![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjCsHH2yNcCNuHCqdbY89mDIEKeK6o9LnNEbXQEiy4apR_VTB1fw-vtEG2lXLZR0S20-XQ58yMrpEpkM6gxDEBXqMVR23Nv0J7hj3XgF8NwCP-Q_3TNSlHG0zewxsx48Ws0u0NTUg/s400/Thyagaraja13102007+006.jpg)
பிரான்சில் சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வர் ' சற்குரு தியாகராஜ சுவாமிகளின்'
ஆராதனை விழா ஒக்கோபர் 13, 14 ம் திகதிகளில், 6 வது தடவையாக, பாரிஸ் அலியன் பிரான்சே மண்டபத்தில் வெகுசிறப்பாக தென்னகக் கலைஞர்கள் பலரின் இசை விருந்துடன்
நடந்தேறியது.
அங்கே நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளின் சிறு பகுதியை ,காணொளியாக தரவுள்ளேன்.
வெளிச்சம் அதிகம் இல்லாததால் காட்சி சுமாரே, ஆனால் இசை ஓரளவு கேட்கும் படி உள்ளது.
கர்நாடக இசை வளர்ச்சி நிறுவனத்(MADHURYA) தலைவர் Michel ROLLOT
இந்தியத் தூதர் திரு ரஞ்சன் மார்தா
நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுடன் விழா அமைப்பாளர் ஆனந்தி (Anandi ROY)
முக்கிய கலைஞர்கள் வீணை மேதை திரு.திருவனந்தரம் வெங்கட்ராமன், வயலின் மேதை திரு. ரி.என். கிருஸ்ணன், பாட்டு மேதை திருமதி வேதவல்லி, வயலின் மேதை விஜி கிருஸ்ணன் (திரு. ரி.என்.கிருஸ்ணன் மகள்)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiE8jqnpvJ1_K0BBeGxNeB8xAcOlIOVVdsJ8Y4RRZQ006k_vHi5lfzxrghQuqraFCQUEGv8a0DpknfYw9hbrbDxggPbnnvVUzForr6wdgGNyY1NkYH1bNrVoGSfLC8fgwyiThArDA/s400/Thyagaraja13102007+022.jpg)
இவ்வருட விழாவில்...
தென்னகத்தில் இருந்து வயலின் மாமேதை பத்ம பூசண் ரி.என். கிருஸ்ணன்
வயலின் மேதை விஜி கிருஸ்ணன்
வாய்ப்பாட்டு மேதை திருமதி வேதவல்லி
வீணை மேதை திருவனந்தரம் வெங்கட்ராமன்
வாய்ப்பட்டு மேதை சுகந்தா காளமேகம்
வாய்ப்பாட்டு வித்துவான் சுமதி கிருஸ்ணன்
புல்லாங்குழல் மேதை ரி.ஆர்.மூர்த்தி
வீணை வித்தகி ஆர்.சுப்புலக்சுமி அம்மாள்
ஆகியோருக்கு பக்க வாத்தியமாக
மிருதங்க வித்துவான் காரைக்குடி கிருஸ்ணமூர்த்திமிருதங்க வித்துவான் திருவனந்தரம் வி.சுரேந்திரன்
வயலின் வித்தகி சாருலதா ராமானுஜம்
கடம் வித்துவான் வைக்கம் கோபாலகிருஸ்ணன்
ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
ஆரம்ப நாள் நிகழ்சியாக சுகந்தா காளமேகம் பாடுகிறார்.
அவருடன் மதுரியா மாணவர்களும் உடன் பாடினார்கள்.
சங்கீத கலாநிதி வேதவல்லி அம்மாள் பாடுகிறார். அவர் 80 வயதை எட்டுகிறார்.
மிகுந்த லகிப்புடன் பாடி மகிழ்வித்தார்.இவருக்குப் பக்கவாத்தியம் வயலின் சாருலதா
ராமானுஜம் மிகச் சிறப்பாக வாசித்து ரசிகர்களை மகிழ்வித்தார். வயது சொற்பம்,ஆற்றல்
மெச்சத் தக்கது.
சங்கீத கலாநிதி ரி.என். கிருஸ்ணன் அவர்கள் வயலின் கச்சேரியில் ஒரு சிறு
பகுதி , அவர் மகள் விஜி அவர்களும் உடன் வாசித்தார்கள். பக்கவாத்தியமாக
காரைக்குடி கிருஸ்ணமூர்த்தி-மிருதங்கம், வைக்கம் கோபாலகிருஸ்ணன் -கடமும்
வாசித்துச் சிறப்பித்தார்கள். இந்த 80 வயது இளைஞர் மிகத் துடிப்புடன் வாசித்தார்.
சாதாரணமாக மிகக் குறைவான வெளிச்சமே ரசிகர் மேல் படவிடுவது இங்கே வழமை
இவரோ!!! நான் என் ரசிகர் முகங்களில் என் இசை ஏற்படுத்தும் மாற்றங்களைத் காண விரும்புகிறேன். தயவு செய்து வெளிச்சத்தைப் போடுங்கள் எனக் கேட்டு எல்லோர்
முகத்தையும் பார்த்துப் பரவசத்துடன் வாசித்தார். 2 மணி நேரம் மெய்மறக்க வைத்தார்.
பிரன்சு இரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்து, கௌரவித்தனர்.( இங்கு மிகப் பிடித்தால் எழுந்து பல நிமிட நேரம் கரகோசம் செய்வது வழமை)
ரி.என்.கிருஸ்ணன் வயலின் இசையின் மேலும் சிறு பகுதி
கலைஞர்கள் அனைவரும் பஞ்சரத்ன கீர்த்தனை பாடுகிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகள் யாவும் மிக நேர்த்தியாக ஒழுங்குசெய்த மதுரியா அங்கத்தவர்கள்அனைவரும் பாராட்டுக்குரியோர். குறிப்பாக திருமதி ஆனந்தி ரோய் மிகப் போற்றுதலுக்குரியவர்.
பொதுவாக மிக அமைதியாக நடக்கும் நிகழ்ச்சிகளை 'ஊசி போட்டால் சத்தம் கேட்டும்' எனக் கூறுவது வழமை...இந்த இருநாள் நிகழ்ச்சியிலும் கலைஞர்கள் நிகழ்ச்சி நடந்த போது, இறகு விழுந்தால் சத்தம் கேட்டிருக்கும், அப்படி ஒரு அமைதி.
சுமார் 150 பேர் இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய,ஈழ ரசிகர்கள்...ஏனையோர்
அனைவருமே நம் இசையால் கவரப்பட்ட பிரான்சியர்கள்.. இசையை ரசிப்பதை அவர்களிடம்
பாடமெடுக்க வேண்டும்.
கலைஞர்கள் கூட அவர்கள், ஒன்றி ரசித்ததை வெகுவாகக் குறிப்பிட்டார்கள்.
இடைவேளையில் சுவையான சிற்றுண்டியும் மதுரியா வழங்கியது.
அன்றைய இரு தினமும்,மிக அருமையான வாரவிறுதியாக அமைந்தது.