Wednesday, October 17, 2007

பாரிசில் தியாகராஜர் விழா...காணொளியாக



பிரான்சில் சங்கீத மும்மூர்த்திகளில் முதல்வர் ' சற்குரு தியாகராஜ சுவாமிகளின்'

ஆராதனை விழா ஒக்கோபர் 13, 14 ம் திகதிகளில், 6 வது தடவையாக, பாரிஸ் அலியன் பிரான்சே மண்டபத்தில் வெகுசிறப்பாக தென்னகக் கலைஞர்கள் பலரின் இசை விருந்துடன்
நடந்தேறியது.

அங்கே நடைபெற்ற இசை நிகழ்ச்சிகளின் சிறு பகுதியை ,காணொளியாக தரவுள்ளேன்.
வெளிச்சம் அதிகம் இல்லாததால் காட்சி சுமாரே, ஆனால் இசை ஓரளவு கேட்கும் படி உள்ளது.


கர்நாடக இசை வளர்ச்சி நிறுவனத்(MADHURYA) தலைவர் Michel ROLLOT


இந்தியத் தூதர் திரு ரஞ்சன் மார்தா


நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுடன் விழா அமைப்பாளர் ஆனந்தி (Anandi ROY)





முக்கிய கலைஞர்கள் வீணை மேதை திரு.திருவனந்தரம் வெங்கட்ராமன், வயலின் மேதை திரு. ரி.என். கிருஸ்ணன், பாட்டு மேதை திருமதி வேதவல்லி, வயலின் மேதை விஜி கிருஸ்ணன் (திரு. ரி.என்.கிருஸ்ணன் மகள்)






இவ்வருட விழாவில்...
தென்னகத்தில் இருந்து வயலின் மாமேதை பத்ம பூசண் ரி.என். கிருஸ்ணன்
வயலின் மேதை விஜி கிருஸ்ணன்
வாய்ப்பாட்டு மேதை திருமதி வேதவல்லி
வீணை மேதை திருவனந்தரம் வெங்கட்ராமன்
வாய்ப்பட்டு மேதை சுகந்தா காளமேகம்
வாய்ப்பாட்டு வித்துவான் சுமதி கிருஸ்ணன்

புல்லாங்குழல் மேதை ரி.ஆர்.மூர்த்தி
வீணை வித்தகி ஆர்.சுப்புலக்சுமி அம்மாள்

ஆகியோருக்கு பக்க வாத்தியமாக

மிருதங்க வித்துவான் காரைக்குடி கிருஸ்ணமூர்த்தி


மிருதங்க வித்துவான் திருவனந்தரம் வி.சுரேந்திரன்


வயலின் வித்தகி சாருலதா ராமானுஜம்


கடம் வித்துவான் வைக்கம் கோபாலகிருஸ்ணன்
ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.





ஆரம்ப நாள் நிகழ்சியாக சுகந்தா காளமேகம் பாடுகிறார்.
அவருடன் மதுரியா மாணவர்களும் உடன் பாடினார்கள்.




சங்கீத கலாநிதி வேதவல்லி அம்மாள் பாடுகிறார். அவர் 80 வயதை எட்டுகிறார்.


மிகுந்த லகிப்புடன் பாடி மகிழ்வித்தார்.இவருக்குப் பக்கவாத்தியம் வயலின் சாருலதா


ராமானுஜம் மிகச் சிறப்பாக வாசித்து ரசிகர்களை மகிழ்வித்தார். வயது சொற்பம்,ஆற்றல்


மெச்சத் தக்கது.



சங்கீத கலாநிதி ரி.என். கிருஸ்ணன் அவர்கள் வயலின் கச்சேரியில் ஒரு சிறு


பகுதி , அவர் மகள் விஜி அவர்களும் உடன் வாசித்தார்கள். பக்கவாத்தியமாக


காரைக்குடி கிருஸ்ணமூர்த்தி-மிருதங்கம், வைக்கம் கோபாலகிருஸ்ணன் -கடமும்


வாசித்துச் சிறப்பித்தார்கள். இந்த 80 வயது இளைஞர் மிகத் துடிப்புடன் வாசித்தார்.





சாதாரணமாக மிகக் குறைவான வெளிச்சமே ரசிகர் மேல் படவிடுவது இங்கே வழமை


இவரோ!!! நான் என் ரசிகர் முகங்களில் என் இசை ஏற்படுத்தும் மாற்றங்களைத் காண விரும்புகிறேன். தயவு செய்து வெளிச்சத்தைப் போடுங்கள் எனக் கேட்டு எல்லோர்


முகத்தையும் பார்த்துப் பரவசத்துடன் வாசித்தார். 2 மணி நேரம் மெய்மறக்க வைத்தார்.





பிரன்சு இரசிகர்கள் எழுந்து நின்று கரகோசம் செய்து, கௌரவித்தனர்.( இங்கு மிகப் பிடித்தால் எழுந்து பல நிமிட நேரம் கரகோசம் செய்வது வழமை)






ரி.என்.கிருஸ்ணன் வயலின் இசையின் மேலும் சிறு பகுதி






கலைஞர்கள் அனைவரும் பஞ்சரத்ன கீர்த்தனை பாடுகிறார்கள்.

இந்த நிகழ்ச்சிகள் யாவும் மிக நேர்த்தியாக ஒழுங்குசெய்த மதுரியா அங்கத்தவர்கள்அனைவரும் பாராட்டுக்குரியோர். குறிப்பாக திருமதி ஆனந்தி ரோய் மிகப் போற்றுதலுக்குரியவர்.




பொதுவாக மிக அமைதியாக நடக்கும் நிகழ்ச்சிகளை 'ஊசி போட்டால் சத்தம் கேட்டும்' எனக் கூறுவது வழமை...இந்த இருநாள் நிகழ்ச்சியிலும் கலைஞர்கள் நிகழ்ச்சி நடந்த போது, இறகு விழுந்தால் சத்தம் கேட்டிருக்கும், அப்படி ஒரு அமைதி.




சுமார் 150 பேர் இதில் விரல் விட்டு எண்ணக்கூடிய இந்திய,ஈழ ரசிகர்கள்...ஏனையோர்

அனைவருமே நம் இசையால் கவரப்பட்ட பிரான்சியர்கள்.. இசையை ரசிப்பதை அவர்களிடம்

பாடமெடுக்க வேண்டும்.

கலைஞர்கள் கூட அவர்கள், ஒன்றி ரசித்ததை வெகுவாகக் குறிப்பிட்டார்கள்.

இடைவேளையில் சுவையான சிற்றுண்டியும் மதுரியா வழங்கியது.




