு இது கடல் சூழ இருக்கும் படத்தையும்,வற்றியிருக்கும் போது உள்ள படத்தையும் இணையத்தில் எங்கோ பார்த்தது.
விபரங்களுக்கு நன்றி.
நிறைய நேரம் செலவழித்து இருக்கிறீர்கள் போலும்,

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சந்திரன்!
நேரில் பார்த்தால் நிச்சயம் பிரமித்து
ரசிப்பீர்கள். சந்தர்ப்பம் கிடைத்தால்
தவறவிட வேண்டாம்.
இங்கே எடுத்த படங்களை வைத்து மேலும் இரு பதிவு போடுவேன்.
பார்க்கவும்.
வரவு கருத்துக்கு நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

தென்றல்!
படங்களும், தகவலும் பிடித்ததா?
இதைப் பதிவாக்க படங்களைச் சீராகப் போட வெகுநேரமெடுத்தது.
நீங்கள் இதை உணர்ந்து ரசித்துப் பாராட்டுவது மகிழ்வாக உள்ளது.
வரவு கருத்துக்கு நன்றி!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இதற்கு முன்பு இது கடல் சூழ இருக்கும் படத்தையும்,வற்றியிருக்கும் போது உள்ள படத்தையும் இணையத்தில் எங்கோ பார்த்தது.//

நிச்சயம் பார்த்திருப்பீர்கள், இவை பற்றி இணையம், தொலைக்காட்சி
தகவல்களைத் தந்துகொண்டே இருக்கின்றன.

உண்மை...வெகு நேரம் செலவானது
படங்களை ஒழுங்காகப் போட மிகக் காலதாமதமானது.

இவை 250 படங்களுள்
தெரிவு செய்தது .

நான் படங்களைக் கூடுதலாகப் பிடிப்பேன். இப்போ DIGISTAL ல் அதற்கு மிக வசதி.

வைசா said...

நல்ல தகவல்கள். ஏற்கனவே வாசித்திருந்தாலும படங்களில் பார்த்திருந்தாலும்், உங்கள் படங்கள் பிரமிக்க வைக்கின்றன. அது சரி, சில படங்கள் மூன்றாம் தேதியும் சில அடுத்த நாளும் எடுக்கப்பட்டுள்ளன. இரு நாட்கள் அங்கு நின்றீர்களா?

வைசா

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வைசா!
படங்கள் பிடித்திருந்தால் மகிழ்வே!;இன்னுமொரு தரமென இல்லாமல்; நானும் எவ்வளவு படங்கள் எடுக்கமுடியுமோ அவ்வளவு எடுத்துத் தேர்வு செய்து போட்டேன். வீடியோவும் எடுத்தேன். இன்னும் இரு பதிவு வேறு விடயங்களுடன் இங்கே எடுத்த படங்களுடன் போடவுள்ளேன்.
நான் ஒரு இரவும் இரு பகலும் தங்கினேன்; காலை 8.30 தொடர்வண்டி; பேருந்து எடுத்து மதியம் 12.30
சென்றடைந்தோம். அவ்விடமிருந்து பேருந்துகள் 5 மணிக்குப் புறப்பட்டுவிடும். எனக்கு கடல் நிரம்புவதைக் காண மிகவிருப்பம். அது இரவு 8 மணிக்கே( நேரங்கள் குறிப்பிட்டிருக்கும்)அதைப் பார்ப்பதானால் ஒன்று சொந்த வாகனத்தில் வந்திருக்க வேண்டும். இல்லையேல் தங்கவேண்டும்.
அதனால் இரவிலும் எப்படியிருக்குமென பார்க்கவும். தங்கினோம்.அதற்காக ஏற்கனவே விடுதி ஒழுங்கு செய்து விட்டே சென்றேன். இப்போ விடுமுறைகாலம் முன்கூட்டிப்
பதிவு செய்வது நன்று. அதனால் ஆற அமர பார்த்துப்
படங்கள் எடுத்து; மிக நிதானமாக கடல் காற்றைச் சுவாசித்து...வந்தோம்.
ஆனால் ஒரே நாளிலும் பார்க்கலாம். கடல் நிரம்புவது பார்க்க முடியாதிருக்கும்.சொந்த வாகனமெனில்
அதை நிவிர்த்தி செய்யலாம்.

குமரன் (Kumaran) said...

படங்களுடன் இந்தக் கட்டுரைக்கு மிக்க நன்றி ஐயா. இதற்குப் பின்னர் நீங்கள் இட்ட இந்த திருக்கோவிலில் கடல் நீர் வந்து சூழும் படங்களை முன்பே பார்த்துவிட்டேன். கோவிலைப் பற்றி இன்று அறிந்து கொண்டேன்.