அன்றைய இரு தினமும்,மிக அருமையான வாரவிறுதியாக அமைந்தது.

Tuesday, October 16, 2007

புறா நீரருந்துவதைப் பாருங்கள்!




பறவை இனங்களில் நீரை உறுஞ்சிக் குடிப்பது புறா...(வேறு இருந்தால் கூறவும் )
அத்துடன் புறா பறவையினத்தில்
தன் அளவுக்கு அதிக நீரைக் குடிக்கும் பறவை எனவும் படித்துள்ளேன்.
இதோ அந்தக் காட்சி.....


Friday, October 12, 2007

பாம்பும் நீர் குடிக்கும்...பாருங்கள்

வவ்வால் தன் 'சில கேள்விகளும் பதில்களும்' எனும் பதிவில், பாம்பு நீர் குடிப்பதில்லை ,அதன் பிளவு பட்ட நாக்கு பொருந்தாது என எழுதியிருந்தார்.

ஆனால் நான் பார்த்த தொலைக்காட்சி விபரணச் சித்திரத்தில் ,ஆபிரிக்காவில் ஆற்றோரம் பாம்பு நீரருந்தியது, நினைவில் வந்தது. அதை அவருக்குப் பின்னூட்டமாகப் போட்டபின் யூரியூப்பில் தேடிய போது இவை கிடைத்தது.

இவை வளர்ப்புப் பாம்புகள் ஆனால் இயற்கைச் சூழலில் வாழும் பல இனப் பாம்புகள் நீரருந்துகின்றன.

தயவு செய்து இயற்கையில் வாழும் பாம்பு ,எப்படி நீர் அருந்துகிறதென இங்கே

பார்க்கவும்.

http://www.youtube.com/watch?v=YVYFP9SjIQs










Tuesday, October 09, 2007

பாரிசில் தியாகராஜர் ஆராதனை

இசை மும்மூர்த்திகளில் மூத்த சற்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின்
ஆராதனையை, 6 வது தடவையாக ,எதிர் வரும் 13, 14 ஒக்டோபர் 2007 , வாரவுறுதியில் பாரிஸ் அலியன் பிரான்சே மண்டபத்தில் ,
பாரிசில் கர்நாடக இசைக்கான நிறுவனமான மதுறியா (MADHURYA) ஒழுங்கு செய்துள்ளது.

தென்னகத்தில் இருந்து வயலின் மாமேதை ரி.என்.கிருஸ்ணன் , இசை மேதை வேதவல்லி உட்படப் பல கலைஞர்கள் கலந்து
சிறப்பு இசை நிகழ்ச்சி தரவுள்ளார்கள்.




Samedi 13 octobre 2007
16h : Ouverture du festival
16h30 : Concert de chant par Sugandha Kalamegham
17h50 : Concert de vina par R. Subbalekshmi Ammal
18h50 : Entracte
19h20 : Concert de flûte par TR Moorthy
20h30 : Concert de chant par Sangitha Kalanidhi R. Vedavalli
22h15 : Fin de la première journée

Dimanche 14 octobre 2007
13h55 : Ouverture
14h00 : Concert de vina par Trivandrum R. Venkataraman
15h45 : Entracte
16h15 : Concert de violon par Padma Bhushan Sangitha Kalanidhi TN Krishnan
18h05 : Récitation des Pancharatna kritis par tous les musiciens
19h15 : Clôture du 6ème Festival Tyagaraja

நுளைவுக் கட்டணமாக நாளொன்றுக்கு 18 யூரோக்கள் .


நல்ல இசை நுகர அரிய சந்தர்ப்பம்.


மேலதிக விபரங்களுக்கு இங்கே

சொடுக்கவும்.

பிரான்சியருக்கும் பௌதீகத் துறை நோபல் பரிசு


Mr.Albert FERT- FRANCE




Mr. Peter GRUNBERG - Germany

ன்று அறிவித்த பௌதீகவியலுக்கான நோபல் பரிசுக்காக பிரான்சைச் சேர்ந்த விஞ்ஞானி திரு அல்பேட் பேர், ஜேர்மனியைச் சேர்ந்த திரு. பீட்டர் குறுண்பேர்க்
ஆகிய இருவரும் தெரிவாகியுள்ளார்கள் .
இவர்கள் இருவரும் கணனிக்கு உபயோகிக்கும் சேமிப்பு தகடு (hard disk)
பற்றிய துறையில் மிக பயனுள்ள அதிகம் சேமிக்கக் கூடிய ,கண்டுபிடிப் பொன்றைச் செய்துள்ளதற்காக ,இது வழங்கப்பட உள்ளது.
இது என்ன உபகரணம், இதன் சிறப்புப் பற்றி கணனித் துறையில் கைதேர்ந்த
சக பதிவர்கள்...எமக்கு எளிமைப் படுத்தி கூறுவார்கள் என நம்புகிறேன்.
இருவரையும் வாழ்த்துவோம்.

Sunday, October 07, 2007

ஹரிவராசனம் விச்வ மோகனம்.....





தெய்வீக நம்பிக்கையுள்ளவர்கள் ,நல்ல இசையை நுகர்வோர்,ஜேசுதாசின் இன்குரலின் மையல் கொண்டோர் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.


ஹரிவராசனம் விச்வ மோகனம்
ஹரிததீஸ்வரம் ஆராத்ய பாதுகம்
அரிவிமர்த்தனம் நித்ய நர்த்தனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
சரணகீர்த்தனம் பக்தமானஸம்
பரண லோலுபம் நர்தனாலஸம்
அருண பாஸுரம் பூத நாயகம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
கள ம்ருதுஸ்மிதம் சுந்தரானனம்
களப கோமளம் காத்ர மோகனம்
களப கேசரி வாஜிவாகனம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
ச்ருத ஜன ப்ரியம் சிந்திதப்ரதம்
ச்ருதி விபூஷணம் சாது ஜீவனம்
ச்ருதி மனோகரம் கீதலானஸம்
ஹரிஹராத்மஜம் தேவமாச்ரயே
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!
சரணம் ஐயப்பா சுவாமி சரணம் ஐயப்பா!


உயர்ந்ததும் தங்கமயமானதுமான பொன்னம்பல மேட்டில் எழுந்தருளியிரிப்பவர்!
உலகையே மயக்கச் செய்பவர்!
பூசிக்கத் தகுந்த திருவடிகளைக் கொண்டவர்!
பகைவர்களை நாசம் செய்பவர்!
பக்தர்கள் தங்கள் உள்ளத்தில் வைத்துத் துதி பாடு சரணங்களை உடையவர்!
அறியாமையை நீக்கி அருளாடச் செய்பவர்!
சூரியன் போல் பிரகாசிப்பவர்!
பஞ்சபூதங்களுக்குத் தலைவர்!
இனிமையான பேச்சு உடையவர்!
மென்மையான புன்சிரிப்புக் கொண்டவர்!
களபச் சாந்து பூசிய திருமேனியர்!
அழகான கழுத்தும் உறுதியான உடலும் கொண்டவர்!
சிங்கத்தின் பிடரியைப் போன்று பின் கழுத்துவரையும் தவழும் தலைமுடியைக் கொண்டவர்!
சரங்குத்தியி அருள்பவர் சாஸ்தா!
சாஸ்திர வல்லுனர்களுக்குப் பிரியமானவர்!
எண்ணியதை முடித்து வைப்பதில் முதல்வர்!
வேதங்களையே ஆபரணமாகக் கொண்டவர்!
நல்லவர்களைக் காப்பாற்றுவதற்காக இருப்பவர்!
அழகான காதுகளைக் கொண்டவர்!
சரண கோஷத்தில் விருப்பம் உள்ளவர்!
தேவர்களால் துதிக்கப்படும் அப்படிப்பட்ட ஹரிஹரசுதனைத் துதிக்கிறேன்.

*** நன்றி:சக்திவிகடன் டிசம்பர் 2004


யூ ரூபில் இட்ட shankermcsa


''கற்பனையென்றாலும் கற்சிலை என்றாலும் மறவேன்'

Saturday, October 06, 2007

பிரான்ஸ் கம்பன் விழா....

டந்த செப்டம்பர் மாதம் 29, 30 திகதிகளில் ,பாரிசின்
புறநகர்ப் பகுதியான லா கூர்னோவில், பிரான்ஸ்
கம்பன் கழகத்தின், 6 ம் ஆண்டு விழா வெகு விமரிசையாக
நடைபெற்றது.

சிறப்புப் பேச்சாளராக அருட் சொற்ச் செல்வர் திருமிகு சுகி சிவம் அவர்கள்
கலந்து, தன் திறன் மிகு பேச்சால் பார்வையாளர்களைக் கவர்ந்தார்.
இந்த எழில் உற்ற விழாவைக் காணும் பேறு இவ்வருடம் நான் பெற்றேன்.

அதை உங்களுடன் பகிர என் குட்டி NIKON ஆல் காணொளியாகப் படமாக்கினேன். இது என் கன்னி முயற்சி, அதனால் இதில் உள்ள குறைகளைப் பொறுக்க வேண்டும்.

முதற் காட்சி... மலர் வெளியீடு ,இதில் நமது சக பதிவர் திரு மாசிலா மணி
(நாளை நமதே- மாசிலா ) அவர்களையும் மேடையில் பெயர் கூப்பிட்டழைத்து
மலர் வழங்குகினார்கள்.



பட்டிமன்றத் தலைப்பாக 'கம்பனைக் கவிச்சக்கரவர்த்தியாக்கியது

பாத்திறமா? பாத்திரமா?' இடம் பெற்றது அதில் ஒரு பகுதியான மரபின் மைந்தர் வே .முத்தையா, நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல் பேசியதில் சிறு பகுதிகள் சேர்த்துள்ளேன்.





இந்த இரண்டாம் நாள் நிகழ்சிகளில் பாரிசில் இசைகற்கும்

பிள்ளைகள் பங்கேற்றார்கள்.நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றன.

வழக்காடு மன்றத்தில் ' குற்றவாளிக் கூட்டில் தமிழைப் பேணாத தமிழர்கள்

எனும் தலைப்பில் மரபின் மைந்தர் வே.முத்தையா. நகைச்சுவைத் தென்றல்

இரெ. சண்முகவடிவேல் , சுகி.சிவம் நடுவராகப் பங்கேற்றார்.(தமிழகத்தில் இருந்து வந்திருந்தார்கள்)

தமிழகத்தில் தமிழின் இன்றைய நிலையை நகைச்சுவையுடன் அழகாகச் சுட்டிக்காட்டினார்கள்.

சுகி சிவம் அவர்கள்' தமிழக தமிழ்த் தொலைக்காட்சியில் செய்தி தவிர தமிழ் வாக்கியங்களை முறிக்காத நிகழ்ச்சியே இல்லை எனக் கூறினார்.



இனிதே சிறப்புற நடந்த விழாவில் இரண்டாம் நாள் மண்டபம் நிறைந்தது.

இலக்கிய விழாவுக்கு மண்டம் நிறைந்தது, மகிழ்வே!!

இரு நாளும் காலை முதல் நடந்த விழாவை தடையின்றிக்காண ,அன்பர்களுக்கு உணவு,குளிர்பானம் கொடுத்து அனுசரித்தார்கள்.

இந்த விழாவை சிறப்புற நடத்திய பிரான்ஸ் கம்பன் கழகமும், அதன் தாய்க் கழகமான புதுவைக் கம்பன் கழகமும் எவ்வளவும் பாராட்டத் தகும்.

குறிப்பாக பிரான்ஸ் கம்பன் கழகத் தலைவர் பாவலர் பாரதிதாசன் மிகப் போற்றுதலுக்குரியவர்.

குறிப்பாக என் மனதைக் கவர்ந்தது. சகபதிவர் திரு மாசிலாமணி அவர்களை

மேடையில் அழைத்துக் கௌரவித்தது. அவர் ஆத்மீகத்தை இகழ்பவராக இருந்தாலும், தமிழரின் சீரிய வாழ்வு பற்றிய சிறந்த சிந்தனையுடையவர் என்பதால் இந்தச் சிறப்பைச் செய்தார்களோ தெரியவில்லை.

ஆனால் நல் ஆத்மீக வாதிகளின் சிறப்பே ' இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.' அதைச் செய்து ஆத்மீகத்தைப் பெருமைப் படுத்திய அன்பர்களுக்கு நன்றி!!

பதிவர் மாசிலா மணி அருகில் அமர்ந்தும் ,அவரைச் சரியாக அடையாளம் கண்டும், அவருக்கு நான் யாரெனத் தெரியப்படுத்தவில்லை. காரணம் அவர் கோட் சூட் என பக்காவாக உடுத்திருந்தார்.

நானோ பஞ்சத்தில் அடிபட்ட பரதேசிபோல் இருந்தேன். (நான் ஒரு அகதித் தமிழன் தானே, பிரான்ஸ் ஆமியில் இருந்த தமிழன் பிள்ளையில்லையே)அவருக்குச் சங்கடமாக இருக்கக் கூடாது. என்பதால் தவிர்த்தேன். பலர் இப்படிப் பொது இடங்களில் என்னைத் தவிர்த்துள்ளார்கள்.