G.Ragavan said...

அப்பப்பா என்ன அழகு. இது பாரீசிலிருந்து எவ்வளவு தொலைவு? பிரான்சின் எந்தப் பக்கத்தில் இருக்கிறது? பெல்ஜியம் எல்லையை ஒட்டியா? பார்க்க வேண்டும் போல இருக்கிறதே. சென்ற பாரீஸ் விஜயம் அப்படிப் போனது. அடுத்து திரும்பவும் வரனும்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

படங்கள் போட்டுத் தாக்கி இருக்கீங்க யோகன் அண்ணா! கட்டுரை அருமையா வந்திருக்கு!

எனக்கு நீங்கள் கொடுத்த முதல் நான்கு படங்கள் மிகவும் பிடித்திருந்தது! கொஞ்சம் கொஞ்சமாக தேவாலயத்தை நோக்கிச் செல்வது போல ஒரு உணர்வு வந்தது!

அதுவும் சுற்று வட்டாரத்தில் எங்கு இருந்தும் காணக் கூடிய வண்ணம், ஒரு மலை மேல் ஆலயம் என்றால் கொள்ளை அழகு!
இரவு விளக்கொளிப் படங்கள் கிடைக்கவில்லையா? மலை விளக்குகள் கண் சிமிட்டுமே!

ரவி said...

மிகவும் பிரம்மாண்டமாக அருமையாக வந்துள்ளது படங்கள்...

பதிவு நன்று...!!!!

சிவபாலன் said...

Sir,

Very Nice!

Good!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

குமரா!
எழுத்தால் எவ்வளவு விளக்கிக் கூறினாலும், படங்களினால் அதிகம்
சொல்லலாம் என்பது என் கருத்து.
அதனாலே அதிக படங்கள் இட்டேன்.
அத்துடன் அந்த தேவாலயம் அமைந்த சூழல் படத்துக்கு இதமானது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ராகவா!
இது வடபிரான்சில் உள்ளது. Mont Saint Michel என இணையத்தில் தேடினால் மேலதிக விபரம் பெறலாம்.ஆம் பெல்யிய எல்லையில் இருந்து 580 கிலோமீட்டர்.
பாரிசில் இருந்து 400 கிலோமீட்டர்.
ஆனால் அவ்விடமுள்ள தேவாலயங்களில், அல்லது சுற்றுலா ஒழுங்கு செய்பவர்கள் மூலம் விசாரித்தால், சுற்றுலாச் சொகுசு வண்டிச் சேவை பற்றிக் கூறுவார்கள்.
ஒல்லாந்தில் இருந்து சிரமமின்றி நேரே வந்து செல்லலாம். அல்லது புகைவண்டியே ,ஒல்லாந்தில் இருந்து LILLE வந்து அங்கிருந்து RENNES வந்து
பின் பஸ் எடுத்தால் இலகுவாகும்.
படங்கள் பிடித்ததா?
பாரிஸ் பயணம் போல் வேண்டாம்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி சங்கர்!
படத்தால் சொல்லுவது இலகுவாக இருக்கும்.
கட்டுரை விளக்கமாக இருந்தால், திருப்தி!!
என் புகைப்படக்கருவி 4 பிக்சல்..அதனால் ஒரு இரவுப் படம் எடுத்தேன். அவ்வளவு நேர்த்தியில்லை.(சரி அதை வேறு பதிவாக இடுகிறேன்)http://dossiers.ouestfrance.fr/dossiers/webcam_msm.asp இந்தப் பக்கத்தில் 24 மணி நேரமும் வெப்கம்மில் பார்க்கலாம்.
நல்ல வெளிச்சம் இருந்து, கால நிலை ஒத்துழைத்ததால் பகல் படம் நன்கு வந்தது.
உண்மை!மலையில் கோவில் இருப்பது தனி அழகே!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ரவி!
உங்களுக்கும் பிடித்துள்ளதா?
சந்தோசம்

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவபாலன்!
பிடித்திருந்தால் எனக்குத் திருப்தி!!

வெற்றி said...

நல்ல சுவையான தகவல்கள். அருமையான படங்கள். பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றிகள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

வெற்றி!
பதிவுலக நண்பர்கள் விரும்புவார்களேன்பதாலே படங்கள் கூடுதலாகப் போட்டேன்;
ரம்மியமான இடம்.
உங்களுக்குப் பிடித்திருந்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி!!!