இத்தனைக்கும் நான் மாசிலா அவர்கள் பதிவைப் பார்த்துவிட்டே புறப்பட்டேன்.

இப்படி ஓர் இனிய வாழ்நாளில் மறக்கமுடியாத அறிஞர்கள் பேச்சை நேரடியாகக் கேட்கும் அனுபவத்தை ஏற்படுத்திய அனைவருக்கும் மிக்க

நன்றி!

கடைசித் தமிழன் இருக்கும் வரை கம்பன் நாமம் வாழும்!!

அதை எந்தக் கொம்பனாலும் தவிர்க்கமுடியாது.

கன்னித் தமிழ் வாழ்க ! கம்பன் நாமம் வாழ்க!!

Friday, September 28, 2007

Mr.Dominique Strauss-Kahn -உலக நிதி நிறுவனத் தலைவர்



பிரான்சின் அரசியலில் மிக முக்கியமான
திரு.Dominique Strauss-Kahn (58), அவர்கள் உலக நிதி நிறுவனத்
(International Monetary Fund) தலைவராகத் தெரிவாகியுள்ளார்.

இவர் சிறந்த கல்விமான் அத்துடன் சோசலிசக் கட்சியின் மிக முக்கிய பிரமுகர்.

நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டியவர்.
போட்டியிட்டிருந்தால் வென்றிருப்பார், எனும் அபிப்பிராயமும் இருந்தது.

இவர் ஏழை நாடுகள் மேல் அதிகம் கவனம் செலுத்த உள்ளதாகக் கூறியுள்ளார்.
வரும் நவம்பர் முதலாம் திகதி பதவி ஏற்று, 5 வருடங்கள் இந்தப் பதவியில் இருப்பார்.
சொன்னதைச் செய்வார் என எதிர்பார்த்து வரவேற்போம்.

Thursday, September 06, 2007

மேற்கத்தைய பாரம்பரிய இசையுலக மேதைLUCIANO PAVAROTTI மறைந்தார்.



மேற்கத்தைய பாரம்பரிய(OPERA) இசையுலகின் மன்னனாக 40 வருடங்கள் ரசிகர் மனதைக் கவர்ந்த லூசியனொ பவறொற்ரி (Luviano PAVAROTTI) இன்று அதிகாலை இறையெய்தினார்.

இவர் இத்தாலியப் பிறப்பிடமாகக் கொண்டு; தன் குரலால் உலக மேற்கத்தைய பாரம்பரிய இசை ரசிகர்களைக் கவர்ந்தவர்.

1990 உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டியின் முன்; ஏனைய திறமைமிக்க மேதைகளான
Placido DOMININGO,Jose CARERRAS; உடன் Zubin MEHTA(இந்தியர்) சுபேன் மேத்தா வின் நெறியாள்கையில் பாடியதை ,உலகமே கட்டு கேட்டு ரசித்தது.

2006 இல் இருந்து புற்று நோயால் பாதிக்கப்பட்டதால்; பாடுவதை நிறுத்தியிருந்தார்.

என் ஆரம்ப காலப் பாரிஸ் வாழ்வில் இவர் என் தனிமையில் துணையாக இருந்தவர்.


ஆச்சரியப்படவேண்டாம்....

1984 ல் , பாரிஸ் வந்த போது; இங்கு சில குறிப்பிட்ட தொலைக்காட்டிகளே இருந்த காலம்; நமது பாடல்கள் கேட்கக் கிடைக்காத காலம்.வீட்டு நினைவுகளால் நித்திரை தொலைத்த காலம்..தொலைக்காட்சியிலோ நள்ளிரவின் பின் பாரம்பரிய இசையே போடுவார்கள்..;ஏதோ பார்ப்போம் என பார்த்த போது மெள்ள மெள்ள இதில் சிறு ரசிப்புத் தன்மை ஏற்பட்டது.

குறிப்பாக இவர் மேடையில் எப்போதுமே சிரித்த முகத்துடனே பாடுவார்.நேரடிக் கச்சேரிகளில் ஒவ்வொரு பாடல் முடிவிலும் ரசிகர்களின் கைதட்டலை ஏற்றுக் கைகூப்பிக் கும்பிடுவார்.
அந்தச் சிரித்தமுகம் என் தனிமைக்கு இனிமையாக இருந்தது
.

இவர், நம் செம்மங்குடி சீனிவாச ஐயர், ஜேசுதாஸ்; ஷேசு கோபாலன்; சீர்காழியுடன் ஒப்பிடக் கூடியவர்.
திறமை மிக்க ஒரு மேதையை இசையுலகம் இழந்து விட்டது.

Monday, September 03, 2007

பாரிஸ் விநாயகர் தேரில்...

பாரிசில் சென்ற ஞாயிறு 02-09-2007 அன்று , மாணிக்க விநாயகர் தேரில் பவனி வந்தார்.
உங்களுக்காகச் சில படங்கள்...

பஞ்சமுக விநாயகர் தேரில்.....





பாரிஸ் வீதியில் தேர்....




நாதஸ்வர மேளம் முழங்க...


உடன் துப்பரவுப் பணி...







நிறைகுட வரவேற்பு...



சிதறக் காத்திருக்கும்...

சிதறிய.....


மாவிலை,கரும்பு, தோரணம்..


சேலையிலும் தோரணம்..
முருகன் தேர்


காணொளிக் காட்சியாக சில பகுதிகள்....







வழமையை விட இந்த வருடம், மக்கள் குறைவாக வருகை தந்த போதும், திருவிழா பெருவிழாவாக நிறைவெய்தியது.

Thursday, August 30, 2007

நெல்சன் மன்டெலா சிலை- லண்டன் பாராளுமன்றத்தில்

முன்னாள் தென் ஆபிரிக்க அதிபர் திரு. நெல்சன் மன்டெலாவுக்கு (Nelson MANDELA- 89); பிரித்தானியப் பாராளுமன்ற வளாகத்தில் 2.7 மீட்டர் உயரச் சிலை ; நேற்று 29-08- 2007 அன்று பிரித்தானியப் பிரதமர் கோர்டொன் பிறவுண்(Gordon BROWN); லண்டன் நகரபிதா கென் லிவிங்ஸ்ரோன்(Ken LIVINGSTONE); நெல்சன் மன்டெலா முன் திறந்து வைக்கப்பட்டது.

முன்னாள் பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்ரன் சர்சில்(Winston CHURCHILL); முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்(Abraham LINCOLN) சிலைகளுக்கு அருகில் அமைந்துள்ளது.இச் சிலை இயன் வோல்ரஸ்(Ian WALTERS) என்னும் சிற்பியால் உருவாக்கப்பட்டது.இதை ஒட்டி பிரித்தானியப் பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்தில்; பிரித்தானிய பிரதமர் "எமது தலைமுறையில் மிகப் புகழ்மிக்க ;மிகுந்த மனத்தைரியம் மிக்க பெருந்தலைவர் எனப் புகழ்ந்தார்.



இவ் விழாவில் பெருந்திரளான நிறப் பாகுபாட்டுக்கெதிரான போராடும் மக்கள் பங்குபற்றிச் சிறப்பித்தார்கள்

Thursday, August 23, 2007

குரங்கு வேலை...

னிதன் தனக்கு உதவியாக வேலைகள் செய்யக் காலாகாலமாக மிருகங்களைப் பழக்கியுள்ளான். இந்தக் குரங்குகளை பொதுவாக வேடிக்கை காட்டவே நம் நாடுகளில் பழக்கியுள்ளார்கள். அப்படியே நான் பார்த்துள்ளேன்.

தாய்லாந்து , வியட்னாம் போன்ற நாடுகளில் ,இந்தக் குரங்குகள் தேங்காய் பறிக்க பழக்கப்பட்டு; நாளுக்கு 300 தேங்காய் பறிப்பதுடன்;மனிதனிலும் அதிவேகமாகப் பறிப்பதாகவும்; களைப் படைவதில்லை எனவும் கூறுகிறார்கள்.

சுமார் 2 மாதக் குட்டியாகப் பிடித்து;படிப்படியாகப் பயிற்சி கொடுத்து; இரு வருடப் பயிற்சியில் ,அது வேலைக்குத் தயாராகிறது.

இந்தக் குரங்குகள் இடையில் போட்டி வைத்து; பயிற்சியாளருக்குப் பணமுடியும் அக் கிராமங்களில் வழங்குகிறார்கள்.

பயிற்றப்பட்ட குரங்கு ஆயிரக்கணக்கான டாலருக்கு விற்பனை செய்கிறார்கள்.

தென்னந்தோப்பு சொந்தக்காரர்கள் இவற்றை வாங்கிப் பயனடைகிறார்கள்.

இதைத் தொலைக்காட்சியில் பார்த்த பின் இணையத்தில் தேடிய போது யூருயூப்பில் கிடைத்ததைப் பகிர்கிறேன்.


இலங்கை; இந்தியாவில் இப்படியான முறையுண்டா???









Sunday, August 19, 2007

Qawwali இசைச் சக்கரவர்த்தி Nusrat Fateh Ali Khan


உங்களில் பலருக்கு இவரைத் தெரிந்திருக்கலாம்.
பாகிஸ்தானின் குவாலி(Qawwali) இசைப்பாடல் மூலம் உலகம் புகழ்ந்த நஸ்ரத் பேத் அலிகான்(Nusrat Fateh Ali Khan).

13-10-1948 ல் பாகிஸ்தானிப் பஞ்சாப்பில் பிறந்தவர்.
தன் குடும்பத்தினர் இசைக்கும் இசை வடிவான இந்த 600 வருடப் பழமை வாய்ந்த குவாலி இசையை, தந்தையிடம் கற்றுத் தேறி ,தந்தையின் மறைவின் பின் குழுவைத்
தலைமை தாங்கி தான் மறையும் வரை; அதற்கு உலக அரங்கமெங்கும் புகழ் கூட்டிச் சென்றவர்.




இவர் குழுவில் சுமார் 11 பேர் உள்ளனர். யாவரும் உறவினரே...பலர் பின்குரலும்..கைத் தாளம் போடுபவர்களாகவுமே உள்ளார்கள்.


இவர் உருது,பஞ்சாபி,இந்தி மொழிகளில் பாடி மகிழ்வித்தார். பல மேலைத் தேச இசை வல்லுனர்களுடன் சேர்ந்திசைத்து, சுமார் 125 இசைஅல்பங்கள் வெளியிட்டு குவாலி இசையுலகில் அதிக அல்பம் வெளியிட்டவர் எனும் கின்னஸ் சாதனை படைத்தவர்.


DEAD MAN WALKING,THE LAST TEMPTATION OF CHRIST,NATURAL BORN KILLERS போன்ற ஹாலிவூட் படங்களுக்கு இசையமைத்தவர்.


பிரான்சில் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. 1997 ல் பாரிசில் பெரிய மண்டபத்தில் இவருக்கு 5 நாட்கள் மாலை 8.30 மணி நிகழ்ச்சிக்கொதுக்கியிருந்தது.
குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு சில மாதங்களுக்கு முன் சிறுநீரக மாற்றத்துக்காக
அமெரிக்கா செல்லும் வழியில் ,இங்கிலாந்தில் 16-08-1997 ல் மாரடைப்பினால் இறையெய்தினார்.
இவரது இசையை நேரடியாகக் கேட்க நான் ஆவலாக 1997ல் நுளைவுச் சீட்டுக்குப் பதிவு செய்திருந்தும்,கைகூடவில்லை.
ஆனால் இவர் இறையெய்திய போது ,லண்டனில் இருந்தேன். அப்போது இவருக்கு மரியாதை செய்ய தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சியாக ,லண்டனில் நடந்த கச்சேரி
ஒன்று போட்டது.

கேட்டுப் பாருங்கள்


Nusrat Fateh Ali Khan
envoyé par ploukkk



அதில் இந்த ‘மஸ்து, மஸ்து’ என்ற பாடல் மிகப் பிரபலமாக வரவேற்பைப் பெற்றது.
இவர் இசையை நான் மொழி புரியாவிடிலும் மிகரசிப்பேன்.
இசைத்தட்டுக்கள், ஒலி ஒளி நாடாவிலும் வைத்துள்ளேன்.
இன்றும் இவர் கச்சேரி நேரே பார்க்கக் கிடைக்கவில்லை, எனும் கவலை எனக்குண்டு.
அவர் மறைந்து 10 வருடமாகிறது.
அவரை நினைத்தேன், உங்களுடன் பகிர்கிறேன்.

அபிப்பிராயத்தைச் சொல்லுங்கள்.....

Monday, August 06, 2007

புகைப்படப் போட்டி- portrait

ந்தப் போட்டியில் வெல்பவர் படங்கள்; பல போட்டிப் படங்களுள் தெரிவானதெனும் பெயரெடுக்க இந்தப்படங்களையும் அனுப்புகிறேன்.







Friday, August 03, 2007

இரவு 12 மணிக்கு உண்மையெனில்!...விடிந்தும் உண்மையே!!




இலங்கையில் என் இளமைக்காலத் ; தேர்தல் காலம், திருவிழாக் காலம் போல் தான்!

ஊர்வலம்;ஒலிபெருக்கி; தோரணம்;கொடி ;கும்பம்...என அட்டகாசமாகத் தான் இருக்கும்.

தேர்தற் காலத்தில் மாத்திரம் பத்திரிகை வாங்குவோரும் உண்டு; சனசமூக நிலைய; வாசிகசாலைப் பத்திரிகைகள் இரவு தவிர ஏனைய நேரங்களில் , பலர் கைகளில் தவழும்...அப்படி ஆர்வமாக தேர்தல் செய்தி படித்தறிவார்கள்.

தேர்தல் அன்று ...முடிவுகள் அறிய மக்கள் காட்டும் ஆர்வம் அலாதியானது.
அன்றைய நாட்களில் வானொலி ஒன்றே உடனுக்குடன் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் சாதனமாக இருந்தது.

வானொலியுள்ள வீடுகளில் அன்று இரவு....சிவராத்திரியே!!!

சில வானொலியுள்ள வீடுகளின் உறவினர்கள் தாம் இரவு முடிவு கேட்க வருவதாக முன்கூட்டியே "இட ஒதுக்கீடு" செய்வது முண்டு.
அன்றைய இரவு வானொலியைச் சுற்றி சிறிசு,பெரிசெல்லாம்....கூட்டமாகிவிடுவார்கள்.

நள்ளிரவுக்குமேல் தூக்கம் கலைக்கவும்; அதிகாலைப் புத்துணர்வுக்கும் தேனீர் உபசரிப்புக்களும் உண்டு.

சில பெரியவர்கள் இரவுச் சாப்பாட்டின் பின் குட்டித் தூக்கம் போட்டுவிட்டு நள்ளிரவின் பின் விழித்தே முடிவறியக் காத்திருப்பார்கள்.

அவர்கள் அனுபவத்தில் முடிவுகள் எப்படியும் நள்ளிரவு தாண்டியே வெளிவரும் என்பதை அறிந்தவர்கள்.

தேர்தல் முடிவை விட இரவிரவாக ஒலிபரப்பும் , திரைப்படப்பாடல்களைக் கேட்க ஒரு கூட்டமே காத்திருக்கும்.

சில நல்ல பாடல்களை அறிவிப்பாளர்களும், அந்த இரவு 2 ,3 தரம் போட்டுச் சந்தோசப் படுத்துவார்கள். ரெப்ரெக்கோட்டர் இல்லாத அந்தக் காலத்தில் பிடித்த பாடலை சில மணியில் மீண்டும் கேட்பதென்பது, குதூகலமான விடயம்.

அன்றைய அறிவிப்பாளர்கள்;தயாரிப்பாளர்கள் கூட இது தேர்தல் முடிவு அறிவிப்புத் தானே என ஏனோதானோ என அந்த இரவைக் கரைய விடாமல்; "விரும்பிக் கேட்டவை" நிகழ்ச்சிக்கு நேயர்கள்
கேட்டெழுதிய பாடல்களையே தொகுத்துப் ஒலிபரப்புவார்கள்.
முழு இரவும் இனிமையான பாடல்கள் வானலையில் தவழ்ந்துவரும்.

‘’ஆகாயப்பந்தலிலே, நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள், நமது வெற்றியை நாளை’’ போன்ற பாடல்கள் ஒரே இரவில் மறு ஒலிபரப்பானதை மறக்கமுடியாது.

கிராமங்களில் மின்சாரமில்லாக்காலம்... வால்பு வானொலிகள்...பெரிய எவரெடி மின்கலங்களில் இயங்குபவை..

கடைகளில் இந்த வகை மின்கலங்கள்...தட்டுப்பாடு போல் காட்டி 2 ரூபா அதிகவிலை கூட்டி முதலாளிகள் விற்பார்கள்.
‘’காற்றுள்ள போதே தூற்று’’...

அத்துடன் விரல் விட்டெண்ணக்கூடிய "டிரான்சிஸ்டர்" வானொலிகள்...இவை ரோச் பற்றியில் இயங்கக் கூடியவை.

அந்த இரவு தொடர்ந்து வானொலி இயங்குவதால்...ஏற்படும் மின்கலச் சக்திக் குறைபாட்டை நிவிர்த்திசெய்ய ஆபத்பாந்தவனாகக் கைவசம் உள்ளதே..இந்த வீட்டிலுள்ள இருட்டுக்கு வெளியே கொண்டு செல்ல உள்ள ரோச்லயிற்ரின் பற்றிகளே!!!

எந்தச் சந்தர்ப்பத்திலும் ரோச் பற்றியை வானொலிக்கு மாற்ற விடாத அப்பாக்கள், ஐயாக்கள் கூட,அன்று அனுமதிப்பார்கள்.
காரணம் அவர்களும்; முடிவறியக் காட்டும் ஆவலே!!!!!

இதே வேளை கிராமச் சனசமூக நிலையமும் களைகட்டிவிடும்; அங்குள்ள வானொலி இளைஞர்களால் சூழப்பட்டிருக்கும்.

நான் சனசமூக நிலைய வானொலியையே தேர்வேன்; வீட்டைவிட "சுதந்திரமாக " விமர்சனம் ,தர்க்கம்" வைக்க அதுதான் சிறந்த இடம்..

இப்படியாக அன்றைய தேர்தல் திருவிழா கோலாகலமாக நடந்தேறியது.
தேர்தல் காலச் சிறு சச்சரவுகள் இருக்குமே தவிரக் கொலைகள் என்பது என்ன? என்று தெரியாத காலம்.

அது ஒரு பொற்காலம்...

இப்படியான காலக் கட்டத்தில் , நான் மலையகத்துக்கு வேலைக்குச் சென்ற போது பல மாவட்டங்களைச் சேர்ந்த பல வித தொழில் நிமித்தம் , வந்தவர்களுடன் சேர்ந்து பழகி,வாழும் பொன்னான, மறக்க முடியா வாய்ப்புக் கிடைத்தது.

அப்போது மட்டக்களப்பு ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் பயின்று விட்டு ஆசிரியராக வந்த ஒரு நண்பர்; தங்கள் கலாசாலை அனுபவத்தைக் கூறும் போது...

அவர் கலாசாலை சென்ற; முதல் நாள் விரிவுரைக்கு வந்த பேராசிரியர்.
மாணவ ஆசிரியர்களைப் பார்த்துக் கேட்டாராம்!...

"இரவு பூராக விழித்திருந்து..;தேர்தல் முடிவு கேட்பவர்கள் கையுயர்த்துங்கள்
சுமார் 80% மாணவர்கள் கையுயர்த்தினார்களாம்.

அவர் மீண்டும் கேட்டாராம்;;;மிகுதி 20% யையும் பார்த்து...நீங்கள் எவருமே சிறிதளவும் தேர்தல் முடிவில் ஆர்வம் காட்டுவதில்லையா????

அப்போது ஒரு 15% மாணவர்கள்...விரும்பியும் விரும்பாமலும் கையைத் தூக்கினார்களாம்.
அதன் பின் அந்தப் பேராசிரியர் கூறிய கூற்றே...இப் பதிவின் தலைப்பு.

அப் பேராசிரியர் இது தவிர வேறு எந்த விமர்சனமும் இது விடயமாக செய்யாது, தொடர்ந்து விரிவுரை ஆற்றினாராம்.

இன்று தேர்தல்களின் நிலை மாறினாலும்;;; திரைப்படத்துக்கு முதல் நாள் முதற்காட்சி.. மழை வெய்யிலில் வரிசையில் சோறு தண்ணி இன்றிக் கிடந்து பார்ப்பவர்கள்.


ஹரி போட்டர்.. நள்ளிரவு 12 மணிக்கு வரிசையில் நின்று வாங்குபவர்கள்; பிளே ஸ்ரேசன் நள்ளிரவே வாங்கி உடைப்பவர்கள்
போன்றோரை , அந்த விரிவுரையாளரின் கூற்றுடன் ஒப்பிடுவேன்....

சிலவிடயங்களில் இந்த அதீத ஈடுபாடெனும் கோமாளித் தனத்தை, இப்பேராசிரியரின் கூற்றை ஏற்றுத் தவிர்க்கிறேன்.

நீங்கள் எப்படி??


***படம்:என் வீட்டு மாடத்திற்கு வரும் நிலவு

Wednesday, August 01, 2007

சென்னைத் தமிழும்…. யாழ்ப்பாணத் தமிழும்....

மது தமிழ் இடத்துக்கிடம் எப்படியெல்லாம் பேசப்படுகிறது.
சில இடங்களில் அவை புரிந்துகொள்ளப்படுவதும் இல்லை.

அதிலும் ஓரளவு தூய தமிழ் பேசினால், இவர் என்ன?? மொழி பேசுகிறார் என விழி பிதுங்கும் நிலையும் உண்டு.


இந்தத் திரைப்படக் காட்சி நகைச்சுவையானாலும்,பேச்சுத் தமிழின் நிலையும், அரசியலின் போக்கும் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது.

மிக ரசிக்கும் படி அனைவரும் நடித்துள்ளார்கள்.
பார்த்திருப்பீர்கள் மீண்டும் பாருங்கள்.....




Tuesday, July 31, 2007

திருநங்கையாக பிரஞ்சுத் திரையில் வாழ்ந்து காட்டிய MICHEL SERRAULT

பிரஞ்சுத் திரைப்பட உலகில் 50 வருடங்களாக தன் திறம்பட்ட
நடிப்பால் ,குறிப்பாக நகைச்சுவையால் கோலோச்சிய சிறந்த குணசித்திர நடிகர் மிசல் செறோ (MICHEL SERRAULT) தன் 79 வயதில் நோய்வாய்ப்பட்டு 29-07-2007 மாலை காலமானார்.

பிரான்சில் புறுனொய் (BRUNOY) ல் 24-01-1928 ல் பிறந்து, 1954 ல் திரையுலகுக்கு வந்து பல தரப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்தபோதும். அவருக்கு ( CAGE AUX FOLLES) காச் ஓ பொலி என்ற படத்தில் ஏற்று நடித்த திருநங்கை பாத்திரமே மிகப் பெரிய புகழைத் தேடித் தந்ததுடன், சர்வதேச கீர்த்தியையும் ஏற்படுத்தியது மாத்திரமன்றி தொடர்ந்து 3 பாகமாக வெளிவந்து வெற்றி கண்டது.


நான் மிக மிக இரசித்த இவர் படமும் இந்த CAGE AUX FOLLES.



இவர் சிறந்த நடிப்பால், திருநங்கைகளே வெகுவாகப் பாராட்டியதாக கூறுவார்கள். அவ்வளவு இயல்பான மிக அவதானிப்பான நடிப்பு.



இவர் பிரான்சின் உயர் திரைப்பட விருதான சிசர்(CESAR) , 3 தடவைகள் பெற்றுள்ளார். மொத்தம் 135 முழுப்படங்கள், தொலைக்காட்சிப் படங்கள், மேடை நாடகமென ,சென்ற வருடம் வரை நடித்துக் கொண்டே இருந்தார்.
ஒப்பாரும் மிக்காரும் அற்றவர். பிரான்சின் திரையுலகுக்கு மிகப் பெரிய இழப்பே!


இன்று தொலைக்காட்சிச் செய்தியில் கூட அவர் திருநங்கை வேசத்தின் சில காட்சியைக் காட்டி... செய்தி வாசிப்பவர் ,இந்தக் கவலையான சூழலிலும் தன்னை மறந்து சிரிக்கும் படியானது.
உங்களில் யாருக்காவது இந்தத் திரைப்படம் கிடைத்தால் பார்க்கவும்.



Monday, July 30, 2007

அதி புத்திசாலித்தனம்....

கல உயிரினங்களும், உயிர் வாழ உரிய வித்தைகளைக் கற்றவையாக இயற்கையிலே அமையப் பெற்றன.


சிம்பன்சிக் குரங்னினம் மிகுந்த புத்திசாலித் தனமான விலங்காகக் கணிக்கப்பட்டு; மனிதனுக்கு மிகக் கிட்டிய உறவும்;புத்திசாலித் தனமும் உள்ளதாக ஆய்வாளர்கள்; கூறுகிறார்கள்.

எனினும் சிலவற்றின் அதீத நவீன உலகுக்கேற்ற வாழ்வியல் மாற்றப் புத்திசாலித் தனம் ஆச்சரியமானது.

சென்ற வாரம் ஜப்பானியக் காகங்கள் பற்றிய ஆய்வு சம்பந்தமான விலங்கியல் விவரணச்சித்திரம் ;பார்த்த போது.... காகத்துக்கு, புறாவை விட மூளை ;3 மடங்கு பெரியது என விளக்கி ;அதன் புத்திசாலித் தனம் பற்றியும்; இந்த நவீன உலகின் மக்களுடன் அது எப்படி ? தன் வாழ்க்கையை அனுசரித்துச் செல்கிறதென்பதனை விளக்கிய போது...

காகம் பற்றிய தேடுதல் செய்த போது...YOUTUBEல் இவற்றைக் கண்டேன்..
நீங்களும் பாருங்கள்....




Monday, July 23, 2007

இந்த இரண்டு துயரமும் கூறுவது ஒன்றே!!!


25-07-2007 யூனியர் விகடன் படித்தவர்கள் ....

1-நாவினால் சுட்டவனை தீயினால் சுட்டானா?...

2- ஐந்து ரூபாய்க்காக ஒரு தற்கொலை....


என்ற இந்தச் செய்திகளைப் படித்திருக்கலாம்!

இச் செய்தியின் நாயகன், நாயகிக்கு வயது, வெறும் பத்தும், பதினொன்றுமே.....

செய்தியைத் சுருக்கமாகத் தருகிறேன்!


முதலாவது செய்தியின் சிறுவன் 10 வயது, அவன் வயதையொத்த சிறுவன் ,இவன் தாயாரை கெட்டவார்த்தையால் திட்டி விட்டான் என்பதால், அவன் வீடுசென்று மண்ணெய் ஊற்றிக் கொழுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளான். எரிந்த சிறுவனே வாக்குமூலம் கொடுத்துள்ளான்।


இரண்டாவது செய்தியில் 11 வயதுச் சிறுமியின் தந்தை அவளுக்குப் 10 ரூபா கொடுக்கிறார், அவள் அக்கா அதில் 5 ரூபா தனக்கு எனக்கேட்க ,தாய் 5 ரூபாயை வாங்கிக் கொடுத்துவிட்டு வேலைக்குச் செல்கிறார்!, தன் காசைச் சகோதரிக்குக் கொடுத்தது தாங்காது, துப்பட்டாவைக் கழுத்தில் மாட்டி சுருக்கிட்டு, தொங்கி இறந்தே விட்டாள்।


இந்த இளம் குருத்துக்களின் மனதில் இவ்வளவு வைராக்கியமும், வன்மமும்
எப்படி? வந்தது...


இதற்கு பெரிய ஆய்வு செய்ய வேண்டியதில்லை.


இன்றைய திரைப்படங்களே....இந்தச் சீரழிவின் ஜீவநாடி....

இன்றைய பழிக்குப்பழி தீர்க்கும் கதையமைப்புடைய திரைப்படங்கள்,
எம் சிறார்களை மனநிலையை வெகுவாகப் பாதித்து விட்டது.


அன்றைய படங்களின் நாயகன் குற்றம் செய்தவரைப் பிடித்து,
பொலிசாரின் கைகளில் கொடுப்பது போல் காட்சியமைக்கப்பட்டது.
ஆனால் இன்று அண்ணாசாலையில் வைத்துச் சுட்டுத் தள்ளுவது
போல காட்சியமைத்து,சட்டத்தைக் கையில் எடு!எனச் சொல்லிக் கொடுக்கப்படுகிறது!।


இந்த வெளுத்தையெல்லாம் பாலேன எண்ணும் சிறுவர்கள் மனதில் விசத்தைத் தெளித்துவிட்டார்கள்,,,,

வயது வந்தவர்களே திரைப்பட நாயகன்களைக் கடவுளாகக் கருதிப் பாலாபிஷேகம் செய்யும் போது ,இந்த விபரமறியாப் பிஞ்சுகளின் நிலையென்ன?

கல்லாப்பெட்டி நிரப்பும் கூட்டம் ,சமுதாயம் பற்றிச் சிந்திக்காது.
நாம் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டது!


அடுத்து திரைப்படத்தின் தங்கை சின்னத்திரைக் கதைகளில்
சிறிய குடும்பச்சிக்கல்கலுக்குக் கூட நாயகி தற்கொலை என்பதை
விலாவாரியாகக் காட்டுகிறார்கள் இந்த தொலைக்காட்சியே
தஞ்சமெனக் கிடக்கும் தாய்மாருடன் இந்தச் சிறுமிகளும்
சேர்ந்து இவற்றைப் பார்த்து, மனமாசடைந்தவர்களாகி ,
சிறு மனச் சோர்வுக்குக் கூட இவற்றை நாடுவது,
சிந்தனைக்குரியது.


10 வயதில் கொலைசெய்யத் துணிவு வருவதும், தற்கொலை செய்யும் மனத்திடம் வருவதும்... வரவேற்கக் கூடியதல்ல.

நாம் நமது எதிர்கால சந்ததி பற்றிச் சிந்திக்க வேண்டிய காலம் வந்து விட்டதென்பதன் அறிகுறியே இது.....

இவர்கள் இளம் மனதில் இனியாவது... பொறுமை, தர்மம்,ஞாயம்,
மன்னிக்கும் மனப்பாங்கு, பழிவாங்கும் எண்ணமின்மை போன்ற சமூகப் பண்புகளை வளர்ப்போமா??

அத்துடன் திரைப்படம், தொலைக் காட்சி என்பது தவிர்த்து...வாசித்தல், கேட்டல் என்ற விடயங்களையும் நாமும் அவர்களுடன் சேர்ந்து செய்யப் பழகுவோமா??

பாடசாலைகளிலும்...

உயிரின் பெறுமதியை உணரப் போதித்தல்

பழிக்குப்பழியால் ஏற்படும் துன்பம் அவமானம் போன்றவற்றை விளக்குதல்।

தற்கொலையால் குடும்ப அங்கத்தினர் படும் வாழ்நாள் வேதனையைப் புரிய வைத்தல்।

குடும்பத்திலுள்ள அனைவருமே ,சிறியோர் மனதைப்பாதிக்கக் கூடிய தொலைக்காட்சித் தொடர்களை முற்றாகப் பார்ப்பதைத் தவிர்த்து,
நம் சிறார்களைக் காத்து, நல்ல எதிர்காலச் சந்ததியை உருவாக்குவோமா
?

Wednesday, July 18, 2007

புகைப்படப் போட்டி!!!!

'' புகைப்படப் போட்டி'' அறிவித்தலில்...வந்த பலர் அனுப்பிய படங்களைப் பார்த்த போது , பரிசு கிடைக்காதென்பது தெளிவாகத் தெரிந்த போதும், பதிவு போட்டும் அதிக நாளாவதால் ,இதையிடுகிறேன்।

இந்தக் கலையெல்லாம் ,நமக்கு எதுவும் புரிவதில்லை। ஏதோ தன்னியக்க கருவிகள் வந்தபின் நாமும் ஏதோ பிடிக்கிறோம்।

அவ்வளவுதான்.....




அட....தமிழ்மணத்தில்.....புகைப்படக் கலைப் போட்டியாமே!!!!!!








தேனுண்ணும் வண்டு.........